ஐதராபாத்: மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ள நடிகை சமந்தா, நாட்கள் கடினமாக நகர்வதாக வருத்தப்பட்டுள்ளார். மயோசிடிஸ் எனும் தசை பாதிப்பு நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார் சமந்தா. நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து இந்த நோயால் அடிக்கடி பலவீனம் அடைவார்கள். இந்நிலையில் தனது நடிப்பில் வெளியாக உள்ள யசோதா படத்துக்காக பேட்டி தந்த சமந்தா கூறியது: திடீரென இந்த நோயால் பாதிக்கப்பட்டதால், கலக்கம் அடைந்தேன். நாட்கள் கடினமாகவே நகர்ந்தன. ஒரு வகையில் தளர்ந்து போனேன் என்றே சொல்லலாம். இருந்தாலும் போராட்டத்தை விடவில்லை.
தொடர்ந்து போராடினேன். யசோதா படத்தின் புரமோஷன் நிகழ்வுகளுக்கு கூட வரமுடியுமா என்ற சந்தேகம் இருந்தது. அதையெல்லாம் மீறி இப்போது பேட்டி கொடுத்துக் கொண்டிருக்கிறேன். இதற்கெல்லாம் இறைவனுக்கு நன்றி சொல்கிறேன். அதே சமயம், எனது நிலையை புரிந்து எனக்காக பிரார்த்தனை செய்த ரசிகர்களை மறக்க மாட்டேன். திரையுலகிலிருந்து எனக்கு ஆறுதல் சொன்ன அத்தனை பேருக்கும் நன்றி சொல்லிக் கொள்கிறேன். தற்போது தமிழ், தெலுங்கு படங்களில் மட்டுமின்றி இந்தியிலும் கவனம் செலுத்த தொடங்கியுள்ளேன். அதனால் என்னை நானே மீட்டுக் கொண்டு வர வேண்டிய கடினமான காரியத்தை செய்துகொண்டிருக்கிறேன். இவ்வாறு சமந்தா கூறினார்.