* தமிழக பாஜ தலைவர் எல்.முருகன் இணை அமைச்சர் ஆனார்* 36 பேர் புதுமுகங்கள்; 7 பேர் பெண்கள்புதுடெல்லி: பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அமைச்சரவை பல்வேறு அதிரடி திருப்பங்களுடன் முதல் முறையாக நேற்று விரிவாக்கம் செய்யப்பட்டது. ரவிசங்கர் பிரசாத், ஹர்ஷ வர்தன், ரமேஷ் பொக்ரியால் போன்ற மூத்த அமைச்சர்கள் உட்பட 12 அமைச்சர்கள் ராஜினாமா செய்ய, 43 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்றனர். இதில் 36 பேர் புதுமுகங்கள். 7 பெண்கள் இடம் பெற்றுள்ளனர். தமிழக பாஜ தலைவர் எல்.முருகன் இணை அமைச்சராகி உள்ளார். மத்தியில் பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கடந்த 2019ம் ஆண்டில் தொடர்ந்து 2வது முறையாக ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பிறகு, கடந்த 2 ஆண்டாக ஒன்றிய அமைச்சரவையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இதில், சில அமைச்சர்களின் செயல்பாடுகளில் ஒன்றிய அரசு அதிருப்தி அடைந்தது. அதோடு அடுத்த ஆண்டு உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ளதால், அந்த மாநிலங்களில் கூட்டணி கட்சிகளுடன் நெருக்கம் ஏற்படுத்தவும், ஏற்கனவே பல மாநிலங்களில் பாஜ ஆட்சியை பிடிக்க உதவிய சில தலைவர்களுக்கு பதவி வழங்கவும் அமைச்சரவையில் மாற்றம் செய்ய ஒன்றிய அரசு முடிவு செய்தது.இதுதொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் கடந்த சில வாரங்களாக உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. இதில், அமைச்சரவையில் அதிக புதுமுகங்களுக்கு வாய்ப்பு தர முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி, புதிய அமைச்சரவை பட்டியல் இறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, தேர்வு செய்யப்பட்ட தலைவர்கள் டெல்லிக்கு நேற்று முன்தினம் அவசரமாக அழைக்கப்பட்டனர். அதோடு, ஒன்றிய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டு, புதிய அமைச்சர்கள் பதவியேற்பு விழா நடத்த ஜனாதிபதி மாளிகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இதனால் நேற்று காலையில் இருந்து டெல்லியில் அடுத்தடுத்த அதிரடி திருப்பங்கள் நடந்தன. அமைச்சரவையில் புதுமுகங்களுக்கு வழிவிடும் வகையில், ரவிசங்கர் பிரசாத், ஹர்ஷ வர்தன், ரமேஷ் பொக்ரியால், பிரகாஷ் ஜடேகர் உள்ளிட்ட 6 கேபினட் அமைச்சர்கள் உட்பட 12 ஒன்றிய அமைச்சர்கள் பதவியை ராஜினாமா செய்தனர். உடனடியாக அவர்களின் ராஜினாமாவை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஏற்றுக் கொண்டார். இதைத் தொடர்ந்து, 43 பேர் கொண்ட புதிய அமைச்சரவை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஜனாதிபதி மாளிகையில் நேற்று மாலை நடந்த விழாவில் இவர்கள் பதவியேற்றனர். இதில், தற்போது இணை அமைச்சர்களாக உள்ள 7 பேர் கேபினட் அமைச்சர்களாக பதவி உயர்வு பெற்றனர். எதிர்பார்த்தபடியே, மபியின் ஜோதிராதித்யா சிந்தியா, அசாம் முன்னாள் முதல்வர் சர்பானந்தா சோனோவால், பீகாரின் பசுபதி குமார் பராஸ் உள்ளிட்டோருக்கு கேபினட் அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. தாழ்த்தப்பட்டோர் மற்றும் பெண்களுக்கு புதிய அமைச்சரவையில் அதிக முக்கியத்துவம் தரப்பட்டது. 7 பெண்கள் அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளனர். இதன்மூலம் அமைச்சரவையில் பெண்களின் மொத்த எண்ணிக்கை 11ஆக உயர்ந்துள்ளது. அதோடு, பாஜவின் 2வது முறை ஆட்சியில் தமிழகத்தில் இருந்து அமைச்சரவையில் யாரும் இடம் பெறாமல் இருந்த நிலையில், தமிழக பாஜ தலைவர் எல். முருகனுக்கு இணை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.சரியாக மாலை 6 மணிக்கு ஜனாதிபதி மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு விழா நடந்தது. இதில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, ஒன்றிய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முதல் நபராக மகாராஷ்டிராவின் முன்னாள் முதல்வரான நாராயண் ரானே கேபினட் அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார். அவரைத் தொடர்ந்து, 15 பேர் கேபினட் அமைச்சர்களாகவும், 28 பேர் இணை அமைச்சர்களாகவும் பதவியேற்றனர். இறுதியாக மேற்கு வங்க எம்பி நிஷித் பிரமானிக் பதவியேற்க, அவருக்கு முன்பாக எல். முருகன் பதவியேற்றார். பதவியேற்பு விழாவைத் தொடர்ந்து, புதிய அமைச்சர்கள் பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றனர். பதவியேற்ற அனைத்து அமைச்சர்களுக்கு பிரதமர் மோடி தனது டிவிட்டர் மூலமாகவும் வாழ்த்து தெரிவித்தார். 43 அமைச்சர்களில் 36 பேர் புதுமுகங்கள் ஆவர்.* அமைச்சரவை பலம் 77 ஆனது