நெல்லை : நெல்லை ராமையன்பட்டி இலந்தைகுளத்தை ஆக்கிரமித்துள்ள அமலைச் செடிகளை அகற்றுமாறு கோரிக்கை விடுத்துள்ள விவசாயிகள், இங்கு குப்பைகள் கொட்டுவதையும் தடுக்குமாறு வலியுறுத்தி உள்ளனர். நெல்லை ராமையன்பட்டியில் இருந்து கண்டியப்பேரிக்கு திரும்பும் சாலையை ஒட்டியுள்ள இலந்தைகுளத்தில் அமலைச் செடிகள் அதிகளவு ஆக்கிரமித்து இருப்பதோடு, அக்குளத்தின் ஓரங்களில் பிளாஸ்டிக் உள்ளிட்ட பல்வேறு கழிவுகள் அதிகளவு கொட்டப்பட்டுள்ளன. இதனால் விவசாய பாசனத்துக்கு தேவையான தண்ணீர் சீராக செல்வது தடைபடுவதோடு, நீரோட்டத்தில் பாதிப்பு ஏற்படுகிறது. கண்டியப்பேரி குளத்தில் இருந்து இலந்தைகுளத்துக்கு வரும் தண்ணீர் அதன் பின்னர் தச்சநல்லூர் காவல் நிலையம் பின்புறம் உள்ள சீனியப்பன்குளத்துக்கு செல்கிறது. இலந்தைகுளத்தில் இருந்து நீரோடைகள் மூலம் செல்லும் தண்ணீர் கண்டியப்பேரி மற்றும் ராமையன்பட்டி பகுதிகளில் உள்ள விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுவதற்கு உதவுகின்றன. எனவே, இலந்தைகுளத்தை ஆக்கிரமித்துள்ள அமலைச் செடிகளை அகற்றுவதோடு இங்கு பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவுப்பொருட்கள் மற்றும் குப்பைகள் கொட்டுவதை தடுத்துநிறுத்த வேண்டும். மேலும் கண்டியப்பேரி, ராமையன்பட்டி பகுதிகளுக்கு செல்லும் நீரோடைகளை முழுமையாக தூர்வாரி இப்பகுதி விளை நிலங்களுக்கு தேவையான தண்ணீர் சீராக கிடைத்திட பொதுப்பணித்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். …
The post அமலை செடிகள் ஆக்கிரமிப்பில் ராமையன்பட்டி இலந்தைகுளம் appeared first on Dinakaran.