சென்னை: ஆர்.எஸ்.கார்த்திக், லிங்கா, கல்பிகா, மோனிஷா முரளி, வினோதினி வைத்தியநாதன், ஜானகி சுரேஷ், மேக் மணி, சிவம், டென்னிஸ் இம்மானுவேல் நடித்துள்ள படம், ‘பரோல்’. ட்ரிப்பர் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் ச.மதுசூதனன் தயாரித்துள்ளார். மகேஷ் திருநாவுக்கரசு ஒளிப்பதிவு செய்ய, ராஜ்குமார் அமல் இசை அமைத்துள்ளார். துவாரக் ராஜா இயக்கியுள்ளார். அவர் கூறுகையில், ‘ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒரு கதை இருக்கும். ஆனால், ஒரு குடும்பத்துக்குப் பின்னால் இருக்கும் சொல்லப்படாத, சொல்ல முடியாத ஒரு கதை இது. தாய் இறந்த காரணத்தால், தனக்குப் பிடிக்காத அண்ணனை பரோலில் எடுக்கிறான் தம்பி. அவனுக்கும், அவன் அண்ணனுக்கும் இடையிலுள்ள பிரச்னைகளும், அதைச்சுற்றி நடக்கும் பரபரப்பான சம்பவங்களும் படமாக்கப்பட்டுள்ளது. டிரைலரில் மட்டுமின்றி, படத்திலும் விஜய் சேதுபதி வாய்ஸ்ஓவர் கொடுத்துள்ளார். வடசென்னை ஏரியாவில் நடக்கும் கதை என்பதால், சென்சாரில் ‘ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளனர். ஆர்.எஸ்.கார்த்திக், லிங்கா மற்றும் படக்குழுவினர், சென்னையிலுள்ள முக்கிய பகுதிகளுக்கு நேரில் சென்று நோட்டீஸ் வழங்கி புரமோஷன் செய்து வருகின்றனர்’ என்றார். வரும் 11ம் தேதி படம் திரைக்கு வருகிறது.