தனது நண்பரும், வசனகர்த்தாவுமான கிரேசி மோகனின் முதலாண்டு நினைவு நிகழ்ச்சி நேரலையில் பேசிய கமல்ஹாசன், பாலு மகேந்திராவும் தனக்கு வாத்தியார்தான் என்று குறிப்பிட்டார். இதுபற்றி அவர் கூறுகையில், ‘தமிழில் பேச எப்போது கற்றுக்கொண்டாய் என்று கேட்டால் எப்படி திட்டவட்டமாக பதில் சொல்ல முடியாதோ, அதுபோலத்தான் பாலு மகேந்திராவிடம் இருந்து என்ன கற்றுக்கொண்டாய்? அதை எப்படி உள்வாங்கினாய் என்று கேட்டால் எனக்கு பதில் சொல்ல தெரியாது. அவருக்கு தெரியாமலேயே அவரிடம் இருந்து பல விஷயங்களை நான் கற்றிருக்கிறேன். அதெல்லாம் நான் வெவ்வேறு படங்களில் பணிபுரியும்போது, என்னையும் அறியாமல் வெளிப்பட்டு இருப்பதை மற்றவர்கள் உணர்ந்து, அதை எனக்கும் புரிய வைத்திருக்கிறார்கள். கே.பாலசந்தர் எனக்கு ஒரு வாத்தியார் என்றால், பாலு மகேந்திராவும் எனக்கு இன்னொரு வாத்தியார்தான்” என்றார். நாகேஷ் பற்றி பேசும்போது, “சில நேரங்களில் என்னிடம் உரிமையாக அவர் கோபித்துக்கொண்டு கேட்பார். ‘அந்த படத்துல நீ பண்ணியே கமல், அந்த கேரக்டரை எனக்கு கொடுத்திருக்க கூடாதா?’ என்று. அவரது காமெடியை பற்றி நாளெல்லாம் பேசிக்கொண்டே இருக்கலாம். திரையில் அவர் அவ்வளவு செய்துவிட்டு சென்றிருக்கிறார்’ என்றார்.