5 வயது முதல் தனக்கு ஆஸ்துமா பிரச்னை இருப்பதாக தெரிவித்துள்ளார் காஜல் அகர்வால். இதுபற்றி அவர் கூறியது: 5 வயதில் ஆஸ்துமா இருப்பது தெரியவந்தது. அதன் பிறகு உணவு கட்டுப்பாடு விதித்தது நினைவிருக்கிறது. ஒரு குழந்தை சாக்லேட் சாப்பிடக் கூடாது என்றால் பாவம் தானே. நான் வளர்ந்த பிறகு அந்த பிரச்னை சரியாகிவிடவில்லை. பயணம் செய்யும்போது, குளிர் காலத்தில், தூசி, புகை இருந்தால் என் ஆஸ்துமா பிரச்னை பெரிதாகிவிடும்.
இதுபோன்ற விஷயங்களை எதிர்கொள்ள நான் இன்ஹேலர் பயன்படுத்தத் துவங்கினேன். எப்பொழுதுமே இன்ஹேலருடன்தான் இருப்பேன். இதனால் என்னை ஒரு மாதிரி பார்ப்பவர்கள் இருக்கிறார்கள். அது எனக்கு பெரிதாக தெரியவில்லை. நம் நாட்டில் பலருக்கு இன்ஹேலர் தேவைப்படுகிறது. ஆனால் அடுத்தவர்கள் என்ன நினைப்பார்களோ என இன்ஹேலர் பயன்படுத்தாமல் இருக்கிறார்கள். இவ்வாறு காஜல் கூறினார்.