×

காதல் நிலையங்களாக மாறிய காவல் நிலையங்கள்: 12 காதல் ஜோடிகள் ஒரே நாளில் தஞ்சம்..! போலீசார் திகைப்பு

பவானி: ஈரோடு மாவட்டம் பவானி, அந்தியூர் காவல் நிலையங்களில் நேற்று ஒரே நாளில் 12 காதல் ஜோடிகள் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர். ஆடி முடிந்து ஆவணி மாதம் தொடங்கி 5 நாட்கள் ஆகிறது. ஆவணி மாதத்தின் முகூர்த்த நாளான நேற்று திருமணங்கள் கொரோனா விதிமுறைகளை பின்பற்றி நடந்தன. இந்நிலையில், நேற்று பிற்பகல் ஈரோடு மாவட்டம் பவானி அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு அடுத்தடுத்து 7 காதல் ஜோடிகள், தாங்கள் திருமணம் செய்து கொண்டதாகவும் பெற்றோர், உறவினர்கள் எதிர்ப்பு தெரிவிக்க வாய்ப்பு உள்ளதாக கூறி தஞ்சம் அடைந்தனர். பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடிகள் தொடர்ந்து வந்ததால், மகளிர் போலீசார் அதிர்ச்சியும் திகைப்பும் அடைந்தனர். இதேபோல், 2 காதல் ஜோடிகள் பவானி போலீசில் பாதுகாப்பு கேட்டு மனு அளித்தனர். இதையடுத்து போலீஸ் விசாரணையில், காதல் ஜோடிகள் அனைத்தும் மேஜர் என்பது தெரியவந்தது. இதனால், மகளிர் காவல் நிலையத்தில் காதலர்களின் பெற்றோர்களுக்கு தகவல் தெரிவித்து வரவழைத்தனர். இதில், 3 காதல் ஜோடிகளின் திருமணத்தை இருதரப்பிலும் பெற்றோர்கள் ஏற்றுக்கொண்டனர். 4 ஜோடிகளின் திருமணத்தை பெண்ணின் பெற்றோர் ஏற்றுக் கொள்ளவில்லை. இதனால், காதலன் மற்றும் அவரது உறவினர்களுடன் அனுப்பி வைத்தனர். பவானி காவல்நிலையத்தில் 2 திருமண ஜோடிகளும் மேஜர் என்பதால், காதலர்கள் விருப்படி வாழ அவர்களின் உறவினர்களுடன் அனுப்பப்பட்டனர். இதேபோன்று, அந்தியூர் காவல் நிலையத்தில் நேற்று அடுத்தடுத்து 3 காதல் ஜோடிகள் தஞ்சமடைந்தன. அவர்களின் உறவினர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்திய போலீசார், காதலர்கள் மேஜர் என்பதால், அவர்களின் விருப்பப்படி வாழ அனுப்பி வைக்கப்பட்டனர். அடுத்தடுத்து காதல் ஜோடிகள் தஞ்சமடைந்ததால் பவானி, அந்தியூர் பகுதிகளில் உள்ள காவல்நிலையங்களில் பரபரப்பு நிலவியது….

The post காதல் நிலையங்களாக மாறிய காவல் நிலையங்கள்: 12 காதல் ஜோடிகள் ஒரே நாளில் தஞ்சம்..! போலீசார் திகைப்பு appeared first on Dinakaran.

Tags : Bhavani ,Antheur ,Erode district ,Dinakaran ,
× RELATED பவானி அருகே ஸ்கூட்டர் மீது பஸ் மோதி கல்லூரி மாணவர் பலி