நடிகர் பிரசன்னாவின் வீட்டுக்கு ரூ.70 ஆயிரம் மின்கட்டணம் வந்துள்ளதாக அவர் கூறியுள்ளார். ஜனவரி மாதம் செலுத்தப்பட்ட தொகையை விட தற்போது பல மடங்கு உயர்ந்திருப்பதாக கூறும் அவர், பொதுமுடக்கத்தால் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டு இருப்பதால், மின்சார வாரியம் தவணை முறையில் கட்டுவதற்கு அல்லது கணக்கீடு எடுக்காத மாதத்திற்கு மாற்று வழியை பின்பற்ற வேண்டும் என்கிறார். தன்னால் அந்த தொகையை கட்டிவிட முடியும். ஆனால் சாதாரண மக்களால் கட்ட முடியுமா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். அத்துடன் டிவிட்டரில் கோபத்துடன் அவர் ஒரு கருத்தை பதிவிட்டு உள்ளார். ‘தமிழ்நாடு மின்சார வாரியம் கொரோனா லாக்டவுனில் கொள்ளை அடிக்கிறது என எத்தனை பேர் நினைக்கிறீர்கள்?’ என பிரசன்னா கேட்டிருக்கிறார்.கொரோனா ஊரடங்கு காரணத்தால் கடந்த பிப்ரவரி, மார்ச் மாதங்களுக்கான மின்சார பயன்பாடு அளவீடு எடுக்கப்படாத நிலையில், தற்போது மின்சார வாரிய ஊழியர்கள் ரீடிங் எடுத்து மின் கட்டணம் விதித்து வருகின்றனர். அது வழக்கமான தொகையை விட அதிகமாக இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.