புதுடெல்லி: நடிகை ஸ்வரா பாஸ்கர் நடித்த பழைய படத்தின் காட்சிகளை மையப்படுத்தி ஆபாச பதிவுகளை வெளியிட்ட நபர் மீது டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். தலைநகர் டெல்லியில் உள்ள வசந்த் குஞ்ச் காவல் நிலையத்தில் பாலிவுட் நடிகை ஸ்வரா பாஸ்கர் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், ‘நான் நடித்த பழைய திரைப்படம் ஒன்றின் காட்சி குறித்து, ஆட்சேபகரமான ஆபாச கருத்துகளை டுவிட்டரில் பதிவிட்டு வருகின்றனர். இது, என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையை பாதிக்கிறது. ெபாதுவெளியில் என்னுடைய நன்மதிப்பை கெடுக்கிறது. எனவே, சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார். அதையடுத்து வசந்த் குஞ்ச் போலீசார், தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் பிரிவுகளின் கீழ் எப்.ஐ.ஆர் பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘நடிகையின் டுவிட்டர் கணக்கை பின்தொடர்பவர்கள், அவரது பழைய படம் ஒன்றின் காட்சிகளை தொடர்புபடுத்தி ஆட்சேபகரமான ஆபாச கருத்துகளை பதிவிட்டுள்ளனர். அந்த டுவிட்டர் பதிவுகளை வெளியிட்ட நபர் குறித்த விபரங்களை சேகரித்து வருகிறோம். சம்பந்தப்பட்ட நபர் விரைவில் கைது செய்யப்படுவார்’ என்றனர். நடிகை ஸ்வரா பாஸ்கர், பாலிவுட் படங்களான ‘நில் பேட்டே சன்னதா’ மற்றும் ‘வீரே டி வெட்டிங்’ ஆகியவற்றில் நடித்துள்ளார். இவர், அவ்வப்போது சமூக மற்றும் அரசியல் பிரச்னைகள் குறித்து வெளிப்படையாக கருத்துகளை தெரிவிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.