×

சினிமா பலாத்கார காட்சி ஆபாச இணையதளத்தில் வைரல்: கேரள நடிகை தற்கொலை முயற்சி

திருவனந்தபுரம்: படத்தில் பலாத்கார காட்சியில் நடித்த வீடியோ ஆபாச இணையதளங்களில் வெளியானதால் கேரள நடிகை மன உளைச்சலில் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்தவர் ஷோனா ஆபிரகாம். கடந்த சில ஆண்டுக்கு முன்பு ஒரு மலையாள படத்தில் பலாத்கார காட்சியில் நடித்துள்ளார். அந்த காட்சிகள் தற்போது ஆபாச இணையதளங்களில் வெளியாகி உள்ளன. இதனால் மனம் உடைந்த நடிகை தற்கொலை செய்யும் முடிவுக்கு சென்றுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து நடிகை ஷோனா ஆபிரகாம் தனது பேஸ்-புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது: என்னுடைய 14வது வயதில் ‘பார் சேல்’ என்ற மலையாள படத்தில் நடித்தேன். அதில் காதல் சந்தியா, ஐஸ்வர்யா உள்பட பலர் நடித்திருந்தனர். கதையின் படி படத்தில் எனது அக்காவாக காதல் சந்தியா நடித்திருந்தார். தங்கை பலாத்காரம் செய்யப்படுவதை பார்த்த அக்கா மனவேதனை அடைந்து தற்கொலை செய்து கொள்கிறார். இந்த படத்தின் மூலம் இயக்குநர் சமூகத்துக்கு என்ன கருத்தை சொல்ல வந்தார் என்பது எனக்கு தெரியவில்லை. அந்த படத்தில் முழுக்க முழுக்க பெண்களுக்கு எதிரான கருத்துக்களே இடம் பெற்றிருந்தன. அறியாத வயதில் அந்த படத்தில் நடித்தேன். கதைப்படி பலாத்கார காட்சியில் நடிக்க வேண்டும் என்று இயக்குநர் என்னிடம் கூறினார். ஆனால் 150க்கும் மேற்பட்டோரின் முன்னிலையில் என்னால் அந்த காட்சியில் நடிக்க முடியாது என கூறினேன்.

இதையடுத்து கொச்சியில் உள்ள இயக்குநர் அலுவலகத்தில் அந்த காட்சி எடுக்கப்பட்டது. படப்பிடிப்பு முடிந்த பின்னர், நான் படிக்க பள்ளிக்கு சென்று விட்டேன். இந்த நிலையில் நான் பிளஸ் 2 படித்தபோது அந்த பலாத்கார காட்சிகள் பல ஆபாச இணைய தளங்களில் வெளியானது தெரியவந்தது. இது எனக்கும், என் குடும்பத்துக்கும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.மேலும் உறவினர்கள், நண்பர்கள் என்னை சந்தேக கண்ணுடன் பார்க்க தொடங்கினர். பலர் எனக்கு போன் செய்து திட்டவும் செய்தனர். இதனால் நானும், எனது பெற்றோரும் கடும் மன உளைச்சலுக்கு ஆளானோம். இதுகுறித்து கேரள முதல்வர், டிஜிபி, சைபர் கிரைம் போலீசார் உட்பட பலரிடம் புகார் கூறியும் எந்தவித பலனும் இல்லை. அந்த வீடியோக்களை நீக்க இதுவரை போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அந்த பலாத்கார காட்சிகள் இயக்குநர், எடிட்டர் மற்றும் தயாரிப்பாளரிடம் மட்டுமே இருந்தன. அப்படியிருக்க அவை எப்படி ஆபாச இணையதளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டன என்பது தெரியவில்லை. இதனால் மனம் உடைந்த நான் பலமுறை தற்கொலை செய்து கொள்ள முயன்றேன். படத்தின் கதைப்படி காதல் சந்தியா தான் தற்கொலை செய்து கொள்வார். ஆனால் உண்மை வாழ்க்கையில் நான்தான் தற்கொலை முடிவுக்கு சென்றுள்ளேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags :
× RELATED வரலட்சுமியின் பான் இந்தியா படம் மே 3ம் தேதி ரிலீஸ்