×

ரூ.2 ஆயிரம் கோடியில் 83.92 லட்சம் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு மகளிர் சுயஉதவிகுழுக்களுக்கு ரூ.20 ஆயிரம் கோடி கடன்

* 100 நாள் திட்டம் 150 நாட்களாக உயர்த்தப்படும்* அடுத்த 5 ஆண்டுகளில் 8 லட்சம் குடும்பங்களுக்கு சொந்த வீடு* அண்ணா மறுமலர்ச்சி திட்டம் மீண்டும் தொடங்கப்படும்* நமக்கு நாமே திட்டம் மீண்டும் அறிமுகம்* நிதித்துறை அமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் தகவல்சென்னை: தமிழ்நாட்டில் உள்ள சுய உதவிக்குழுக்களுக்கு வங்கிகளின் உதவியுடன் ரூ.5,500 கோடி சிறப்பு கோவிட் கடன் உட்பட ரூ.20 ஆயிரம் கோடி கடன் உறுதி செய்யப்படும் என்று நிதித்துறை அமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார். இதுகுறித்து சட்டப்பேரவையில் நிதித்துறை அமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்த 2021-22ம் நிதியாண்டுக்கான தமிழக அரசின் பட்ஜெட்டில் கூறியிருப்பதாவது:* மாநிலத்திலுள்ள அனைத்து 79,395 குக்கிராமங்களுக்கும் ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் ஒரு நபருக்கு 55 லிட்டர் தரமான குடிநீர் வழங்க வழிவகை செய்யப்படும்.  கிராமப்புறங்களில் அமைந்துள்ள 1.27 கோடி குடும்பங்களுக்கும் வீட்டு குடிநீர் இணைப்புகள் வழங்க வழிவகை செய்யப்படும்.  தற்போது வீட்டிற்கான குடிநீர் இணைப்பு இல்லாத 83.92 லட்சம் குடும்பங்களுக்கும் 2024ம் ஆண்டு மார்ச் இறுதிக்குள்ளாக குடிநீர் இணைப்பு வசதிகள் வழங்க வழிவகை செய்யப்படும். இந்த நோக்கத்தை நிறைவேற்ற ரூ.2 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் ஜல் ஜீவன் இயக்கம் செயல்படுத்தப்படும்.* கலைஞர் ஆட்சியில்தான், கிராமப்புற ஏழைகளுக்கு கான்கிரீட் கூரை வீடுகளை வழங்கும் திட்டம் இந்தியாவில் முன்மாதிரியாக செயல்படுத்தப்பட்டது. 2020-21ல், பிரதம மந்திரி வீட்டு வசதித் (கிராமம்) திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் புதிய வீடுகளைக் கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்பது வருத்தத்திற்கு உரியது.  2016-17 முதல் 2019-20 வரையிலான காலகட்டத்தில் ஏற்கனவே கட்டுமானத்திற்காக எடுத்துக் கொள்ளப்பட்ட 2,14,629 வீடுகள் இன்றும் நிறைவு செய்யப்பட வேண்டியுள்ளன. முழுமையடையாத அனைத்து வீடுகளும் விரைந்து முடிக்கப்படுவதை இந்த அரசு உறுதி செய்வதுடன், 2021-22ம் ஆண்டில் மொத்தம் ரூ.8,017.41 கோடி செலவில், மேலும் 2,89,877 வீடுகள் கட்டப்படும்.கிராமப்புறங்களில் தற்போது வீடு இல்லாத 8,03,924 குடும்பங்களுக்கும் அடுத்த 5 ஆண்டுகளில் வீடு வழங்கப்படுவதை இந்த அரசு உறுதி செய்யும். தற்போதுள்ள மேற்கூரைக்கான செலவான ரூ.50 ஆயிரம் உடன், கூடுதலாக மாநில அரசின் தரப்பிலிருந்து ரூ.70 ஆயிரம் வழங்கப்படுவதால், ஒரு வீட்டிற்கான அரசு மானியம் ரூ.2.76 லட்சம் ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மிகவும் ஏழை, எளிய பயனாளர்களுக்கு விரைவாக, விலைக் குறைவாக வீடுகள் கட்டுவதற்காக, நவீன, விலை குறைவான கட்டுமான தொழில்நுட்பங்களை இந்த அரசு ஊக்குவிக்கும். 2021-22ம் ஆண்டிற்கான திருத்த வரவு செலவுத்திட்ட மதிப்பீட்டில் கிராமப்புற வீட்டு வசதித்  திட்டத்தில், ரூ.3,548 கோடி வழங்கப்பட்டுள்ளது.* கிராமப்புற மக்களின் நலனை மேம்படுத்த சுற்றுப்புற சுகாதாரம் மிகவும் முக்கியமானது. 2021-22ல், 44,855 தனிநபர் வீட்டுக் கழிப்பறைகளை அமைக்கவும், 1,028 சமூக சுகாதார வளாகங்களையும் 97 பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை மையங்களையும் அமைக்க மொத்தம் ரூ.400 கோடி செலவில், ‘தூய்மை பாரத இயக்கம்’ செயல்படுத்தப்படும். இது தவிர, 1,622 கிராம ஊராட்சிகளில் திடக்கழிவு மேலாண்மை சேவைகள் வழங்கப்படும்.  * 2020-21 காலகட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்ட 4,67,567 பணிகளில் 2,65,016 பணிகள் நிறைவு செய்யப்பட வேண்டியுள்ளன. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்பு சட்டத்தை அமல்படுத்துவதில் பொருளாதார ஆலோசனைக் குழுவின் உறுப்பினரான ஜான் டிரேஸ் முக்கிய பங்கை வகித்தார். இந்த அரசு இத்திட்டத்திற்கு கூடுதல் உந்துதலை அளிப்பதுடன், மொத்த ஊதிய செலவு ரூ.6825 கோடியும், பொருட்செலவாக ரூ.3,200 கோடியும் ஒதுக்கீடு செய்து, நடப்பாண்டில் 25 கோடி மனித உழைப்பு நாட்கள் அளவிலான வேலைவாய்ப்பை உறுதி செய்யும். மேலும், இத்திட்டத்தில் மனித உழைப்பு நாட்களை 100லிருந்து 150 ஆக உயர்த்தவும், ஊதியத்தினை நாளொன்றுக்கு ரூ.273ல் இருந்து ரூ.300 ஆக உயர்த்தவும் இந்த அரசு ஒன்றிய அரசை வலியுறுத்தும்.* சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்திற்கான நிதி, நடப்பு ஆண்டிலிருந்து ஒரு தொகுதிக்கு ரூ.3 கோடி ஆக மீண்டும் அளிக்கப்படும்.* இந்த அரசு, 2021-22ல் ரூ.1,200 கோடியில் அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தைத் தொடங்கவுள்ளது.  இத்திட்டம், குக்கிராம அளவில் நிலவும் அடிப்படை உட்கட்டமைப்பிற்கான இடைவெளிகளை நிறைவு செய்வதை உறுதி செய்யும்.* மறைந்த முதல்வர் கலைஞர் அறிமுகப்படுத்திய மிகப் புகழ்பெற்ற திட்டம் ‘நமக்கு நாமே’ திட்டம். இத்திட்டம், உள்ளூர் சமூகங்களுடன் இணைந்து உள்ளூரின் முக்கியமானப் பணிகளை மேற்கொள்ள மீண்டும் அறிமுகப்படுத்தப்படும். 2021-22ம் ஆண்டில் இத்திட்டத்திற்காக ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  * தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதாரத்  திட்டம் புதுப்பிக்கப்பட்டு 36,218 சுய உதவிக்குழுக்கள் பயன்பெறும் வகையில் ரூ.809.79 கோடி செலவில் 2021-22ல் செயல்படுத்தப்படும். நடப்பு ஆண்டில் தமிழ்நாட்டில் உள்ள சுய உதவிக்குழுக்களுக்கு வங்கிகளின் உதவியுடன் ரூ.5,500 கோடி சிறப்பு கோவிட் கடன் உட்பட ரூ.20,000 கோடி கடன் உறுதிசெய்யப்படும். தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்டம் சீரமைக்கப்பட்டு 2021-22ல் மொத்தம் ரூ.212.69 கோடி செலவில் செயல்படுத்தப்படும். …

The post ரூ.2 ஆயிரம் கோடியில் 83.92 லட்சம் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு மகளிர் சுயஉதவிகுழுக்களுக்கு ரூ.20 ஆயிரம் கோடி கடன் appeared first on Dinakaran.

Tags :
× RELATED தாம்பரம் மாநகராட்சி பகுதி...