×

இளம்பெண்ணுடன் ஏற்பட்ட கள்ளத்தொடர்பால் பயங்கரம் வாலிபரை கொன்று சடலம் கிணற்றில் வீச்சு: தம்பதி உள்பட 8 பேர் கைது

ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் அருகே படப்பை ஊராட்சி, முருகாத்தம்மன்பேட்டை, டாக்டர் அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் ராமு (33). தனியார் தொழிற்சாலை ஊழியர். இவரது மனைவி ரேணுகா (31). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். கடந்த 4ம் தேதி ராமு, வெளியே சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து, மணிமங்கலம் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்நிலையில், படப்பை அருகே காவல்கழனி பகுதியில் உள்ள பாழடைந்த கிணற்றில் நேற்று காலை கடும் துர்நாற்றம் வீசியது. தகவலறிந்து மணிமங்கலம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்தனர். அதில், சடலமாக கிடப்பது ராமு என தெரிந்தது. இதையடுத்து சடலத்தை கைப்பற்றி, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராமுவில் செல்போனை ஆய்வு செய்தனர். அதில், வஞ்சுவாஞ்சேரியை சேர்ந்த தினேஷ் (21) என்பவர், கடைசியாக பேசியது தெரிந்தது. இதையடுத்து போலீசார், தினேஷ், அவரது நண்பர்கள் வினோத் (20), பிரபாகரன் (22), சாலமங்கலம் பூவேந்திரன் (19), நரியம்பாக்கம் ஆகாஷ் (19), வெங்கம்பாக்கம் சின்னராசு (19) ஆகியோரை பிடித்து, விசாரித்தனர். அதில், நரியம்பாக்கத்தை சேர்ந்தவர் மணி (39). இவரது மனைவி மகாலட்சுமி (35). கடந்த 8 ஆண்டுகளாக ராமு, மகாலட்சுமியுடன் தொடர்பு வைத்திருந்தார். இந்த விஷயம், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் மணிக்கு தெரிந்தது. அவர், மனைவியை கண்டித்தார். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு, இருவரும் பிரிந்து தனித்தனியாக வசித்தனர். இதனை பயன்படுத்திய ராமு, மகாலட்சுமி வீட்டுக்கு சென்றுள்ளார். அதே நேரத்தில், மணியின் நண்பர், தினேஷுக்கு, மகாலட்சுமியுடன் தொடர்பு ஏற்பட்டது. ராமுவும், தினேஷும் மற்றவர்களுக்கு  தெரியாமல் அடிக்கடி மகாலட்சுமியுடன் ‘ஜாலி’யாக இருந்துள்ளனர்.இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன் மணி, மனைவி மகாலட்சுமியுடன் சமரசம் பேசி, மீண்டும் குடும்பம் நடத்த தொடங்கினர். இதனால் ராமுவும், தினேஷும் மகாலட்சுமியை தொடர்பு கொள்ள முடியாமல் தவித்தனர்.அப்போது தினேஷ், மகலாட்சுமியுடன் ராமு மீண்டும் தொடர்பு வைத்து, அடிக்கடி அவர்கள் சந்திப்பதாகவும் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ராமு, மணியை தீர்த்து கட்ட முடிவு செய்தார். இதையடுத்து தினேஷ் மற்றும் அவரது நண்பர்களை வைத்து, கொலை செய்ய திட்டமிட்டார்.இதைதொடர்ந்து, கடந்த 4ம் தேதி இரவு தினேஷ், ராமுவை செல்போனில் தொடர்பு கொண்டு மது விருந்துக்கு அழைத்தார். அவர் அங்கு சென்றபோது, அனைவரும் ஒன்றாக அமர்ந்து மது அருந்தினர். அப்போது, போதை தலைக்கேறியதும், மகாலட்சுமியுடனான கள்ளத்தொடர்பு குறித்து தினேஷ் கும்பலுக்கும், ராமுவுக்கும் தகராறு ஏற்பட்டு, கடும் வாக்குவாதம் நடந்தது. இதில் தினேஷ், மணி உள்பட 7 பேர், ராமுவின் கழுத்தை நெரித்து கத்தியால் சரமாரியாக குத்தி, அவரது கை, கால்களை ஒரு புடவையால் கட்டி, காவல்கழனியில் உள்ள பாழுங்கிணற்றில் கல்லை கட்டி போட்டுவிட்டு தப்பி சென்றனர் என அவர்கள் வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து மணி, மகாலட்சுமி,  தினேஷ் உள்பட 8 பேரை போலீசார் கைது செய்தனர்….

The post இளம்பெண்ணுடன் ஏற்பட்ட கள்ளத்தொடர்பால் பயங்கரம் வாலிபரை கொன்று சடலம் கிணற்றில் வீச்சு: தம்பதி உள்பட 8 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Sriperumbudur ,Ramu ,Dr. Ambedkar Street ,Murugathammanpet ,Patappai Panchayat ,
× RELATED ஊராட்சி தலைவரின் கணவர் மீது காவல் நிலையத்தில் புகார்