பட்டிவீரன்பட்டி : அய்யம்பாளையம் மருதாநதி அணையில் 2 மாதங்களாக முழுகொள்ளளவு நீடிப்பதால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். பட்டிவீரன்பட்டி அருகேயுள்ளது அய்யம்பாளையம் மருதாநதி அணை. இதன் மொத்த உயரம் 74 அடியாகும். இங்கு நீர்மட்டம் கடந்த 2 மாதங்களாக முழு கொள்ளளவுடன் உள்ளது. நீர்பிடிப்பு பகுதிகளான தாண்டிக்டி, பண்ணைக்காடு, பாச்சலூர், கடுகுதடி மற்றும் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர் மழை காரணமாக அணை நீர்மட்டம் தொடர்ந்து முழு கொள்ளளவுடன் உள்ளது. தற்போது அணைக்கு 20 கனஅடி வீதம் தண்ணீர் வரத்து உள்ளது. மொத்த உயரம் 74 அடி என்றாலும் 72 அடி வரை மட்டுமே தண்ணீர் தேக்க முடியும். அணையின் பாதுகாப்பு கருதி, 20 கனஅடி தண்ணீர் பிரதான வாய்க்காலில் திறந்து விடப்பட்டுள்ளது. அணையில் தற்போது 190 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பில் உள்ளது. இந்த அணை தண்ணீர் மூலமாக நிலக்கோட்டை, ஆத்தூர் தாலுகாக்களை சேர்ந்த சுமார் 7 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. மேலும் இந்த அணை மூலமாக பட்டிவீரன்பட்டி, அய்யம்பாளையம், சேவுகம்பட்டி பேரூராட்சிகளுக்கும், சித்தரேவு, அய்யன்கோட்டை, தேவரப்பன்பட்டி ஊராட்சிகளுக்கும் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. அணை தொடர்ந்து முழு கொள்ளளவுடன் உள்ளதால், சுற்றியுள்ள சுமார் 20 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் உள்ள விவசாய தோட்டங்களில் கடந்த சில ஆண்டுகளாக நிலவி வந்த தண்ணீர் பிரச்னை தற்போது தீர்ந்துள்ளது. இதனால் விவசாயிகள், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியதாவது, ‘அணை கட்டிய நாளிலிருந்து இதுவரை இவ்வளவு நாட்கள் முழு கொள்ளளவுடன் தண்ணீர் இருப்பு இருந்ததில்லை. முழுகொள்ளளவில் உள்ளதால், அணையின் நிலவரத்தை ெதாடர்ந்து கண்காணித்து வருகிறோம்’ என்றனர். …
The post மருதாநதி அணையில் 2 மாதமாக நீடிக்கும் முழுகொள்ளளவு-விவசாயிகள் மகிழ்ச்சி appeared first on Dinakaran.