சென்னை: தனியார் நிறுவனத்தில் மேற்பார்வையாளர் பணிக்கு நேர்முக தேர்வில் கலந்துகொள்ளும் படி, 2017ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வைத்தியநாதனுக்கு அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டது. இதுதொடர்பாக, தாமாக முன் வந்து சென்னை உயர் நீதிமன்றம் வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. இந்த வழக்கை நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் வைத்தியநாதன் அடங்கிய அமர்வு விசாரித்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் சிபிசிஐடி சைபர் க்ரைம் குற்றப்பிரிவு விசாரணை நடத்தினர். விசாரணை குறித்து சிபிசிஐடி போலீசார் அறிக்கை தாக்கல் செய்தனர். அதில், பாரதிராஜா என்ற பொறியியல் பட்டதாரி தன்னிடம் பணம் பறிக்க முயற்சித்த போலி நிறுவனத்திற்கு நீதிபதியின் முகவரி மற்றும் மொபைல் எண்ணையும் அளித்துள்ளார். மேலும், 80 பேரிடம் வேலை வாங்கி தருவதாக கூறி 9 லட்சத்து 28 ஆயிரத்து 850 ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக சித்ரா என்ற பெண் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில் தொடர்புடைய பிரதாப் மற்றும் ராஜ் ஆகியோர் தலைமறைவாக உள்ளனர். இந்தவழக்கை விசாரித்த நீதிபதிகள், கொரோனா ஊரடங்கு பாதிப்பை சாதகமாக பயன்படுத்தி சமீபகாலமாக போலி வேலைவாய்ப்பு நிறுவனங்கள் இளைஞர்களிடம் மோசடி செய்துள்ளன. சென்னை உயர் நீதிமன்ற வளாகத்திலையே ஒருவர் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. வேலை வாங்கி தருவதாக கூறி நடைபெறும் மோசடி மற்றும் வேலைவாய்ப்பின்மை பிரச்னையை சமாளிக்க மத்திய, மாநில அரசுகள் இளைஞர்களுக்கு சுய வேலைவாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். இந்த மோசடி குறித்த விசாரணையில் சிபிசிஐடி போலீசார் சுணக்கம் காட்டுவதாக தெரிந்தால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளலாம் என்று அறிவுறுத்தி விசாரணையை அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்திற்கு தள்ளிவைத்தனர்….
The post போலி வேலைவாய்ப்பு நிறுவனங்களிடம் ஏமாறுவதை தடுக்க இளைஞர்களுக்கு சுயவேலைவாய்ப்பை அரசுகள் உருவாக்க வேண்டும்: சென்னை உயர் நீதிமன்றம் ஆலோசனை appeared first on Dinakaran.