பாலிவுட் நடிகை திவ்யா பட்னாகர். வயது 34. ஏ ரிஷ்தா கியா கெஹ்லாதா ஹே என்ற இந்தி தொலைக்காட்சி தொடர் மூலம் புகழ்பெற்ற அவர், அதன் பிறகு பல தொடர்களிலும், படங்களிலும் நகைச்சுவை வேடங்களில் நடித்தார். மும்பையில் வசித்து வந்த அவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ‘கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறேன். உயிர்பிழைக்க பிரார்த்தனை செய்யுங்கள்’ என்று திவ்யா வீடியோ வெளியிட்டிருந்தார்.
இந்த நிலையில் அவர் உடல்நிலை மோசமாகி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் திவ்யா பட்னாகர் உயிரிழந்தார். கடந்த வருடம்தான் திவ்யாவுக்கு திருமணமானது. கருத்து வேறுபாடால் அவரை விட்டு கணவர் பிரிந்துவிட்டார்.