×

சென்னையில் வீடு ஒன்றில் பதுக்கி வைக்க பட்டிருந்த 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த பலகோடி ரூபாய் மதிப்புள்ள 7 பழங்கால சிலைகள் மீட்பு..!

சென்னை : சென்னையில் வீடு ஒன்றில் பதுக்கி வைக்க பட்டிருந்த 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த பலகோடி ரூபாய் மதிப்புள்ள 7 பழங்கால சிலைகளை சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் மீட்டுள்ளனர். சென்னையில் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த பலகோடி மதிப்புள்ள புராதான சிலைகள் மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாட்டில் பழமையும், பெருமையும் கொண்ட கோவில்களில் இருந்து திருடப்பட்ட புராதான சிலைகளை மீட்கும் நடவடிக்கைகளில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். அந்த வகையில் இந்திய தொல்லியல் துறையில் பழங்கால சிலைகளை பதிவு செய்திருக்க கூடிய நபர்களின் விவரங்களை சேகரித்தனர்.அப்போது சென்னை ஆர்.ஏ புறம் முகவரியை கொண்ட ஷோபா துரைராஜன் என்பவர் பழங்கால சிலைகளை பதிவு செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. ஆர்.ஏ புரம் 7வது பிரதான சாலை முகவரியில் உள்ள ஷோபாதுரைராஜன் வீட்டுக்கு சென்ற சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். சோதனையில் அங்கு ஆதிகேசவ பெருமாள், ஸ்ரீதேவி , பூ தேவி , அஸ்திரதேவர், அம்மன், வீரபத்ரா,மஹாதேவி ஆகிய ஏழு பழங்கால சிலைகள் இருப்பதை அவர்கள் கண்டறிந்தனர். இந்த சிலைகள் குறித்து ஷோபாவிடம் விசாரணை நடத்திய போது பொழுதுபோக்குக்காக கலை பொருள்களை சேகரிப்பதாகவும் 2005 மற்றும் 2008ஆம் ஆண்டுகளில் மறைந்த பிரபல சிலை கடத்தல் மன்னன் தீனதயாளனின் அபர்ணா ஆர்ட் கேலரியில் சிலைகளை வாங்கியதாகவும் கூறியுள்ளார்.மேலும் அந்த சிலைகளை தொல்லியல் துறைகளில் பதிவு செய்ததற்கான ஆவணங்களையும் ஷோபாதுரைராஜன் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் அளித்தார். நிற்கும் விஷ்ணு மற்றும் ஸ்ரீதேவி ஆகிய சிலைகளின் கீழ் உளுந்தூர் பேட்டை ஆதிகேசவ கோவில் என பொறிக்கபட்டிருப்பதை கண்ட சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் உளுந்தூர் பேட்டையில் உள்ள ஆதிகேசவ பெருமாள் கோவிலுக்கு சென்று விசாரணை நடத்தினர்.விசாரனையில் 2011ஆம் ஆண்டு மர்மநபர்கள் சிலர் கோவிலுக்குள் புகுந்து ஆதிகேசவப்பெருமாள், ஸ்ரீதேவி பூதேவி ஆகிய சிலைகளை திருடி சென்றது தெரிய வந்தது.இந்த திருட்டு தொடர்பாக கோவில் அர்ச்சகர் உளுந்தூர்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.ஆனால் 2013 ஆம் ஆண்டு கண்டறிய படாத வழக்காக இந்த புகார் முடித்துவைக்கபட்ட தகவல் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு கிடைத்தது. இந்த வழக்கை மீண்டும் தூசி தட்டிய சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் திருடபட்ட ஆதிகேசவ பெருமாள், ஸ்ரீதேவி ,பூதேவி சிலைகளை மீட்கும் நடவடிக்கைகளில் தீவிரம் காட்டினர். அவர்கள் நடத்திய விசாரணையில் மீட்க பட்ட ஏழு சிலைகளில் 2013 ஆம் ஆண்டு ஷிமோகாவில் உள்ள இந்திய தொல்லியல் துறையில் நின்றபெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி ஆகிய சிலைகளை மட்டுமே பதிவு செய்திருப்பது தெரிய வந்தது.மீதமுள்ள நான்கு சிலைகளுக்கு சிலை கடத்தல் மன்னன் தீனதயாளன் ரசீதுகளை வழங்கிஇருப்பதும் தெரியவந்தது. ஆதிகேசவ பெருமாள் கோவிலிலிருந்து திருட பட்ட சிலைகள் 300 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த சிலைகள் எனவும் சர்வதேச சந்தையில் 5 கோடி ரூபாய்கு மேல் இந்த சிலைகளின் மதிப்பு இருக்கும் என்றும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். மூன்று சிலைகளை பறிமுதல் செய்த போலீசார் மீதமுள்ள நான்கு சிலைகள் எந்த கோவிலுக்கு சொந்தமானது என்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் . இந்த சிலைகள் 2008 ஆம் ஆண்டு ஏ.எஸ்.ஐ யில் பதிவு செய்யப்பட்டவை என்பதால்,அதற்குமுன் திருடப்பட்ட சிலைகளாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.சர்வதேச சந்தையில் இதன் மதிப்பு 2 கோடியாக இருக்கலாம் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட மூன்று சிலைகள் உளுந்தூர் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் ஒப்படைக்க படும் என்றும்.சிலை கடத்தல் தடுப்புபிரிவு போலீசார் கூறியுள்ளனர். வழக்கில் மறைந்த சிலைகடத்தல் மன்னன் தீனதயாளன் தொடர்பில் இருப்பதால் அடுத்த கட்டமாக அவரது கேலரி ஊழியர்களிடம் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளார். மேலும் சிலை கடத்தலில் வேறு யாருக்கெல்லாம் தொடர்புள்ளது என்று விசாரணை மேற்கொண்டுவருவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்….

The post சென்னையில் வீடு ஒன்றில் பதுக்கி வைக்க பட்டிருந்த 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த பலகோடி ரூபாய் மதிப்புள்ள 7 பழங்கால சிலைகள் மீட்பு..! appeared first on Dinakaran.

Tags : Chennai ,
× RELATED வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீஸ் கமிஷனர் ஆய்வு