×

நடிகை பலாத்கார வழக்கில் அதிகாரிகளை கொல்ல திலீப் சதி திட்டம் தீட்டியது உண்மை தான்: விசாரணைக்கு ஆஜரானவர் பகீர் தகவல்

திருவனந்தபுரம்: நடிகை பலாத்கார வழக்கில் போலீஸ் அதிகாரிகளை கொல்ல திலீப் சதி திட்டம் தீட்டியது உண்மைதான் என்று, விசாரணைக்கு ஆஜரான ஒருவர் கூறியதாக பகீர் தகவல்கள் வெளியாகி உள்ளன. பிரபல நடிகை பலாத்கார வழக்கில் விசாரணை அதிகாரிகளை கொல்ல சதி திட்டம் தீட்டியது தொடர்பான வழக்கில், நடிகர் திலீப் உள்பட 5 பேர் முன்ஜாமீன் கோரி கேரள உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இதுகுறித்த விசாரணை 4 முறை தள்ளி வைக்கப்பட்ட நிலையில் விடுமுறை தினமான சனிக்கிழமை நீதிபதி கோபிநாத், நேரடியாக விசாரணை நடத்தினார்.
அப்போது திலீப் உள்பட 5 பேரிடமும், 3 நாள் போலீசார் விசாரணை நடத்தலாம். 27ம் தேதி (வியாழக்கிழமை) விசாரணை அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். அதுவரை திலீப் உள்பட 5 பேரையும் கைது செய்யக்கூடாது என்று நீதிபதி போலீசுக்கு தெரிவித்தார். அதன்படி நேற்று முன்தினமும் இரண்டாவது நாளாக நேற்றும் திலீப் உள்பட 5 பேரும் ஆஜரானார்கள். தொடர்ந்து குற்றப்பிரிவு எஸ்பி மோகன சந்திரன் தலைமையில் இவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. முதல் நாள் திலீப் உட்பட 5 பேரும் அளித்த தகவல்களில் முரண்பாடுகள் இருந்தன.

இதையடுத்து நேற்று அனைவரையும் ஒரே அறையில் அமர வைத்து விசாரணை நடத்தினர். அப்போது சில கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் திலீப் உட்பட அனைவரும் தடுமாறினர். இதற்கிடையே பிரபல, மலையாள டைரக்டர் ராபி மற்றும் நடிகரும் கதாசிரியருமான அருண்கோபி, திலீப்பின் பட நிறுவன மேலாளர் ஆகியோரையும் போலீசார் வரவழைத்து விசாரணை நடத்தினர். இந்நிலையில் விசாரணை தொடர்பான தகவல்கள் அரசல் புரசலாக வெளியாகி உள்ளன. டிஎஸ்பி உள்பட போலீசாரை கொல்ல திலீப் வீட்டில் சதி திட்டம் நடந்தது உண்மை தான் என்று விசாரணைக்கு ஆஜரான 5 பேரில் ஒருவர் கூறியுள்ளார். டைரக்டர் பாலசந்திரகுமார் கூறியது போன்ற விசயங்கள் குறித்து திலீப்பின் வீட்டில் பேசப்பட்டது உண்மை தான். அப்போது தான் வீட்டில் இருந்ததாகவும், ஆனால் சதி திட்டத்தில் தான் பங்கேற்கவில்லை என்று அந்த நபர் கூறியுள்ளார். இவ்வாறு கூறியது யார் என்ற விவரத்தை போலீசார் வெளியிடவில்லை.

Tags : Dilip ,
× RELATED பெண்கள் பற்றி இழிவான பேச்சு பாஜ எம்பி,...