×

அன்னசமுத்திர கண்மாய்க்கு நீர் ஆதாரமாக விளங்கும் தளி நீரோடையை மீட்கும் திட்டம் புத்துயிர் பெறுமா?

*விவசாயிகள் எதிர்பார்ப்புநிலக்கோட்டை : 20 ஆண்டுகளுக்கு பின் நிரம்பிய அன்னசமுத்திர கண்மாயின் நீர் ஆதாரமாக விளங்கும் சிறுமலையில் இருந்து வரும் தளி ஓடை மீட்கும் திட்டம் புத்துயிர் பெறுமா என விவசாயிகள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் 300 ஆண்டுகளுக்கு முன் 44 ஏக்கர் பரப்பளவு கொண்ட அன்னசமுத்திர கண்மாய் உருவாக்கப்பட்டது. இந்த கண்மாய் அமையநாயக்கனூர் பேரூராட்சி, மாலையகவுண்டன்படட்டி, பள்ளப்பட்டி, குல்லலக்குண்டு, சிலுக்குவார்பட்டி ஆகிய ஊராட்சிகளை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட கிராமங்களின் குடிநீர் ஆதாரமாக விளங்குகிறது.200-க்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலங்களின் பாசன வசதி பெற்று வகையிலும் சுமார் சிறுமலையிலிருந்து வரும் நீர்வழிப்பாதைகளாக தளி மற்றும் அருகம்பட்டி ஓடைகள் இருந்து வந்தது.இந்நிலையில் கடந்த 20-ஆண்டுகளுக்கு முன் சிறுமலை அடிவாரத்தில் கட்டபட்ட சிறுமலையாறு நீர்தேக்கத்தில் அருகம்பட்டி ஓடையை முற்றிலும் மறைத்தும் கட்டப்பட்டதால் சிறுமலையிலிருந்து அருகம்பட்டி ஓடை வழியாக அன்னசமுத்திரகண்மாய்க்கு வரும் தண்ணீர் முற்றிலும் நிறுத்தப்பட்டது. ஓடையும் தூர்வாரப்படாமல் போனதால் வறண்டு போனது. அதேபோல கடந்த பதினைந்து ஆண்டுகளுக்கு முன் தேசிய நான்குவழிச்சாலை அமைக்கப்பட்டபோது சிறுமலையிலிருந்து சுமார் ஐந்து கிலோ மீட்டர் பயணித்து அன்னசமுத்திரகமாய்க்கு வரும் தளி ஓடையும் முற்றிலும் மூடப்பட்டு அழிக்கப்பட்டது. அதற்கு மாற்றுவழிப்பாதை ஏற்படுத்தப்படாமல் விட்டதால் அதன் நீர்வழிப் பாதையும் வேறு திசைக்கு திருப்பி விடப்பட்டது. இதனால் டோல்கேட் முதல் கொடைரோடு உள்ளிட்ட கண்மாய் வரையிலான தளிஓடை ஆக்கிரமிக்கபட்டு முற்றிலும் மறைக்கப்பட்டது.இதனால் பெரும் நீராதாரமாக விளங்கி வந்த 300 ஆண்டு பழமையான அன்னசமுத்திர கண்மாயின் இரண்டு நீர் வழி பாதைகளும் அடைக்கப்பட்டதால் கடந்த 20 ஆண்டுகளாக வறண்டு பல்வேறு வழிகளில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டது.இந்நிலையில் இப்பகுதியில் கடந்த சில மாதங்களாக பெய்து வரும் தொடர் மழையால் சிறுமலையிலிருந்து வரக்கூடிய அனைத்து ஓடைகளிலும் மழைநீர் உட்பட தண்ணீர் ஊற்றெடுத்து பல நாட்களாக வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனை பயன்படுத்தி இப்பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாய சங்கங்களின் ஒத்துழைப்போடு திமுக நகரச் செயலாளர் விஜயக்குமார் முயற்சியில் 20-ஆண்டுகளுக்குப் பின் முதல் முறையாக அருகம்பட்டி நீரோடை வழியாக தண்ணீர் கொண்டு வரப்பட்டு அன்னசமுத்திர கண்மாய் முழுமையாக நிரப்பபட்டு ஒரு மாதத்திற்கு மேல் நிரம்பி வழிந்தது. மேலும் அருகம்பட்டி நீரோடை பகுதியிலும் தூர்வாரப்படாமல் தான் உள்ளது.கடந்தாண்டு சுமார் 600 அடி முதல் 1000 அடி வரை சென்ற நிலத்தடி நீர்மட்டம். தற்போது வெறும் 30 அடிக்கு உயர்ந்தது. இதனால் 20 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் விவசாயம் செய்ய ஆர்வத்தோடு களமிறங்கியுள்ள விவசாயிகள் மீண்டும் தங்கள் வாழ்வு ஒளிர தொடங்கியதாக மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இப்பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் தற்போதுள்ள இந்த மகிழ்ச்சி தொடர்ந்து நீடிக்கும் வகையில்,வருவாய் துறை பொதுப்பணித்துறை மற்றும் பேரூராட்சி நிர்வாகத்தால் கடந்த 10-ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட தளி ஓடையை மீட்கும் திட்டத்திற்கு புத்துயிர் அளித்து தேசிய நெடுஞ்சாலை துறை ஒத்துழைப்போடு மாற்று வழிபாதை அமைக்கும் பணியை துரிதப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் ஆக்கிரமிப்பின் பிடியிலுள்ள அருகம்பட்டி ஓடையை தூர்வாரி கண்மாய் வரை சரிசெய்யும் பணிகளை செயல்படுத்த வேண்டும் எனவும் இப்பகுதி விவசாயிகள் விவசாய சங்கப் பிரதிநிதிகள் பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்….

The post அன்னசமுத்திர கண்மாய்க்கு நீர் ஆதாரமாக விளங்கும் தளி நீரோடையை மீட்கும் திட்டம் புத்துயிர் பெறுமா? appeared first on Dinakaran.

Tags : Thali stream ,Annasamudra Kanmai ,Nilakottai ,Sirumalai ,Tali Stream ,
× RELATED காவல் நிலையம் அருகே திடீரென தீப்பிடித்து எரிந்த குற்ற வழக்கு வாகனங்கள்