×

சாமியை கைகழுவி தாமரை பக்கம் தாவிய மூன்று மக்கள் பிரதிநிதிகளை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘நர்சரியில் பாடம் எடுக்க வேண்டியவர்… நடுநிலைப்பள்ளியில் பாடம் எடுத்தால் எப்படி இருக்கும்… நினைத்து பார்க்கவே குலைநடுங்குது…’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘நாகர்கோவில் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட பிறகும் ஓராண்டாக மாநகர் நல அலுவலர் நியமிக்கப்படவில்லை. இதற்கு இலை கட்சியின் சர்வ வல்லமை படைத்தவராக இருந்த சுந்தரமானவர்தானாம். இவரது ஆதரவு பெற்றவர் என்பதால் ‘கின்’ என்பவர், தொடர்ந்து மாநகர் நல அலுவலர் பொறுப்பில் அவரே நீடித்து வருகிறாராம். தற்போது கலந்தாய்வு மூலம் புதிய அதிகாரி ஒருவர் நாகர்கோவில் மாநகராட்சி மாநகர் நல அலுவலராக நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இருந்தபோதும் ‘கின்’ அந்த பதவியை தக்க வைத்துக்கொள்ள கடுமையாக காய்களை நகர்த்தி வர்றாராம். அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றுகின்ற மருத்துவ அலுவலர் நிலையில் உள்ளவர் எப்படி மாநகராட்சி நல அலுவலராக இத்தனை ஆண்டுகள் பணியாற்றினார் என்ற கேள்வியும் கூடவே எழுப்புறாங்க. உதாரணமாக நர்சரி டீச்சர் நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு எப்படி பாடம் எடுக்க முடியும் என்ற கேள்வி கேட்கிறாங்க. இதற்கு எல்லாம் முன்னாள் அமைச்சரின் ஆசிர்வாதம்  தானாம்… இதற்கு முடிவு கட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தயாராகி வர்றாங்களாம்…’’ என்றார் விக்கியானந்தா.‘‘கழிவறையில் கூட கமிஷன் பார்த்த அதிகாரிகளை என்னத்த சொல்றது…’’ என்று முகத்தை அஷ்ட கோணலாக வைத்துக் கொண்டு கேட்டார் பீட்டர் மாமா.‘‘ஹனிபீ மாவட்டத்தில், ஊராட்சி ஒன்றியங்களில் கடந்த ஆட்சி காலத்தில் தனிநபர் கழிப்பறை கட்டியதில் பல கோடி ரூபாய் முறைகேடு நடந்திருக்காம். இம்மாவட்டத்தில் இலை ஆட்சிக்காலத்தில் ஊராட்சி ஒன்றியங்களில் தனிநபர்  கழிப்பறை கட்ட ஒன்றிய அரசு வீட்டுக்கு தலா ரூ.12 ஆயிரம் மானியம் கொடுத்தாங்க. இதன்படி, தேனி மாவட்டத்தில் பல ஆயிரம் வீடுகளில் கட்டியதாக கணக்கு உள்ளது. அதாவது, ஊராட்சி ஒன்றிய கட்டிடப்பணிகளை மேற்பார்வை செய்யும் அதிகாரிகள், கழிப்பறை கட்டியதாக கணக்கு காண்பித்து பல கோடி ரூபாய் முறைகேடு செய்துள்ளனராம். இதுகுறித்து கவனத்துக்கு வந்ததையடுத்து, கலெக்டர் அறிவுறுத்தலின்படி, ஹனிபி மாவட்டத்தில் ஒரு ஊராட்சியில் ஆய்வு செய்தபோது, 25 வீடுகளில் 3 வீடுகளில் மட்டுமே கழிப்பறை கட்டியதும், பிற வீடுகளில் ஏற்கனவே கழிப்பறை உள்ள வீடுகளில் கழிப்பறைக்கு சுண்ணாம்பு பூசி வீட்டு உரிமையாளருக்கு ரு.2 ஆயிரம் மட்டும் கொடுத்து விட்டு மீத பணத்தை அதிகாரிகள் முறைகேடு செய்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த அறிக்கையையும் விசாரணை அதிகாரி கலெக்டரிடம் ஒப்படைக்க உள்ளாராம். இந்த ஒரு ஆய்வு ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல இருப்பதாக சொல்றாங்க.. மாவட்டம் முழுவதும் இதேபோல நடந்து இருக்கலாம் என்று அதிகார வட்டாரத்தில் விவாத பொருளாக மாறி இருக்காம்…’’ என்றார் விக்கியானந்தா.‘‘சாமியை கைவிட்டுட்டாரு… இனி தாமரை பக்கம் போக முடிவு செய்துள்ள சாமியின் பக்தர்களை பற்றிச் சொல்லுங்க..’’ என்றார் பீட்டர் மாமா.‘‘கடந்த தேர்தலில் புல்லட்சாமி கட்சியில் சீட்டு கிடைக்காத இருவர், தாமரை கூட்டணியை எதிர்த்து வெளியேறிய ஒருவரும் என 3 பேர் சுயேட்சையாக போட்டியிட்டு வென்றனர். இவர்கள் 3 பேரும் முதலில் புல்லட்சாமியை ஆதரித்து வந்தனர். மாநில வளர்ச்சிக்காக தாமரையுடன் இணைந்து செயல்படுவோம் என்ற சாமியின் அறிவிப்பு, 3 பேருக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாம்.  இருப்பினும் இதனை வெளிக்காட்டிக்கொள்ளவில்லை. புல்லட்சாமி தொடர்ந்து தாமரையுடன் நெருக்கம் காட்டி வருகிறார். இதனால் கடுப்பான மூன்று பேரும் சாமியின் ஆதரவு  நிலைப்பாட்டில் இருந்து வேறு பாதையில் பயணிக்க ஆரம்பித்துவிட்டார்களாம். சாமியின் பிறந்தநாளை ஆரவாரமாக கொண்டாடும் 3 பேரும், இந்த முறை எட்டிக்கூட பார்க்கவில்லையாம். சாமியை நம்புவதற்கு பதிலாக தாமரையை நம்பி பயணிக்கலாம் என்ற முடிவில் அமைச்சர்களிடம் நெருக்கம் காட்டுகிறார்களாம். ராஜய்சபா தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தாமரையை ஆதரித்து காரியத்தை சாதிக்கலாம் என்ற முடிவுக்கு வந்திருக்கிறார்களாம். தங்களை கண்டுகொள்ளாத சாமிக்கு வேறு வகையில் எதிர்ப்பை காட்டுகிறார்களாம். இதனால புல்லட்சாமி தரப்பு ஆட்டம் கண்டு இருக்காம்…’’ என்றார் விக்கியானந்தா.‘‘ சொந்த கட்சியை சேர்ந்தவர்களே குழி பறிக்கிறாங்களேன்னு இலை கட்சியை சேர்ந்த கூட்டுறவு வங்கி தலைவர் வேதனையில் இருக்கிறாராமே, அப்படியா…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘மலைக்கோட்டை மாவட்டத்தில் நகர கூட்டுறவு வங்கி தலைவராக இலை கட்சியின் பேரவை செயலாளராக கடைசி எழுத்தான நாதன் இருந்தார். சட்டமன்ற தேர்தலில் மேற்கு தொகுதியில் போட்டியிட்டதால் அந்த பதவியை ராஜினாமா செய்தார். இதனால் துணை தலைவராக இருந்த இலைகட்சி மாநகர் மாவட்ட மகளிரணி இணை செயலாளர் பெருமாளானவர் பொறுப்பு  தலைவரானாராம். சட்டமன்ற தேர்தல் முடிந்து கூட்டுறவு சங்கங்கள் கலைக்கப்படும் என தகவல் வந்ததால் தலைவர் பதவியை இலை கட்சியினர் கண்டு கொள்ளவில்லையாம். ஆனால், இப்போதுள்ள கூட்டுறவு சங்க நிர்வாகம் கலைக்கப்படாது என அரசு தரப்பில் ஐகோர்ட்டில் பிரமாண தாக்கல் செய்ததால் கூட்டுறவு சங்க பொறுப்புகளில் உள்ள இலைகட்சியினர் உற்சாகமானார்களாம். பெருமாளானவரிடம் இருந்து பொறுப்பு தலைவர் பதவியை பறிக்க இலைகட்சியை சேர்ந்த கூட்டுறவு வங்கியின் 4 இயக்குனர்களே நேரிடையாக களமிறங்கியுள்ளார்களாம். சொந்த கட்சிகாரர்களே தனக்கு எதிராக நம்பிக்கை இல்லா  தீர்மானம் கொண்டு வந்ததால் பெருமாளானவர் வேதனையில் இருக்கிறார்களாம்…’’ என்றார் விக்கியானந்தா.  …

The post சாமியை கைகழுவி தாமரை பக்கம் தாவிய மூன்று மக்கள் பிரதிநிதிகளை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.

Tags : Sami ,Yananda ,Uncle ,Peter ,Sammy ,
× RELATED கோயில் வரவு, செலவு கணக்கு கேட்டதால்...