×

13 வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் மலையாளத்தில் நடிக்கிறார் ஜோதிகா

திருவனந்தபுரம்: தமிழ் முன்னணி நடிகை களில் ஒருவரான ஜோதிகா, நடிகர் சூர்யாவை காதல் திருமணம் செய்துகொண்ட பிறகு நடிப்புக்கு இடைவெளி விட்டிருந்தார். தியா என்ற மகள், தேவ் என்ற மகனுக்கு தாயான அவர், சில வருட இடைவெளிக்குப் பிறகு ‘36 வயதினிலே’ என்ற படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்தார். இதையடுத்து ‘மகளிர் மட்டும்’, ‘நாச்சியார்’, ‘செக்கச் சிவந்த வானம்’, ‘காற்றின் மொழி’, ‘ராட்சசி’, ‘ஜாக்பாட்’, ‘தம்பி’, ‘பொன்மகள் வந்தாள்’, ‘உடன் பிறப்பே’ ஆகிய படங்களில், ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொண்ட கதைகளை தேர்வு செய்து நடித்தார். தற்போது 13 வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் அவர் மலையாளத்தில் நடிக்கிறார்.

‘காதல்-தி கோர்’ என்று பெயரிடப்பட்ட இதில் மம்மூட்டி ஹீரோவாக நடிக்கிறார். கடைசியாக 2009ல் வெளியான ‘சீதா கல்யாணம்’ என்ற படத்தில் ஜெயராம் ஜோடியாக, அதிக முக்கியத்துவமுள்ள ரோலில் ஜோதிகா நடித்திருந்தார்.
இந்த ஆண்டில் மம்மூட்டி நடிப்பில் ‘பீஷ்ம பர்வம்’, ‘சிபிஐ 5’, ‘புழு’, ‘ரோர்சாக்’ ஆகிய மலையாளப் படங்கள் வெளியானது. தற்போது ‘கிறிஸ்டோபர்’, ‘நண்பகல் நேரத்து மயக்கம்’ உள்பட சில படங்களில் அவர் நடித்து வருகிறார். இந்நிலையில், அவருடன் ஜோதிகா நடித்து வரும் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது. மம்முட்டி கம்பெனி தயாரிக்கும் இப்படத்தை ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ படத்தின் இயக்குனர் ஜியோ பேபி இயக்குகிறார். கடந்த 20ம் தேதி முதல் கேரளப் பகுதிகளில் படப்பிடிப்பு நடந்து வருவதாக மம்மூட்டி தெரிவித்தார்.

Tags : Jodika ,Malayalam ,
× RELATED திரையரங்கில் ஏசி வேலை செய்யாததால் ரசிகர்கள் அதிருப்தி