சென்னை: திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, தமிழகத்தில் நீராதாரங்களை பெருக்கும் வகையில் நீர்வளத்துறை அமைச்சகம் உருவாக்கப்பட்டு, அதன் அமைச்சராக துரைமுருகன் பொறுப்பேற்றுக்கொண்டார். இந்த நிலையில் திமுக தனது தேர்தல் அறிக்கையில் மாநிலம் முழுவதும் 200 தடுப்பணைகள் அமைக்கப்படும் எனவும், நீர் மேலாண்மை ஆணையம் உருவாக்கப்படும் எனவும், ஏரி, குளங்களை பராமரிப்பு சிறப்பு திட்டம் செயல்படுத்தப்படும் என்பன உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டது. இந்த அறிவிப்புகளை நிறைவேற்றும் வகையில் நடவடிக்கை எடுக்க நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். அதன்பேரில் அதிகாரிகள் விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையே நீர்வளத்துறை சார்பில் ரூ.3 ஆயிரம் கோடி செலவில் காவிரி, கல்லணை வடிநிலத்தில் மறு கட்டுமான பணி, கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு வரும் தடுப்பணை, முக்கொம்பு கதவணை, மேட்டூர் அணையில் இருந்து சேலம் மாவட்டத்தின் ஏரி, குளங்களுக்கு தண்ணீர் திருப்பி விடும் திட்டம், கரூரில் புதிய கதவணை, காவிரி, வைகை குண்டாறு இணைப்பு திட்டம், குடிமராமத்து, தமிழ்நாடு பாசன வேளாண்மை நவீனப்படுத்தும் திட்டங்களின் கீழ் நடக்கும் ஏரிகள் புனரமைப்பு பணிகளும், இதை தவிர்த்து தடுப்பணை, செயற்கை முறையில் நிலத்தடி நீர் செறிவூட்டும் கிணறுகள் அமைக்கும் பணி நடக்கிறது. இந்த நிலையில் வரும் 12ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பொதுப்பணித்துறை, நீர்வளத்துறை அதிகாரிகளுடன் ஆய்வுக்கூட்டம் நடைபெறுகிறது. இதற்கிடையே பல்வேறு முக்கிய திட்டங்கள் குறித்து நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் ஜூலை 8, 9 ஆகிய தேதிகளில் ஆய்வு செய்கிறார். இதுகுறித்து பொதுப்பணித்துறை சிறப்பு செயலாளர் அசோகன் அனைத்து மண்டல நீர்வளத்துறை தலைமை பொறியாளர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதி அனுப்பியுள்ளார். அதில், நீர்வளத்துறை அமைச்சர் தலைமையில் ஆய்வுக்கூட்டம் ஜூலை 8,9 ஆகிய தேதிகளில் தலைமை செயலகத்தில் உள்ள பழைய கட்டிடத்தில் அமைச்சர் அலுவலக அறையில் நடக்கிறது. ஜூலை 8ம் தேதி காலையில் மதுரை மண்டலத்துக்கு, கோவை மண்டலத்துக்கு பிற்பகலில் நடக்கிறது. ஜூலை 9ம் தேதி காலை திருச்சி மண்டலத்துக்கும், சென்னை மண்டலத்துக்கு பிற்பகலில் நடக்கிறது. இந்த கூட்டத்தில் பவர்பாயிண்ட் மூலம் விளக்கம் அளிப்பதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும். அனைத்து செயற்பொறியாளர்கள் உரிய ஆவணங்களுடன் கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது….
The post தமிழக நீர்வளத்துறையில் மேற்கொள்ள உள்ள ரூ.10 ஆயிரம் கோடி திட்டம் குறித்து துரைமுருகன் நாளை விரிவான ஆய்வு: 2 நாட்கள் நடக்கிறது appeared first on Dinakaran.