மகாபாரதம் கதையை நடித்து, படமாக்குவதே பாலிவுட் நடிகர் ஆமிர்கானின் லட்சியம். இதை பலமுறை அவர் கூறிவந்தார். இந்நிலையில் தற்போது ஊரடங்கு சமயத்தில் அவர் இதற்கான வேலைகளில் இறங்கியுள்ளார் என பாலிவுட் வட்டாரம் தெரிவிக்கிறது. இயக்குனர் ராஜமவுலியின் அப்பா விஜயேந்திர பிரசாத், பாகுபலி, பாகுபலி 2, இந்தியில் பஜ்ரங்கி பாய்ஜான், மணிகர்னிகா உள்ளிட்ட படங்களுக்கு கதை எழுதினார். சரித்திர கதைகளை படமாக்குவதில் விஜயேந்திர பிரசாத்துக்கு தனி ஆர்வம் உள்ளது. அவரது கதை உருவாக்கம் காரணமாக பல சரித்திர படங்கள் வெற்றி பெற்றுள்ளன. இதனால் மகாபாரதம் கதையை படமாக உருவாக்க கதை, திரைக்கதை எழுதும்படி விஜயேந்திர பிரசாத்திடம் ஆமிர்கான் பொறுப்பு கொடுத்துள்ளார். இது பற்றி விஜயேந்திர பிரசாத் கூறும்போது, ‘மகாபாரதம் ஸ்கிரிப்ட்டை சினிமா மொழியில் உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளேன். இது ஆரம்ப கட்டம்தான். ஆமிர்கானும் என்னுடன் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்’ என்றார்.