×

திருவண்ணாமலையில் கடந்த 6ம் தேதி ஏற்றப்பட்டது; 2,668 அடி உயர மலை மீது காட்சி தரும் மகாதீபம் நாளையுடன் நிறைவு: ஆருத்ரா விழாவில் தீப மை வழங்கப்படும்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மலை மீது கடந்த 6ம் தேதி ஏற்றப்பட்ட மகாதீபம் நாளையுடன் நிறைவு பெறுகிறது. தொடர்ந்து, நாளை மறுதினம் மகாதீப கொப்பரை கோயிலுக்கு கொண்டு வரப்படும். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், பிரசித்தி பெற்ற கார்த்திகை தீபத்திருவிழா கடந்த மாதம் 27ம் தேதி தொடங்கி, தொடர்ந்து 10 நாட்கள் விமரிசையாக நடைபெற்றது. விழாவின் நிறைவாக, கடந்த 6ம் தேதி மாலை 6 மணியளவில், 2,668 அடி உயர மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்பட்டது. ஆண்டுேதாறும் மலை மீது ஏற்றப்படும் மகாதீபம், தொடர்ந்து 11 நாட்கள் பக்தர்களுக்கு காட்சியளிப்பது மரபு. அதன்படி, தினமும் மாலை 6 மணிக்கு மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்பட்டு வருகிறது. அதற்காக, அண்ணாமலையார் கோயில் ஊழியர்கள் மற்றும் பருவதராஜ குலத்தினர் தினமும் மலைக்கு சென்று மகாதீபத்தை ஏற்றும் திருப்பணியை நிறைவேற்றி வருகின்றனர்.மேலும், அண்ணாமலையார் கோயிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, தினமும் மலை உச்சிக்கு நெய் மற்றும் திரி ஆகியவை அனுப்பி வைக்கப்படுகிறது. இந்நிலையில், நேற்று இரவு 9வது நாளாக மகாதீபம் மலையில் காட்சியளித்தது. மாண்டஸ் புயல், கனமழை மற்றும் தொடர்ந்து வீசும் பலத்த காற்றிலும் மலை மீது மகாதீபம் தொடர்ந்து காட்சியளிக்கிறது. மேலும், மலையில் மகாதீபம் காட்சியளிக்கும் நாட்களில் கோயிலுக்கு வருவதை பக்தர்கள் விரும்புகின்றனர். எனவே, கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக அண்ணாமலையார் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.இந்நிலையில், மலை மீது காட்சி தரும் மகாதீபம் நாளை இரவுடன் நிறைவு பெறுகிறது. அதைத்தொடர்ந்து, நாளை மறுதினம் (17ம் தேதி) காலை தீப கொப்பரையை மலையில் இருந்து அண்ணாமலையார் கோயிலுக்கு கொண்டுவர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பின்னர், தீப கொப்பரைக்கு சிறப்பு பூஜைகள் முடிந்ததும், கோயில் 5ம் பிரகாரத்தில் உள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் பக்தர்களின் தரிசனத்துக்காக வைக்கப்படும். அதைத்தொடர்ந்து, ஜனவரி 6ம் தேதி அண்ணாமலையார் கோயிலில் நடைபெறும் ஆருத்ரா தரிசனத்தின்போது, மகாதீப மை (தீபசுடர் பிரசாதம்) சிவகாமசுந்தரி சமேத நடராஜருக்கு அணிவிக்கப்படும். அதன்பிறகு, பக்தர்களுக்கு தீப மை வழங்கப்படும்….

The post திருவண்ணாமலையில் கடந்த 6ம் தேதி ஏற்றப்பட்டது; 2,668 அடி உயர மலை மீது காட்சி தரும் மகாதீபம் நாளையுடன் நிறைவு: ஆருத்ரா விழாவில் தீப மை வழங்கப்படும் appeared first on Dinakaran.

Tags : Tiruvannamalai ,Mahadeepam ,Dipa Mai ,Arudra festival ,Thiruvannamalai ,Deepa ,
× RELATED திருவண்ணாமலை கோயில் வழக்கை சிறப்பு...