×

அவிநாசி அருகே ஆதாரம்பாளையத்தில் 270 ஆண்டுகள் பழமையான கல்தொட்டி கண்டெடுப்பு

அவிநாசி : திருப்பூர் மாவட்டம் அவிநாசி ஒன்றியம் சேவூர் ஊராட்சி பகுதியில் உள்ள ஆதாரம்பாளையத்தில் கல்வெட்டுடன் கூடிய பழமையான கல்தொட்டி நேற்று கண்டறியப்பட்டுள்ளது. கொங்கு மண்டலமானது பண்டைய காலங்களில் கால்நடை மேய்த்தல் தொழிலை முக்கியமான தொழிலாகக் கொண்டது. சாலைகளில் செல்லும் மாட்டுவண்டிகள், சுமை சுமந்து செல்லும் கழுதைகள், தலைமூட்டையுடன் செல்லும் பாதசாரிகள் போன்ற பயணிகள் இளைப்பாற பெரிய நிழல்தரும் மரங்களும், சாலையோரக் கிணறுகளும் சுமைதாங்கி கற்களும் கொங்கு மண்டல கிராமங்களில் காணப்படும். பட்டி போட்டு மேய்க்கும் குரும்பை ஆடுகள், காடுகளில் மேய்க்கும் வெள்ளாடுகள், கால்நடைகள் ஆகியனவும் உண்டு. இவ்வாறு பலவகையான கால்நடை இனங்களுக்கும் தாகம் தணிக்க கிராமச் சாலையோரப் பொதுக் கிணறுகளின் அருகில் நமது முன்னோர்கள் கல்தொட்டி அமைத்து ஜீவ காருண்ய சேவை புரிந்துள்ளனர். கிணற்றிலிருந்து தண்ணீரை கல்தொட்டியில் நிரப்பி  கால்நடைகளுக்கு குடிப்பதற்காக வழங்கப்படும். இத்தகைய கல்வெட்டுடன் கூடிய கல்தொட்டி ஆதாரம்பாளையத்தில் வரலாற்று ஆய்வாளர்கள் முடியரசு, சிவக்குமார், பிரவீன் குமார் ஆகியோரால் கண்டறியப்பட்டுள்ளது.இது குறித்து வரலாற்று ஆய்வாளர் முடியரசு கூறியதாவது: ஆதாரம்பாளையம் பிள்ளையார் கோயில் முன்புறம் கல்தொட்டி அமைந்துள்ளது. கல்தொட்டியின் பக்கவாட்டில் உள்ள கல்வெட்டில் கலியுக சகாப்தம் என ஆரம்பிக்கிறது. கலியுக சகாப்தம் 4852 என்பது கிபி 1751 ஆண்டைக் குறிப்பதாகும். கல்வெட்டின் எழுத்தமைதி மற்றும் ஆண்டு குறிப்பிட்ட முறை கொண்டும் இக்கல்தொட்டியானது கிட்டத்தட்ட 270 ஆண்டுகள் பழமையானது எனக் கொள்ளலாம். “கலியுக சகாப்த 4852ம் ஆண்டு பங்குனி மாதம் பச்சாக் கவுண்டன் மகள் ஆண்டியம்மாள். நல்கும் சால். அண்ணமார் ஸாமியருள்” என கல்வெட்டில் எழுதப்பட்டுள்ளது. கலியுக சகாப்தம், பங்குனி மாதம் அதாவது 1751ம் ஆண்டு இத்தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. இதை அமைத்தவர் பச்சாக் கவுண்டன் மகள் ஆண்டியம்மாள் என அறியமுடிகிறது. சால் என்பது இங்கு கல்தொட்டியைக் குறிக்கிறது. ஆண்டியம்மாள் என்ற பெயர் அருகே உள்ள கல்வெட்டு வரி சிதைவுற்று உள்ளதால் கல்தொட்டியை நிறுவிய இன்னமும் ஓரிரு நபர்களின் பெயர் விடுபட்டு இருக்க வாய்ப்பு உண்டு. கல்வெட்டின் இறுதியாக அண்ணமார் ஸாமியருள் என முடிகிறது. இக் கல்தொட்டியானது தோராயமாக 7 அடி நீளமும், 2 அடி அகலமும், 2 அடி உயரமும் கொண்டது. இது ஒரு டன் எடைக்கும் அதிகமாக உள்ளது. கல்லின் 7 அடியுள்ள பக்கவாட்டில் பிற்காலத் தமிழ் எழுத்துக்களில் கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது. சில இடங்களில் எழுத்துக்கள் சிதைவுற்றுக் காணப்படுகிறது. வீரக் கல், சதிக் கல், அரிகண்டம், நவ கண்டம் போன்ற வீரம் செறிந்த  நிகழ்வுகளைக் கடந்து சுமைதாங்கிக் கல், அன்னதானம், கால்நடைகளுக்குத் தாகம்  தீர்க்கும் கல்தொட்டி, ஊர்ப் பொதுக்கிணறு போன்ற மனித நேயமிக்க செயல்களைப்  பிற்காலக் கொங்கு வரலாற்றில் அறியமுடிகிறது. இவ்வாறு அவர் கூறினார்.கல்வெட்டு மற்றும் கல்தொட்டி குறித்து தொல்லியல் வரலாற்று அறிஞர் பூங்குன்றனிடம் கேட்டபோது, ‘‘நாயக்கர்கள் ஆட்சிக்குப் பிறகு கல்தொட்டிகள் அமைக்கும் பழக்கம் வந்திருக்க வேண்டும். கொங்கு மண்டலத்தில் கல்தொட்டிகள் கல்லுப் பண்ணைகள் என்றழைக்கப்பட்டன. கல்வெட்டில் உள்ள கலியுக சகாப்தம் இதன் பழமையை உணர்த்துகிறது’’ என கூறினார்….

The post அவிநாசி அருகே ஆதாரம்பாளையத்தில் 270 ஆண்டுகள் பழமையான கல்தொட்டி கண்டெடுப்பு appeared first on Dinakaran.

Tags : Aadharambalayam ,Avinasi ,Saveur Panchayat ,Avinasi Union, Tirupur district ,
× RELATED அதிகாரத் திமிரில் அராஜகங்களும்,...