கன்னடத்தில் இருந்து இங்கு வந்து தமிழில் நடித்துவிட்டு, மீண்டும் கன்னடத்துக்கே சென்று செட்டிலானவர் சுபா புஞ்சா. வரும் டிசம்பர் மாதம் தனது காதலனை திருமணம் செய்துகொள்ள இருப்பதாக அறிவித்துள்ளார். சிவாஜி கணேசன் பேரன் துஷ்யந்த் ஜோடியாக மச்சி என்ற படத்தில் அறிமுகமான அவர், தொடர்ந்து திருடிய இதயத்தை, ஒரு பொண்ணு ஒரு பையன், சுட்ட பழம் ஆகிய படங்களில் நடித்தார். பிறகு இங்கு சரியான வாய்ப்பு கிடைக்காததால் கன்னடத்தில் நடிக்க சென்று, பெங்களூருவில் செட்டிலானார். இந்நிலையில், தனது காதலன் சுமந்த் பில்லவா என்பவரை திருமணம் செய்துகொள்ள இருப்பதாக அறிவித்துள்ளார்.
இதுகுறித்து சுபா புஞ்சாவிடம் கேட்டபோது, ‘ஒரு விழாவில் சுமந்த் பில்லவா அறிமுகமானார். நாளடைவில் எங்கள் நட்பு காதலாக மாறியது. நான் திருமணம் செய்துகொள்ள இருக்கும் சுமந்த் பில்லவாவின் போட்டோவை ரசிகர்களுடன் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். அடுத்த மாதம் திருமண நிச்சயதார்த்தம் நடக்கிறது. லாக்டவுன் முடிந்து நிலமை சரியான பிறகு எங்கள் திருமணம் நடக்கும்’ என்றார்.