×

துப்பறிவாளன் 2 சர்ச்சை: விஷாலுக்கு மிஷ்கின் விதித்த நிபந்தனைகள்

மிஷ்கின் இயக்கத்தில் விஷால், பிரசன்னா, விநய், ஆண்ட்ரியா, அனு இம்மானுவேல், கே.பாக்யராஜ் நடிப்பில் 2017ல் ரிலீசான படம், துப்பறிவாளன். இது வெற்றி பெற்றதை தொடர்ந்து 2ம் பாகத்தை உருவாக்க மிஷ்கின், விஷால் முடிவு செய்தனர். அதன்படி விஷால் தயாரிப்பில் துப்பறிவாளன் 2ம் பாகம் படத்தின் படப்பிடிப்பு லண்டனில் தொடங்கப்பட்டது. தொடர்ந்து 40 நாட்கள் நடந்த படப்பிடிப்பில் விஷால், பிரசன்னா, ரகுமான், கவுதமி ஆகியோர் நடித்த காட்சிகள் படமாக்கப்பட்டது.

இதையடுத்து சென்னையில் படப்பிடிப்பு நடத்த முடிவு செய்த நேரத்தில் விஷாலுக்கும், மிஷ்கினுக்கும் கருத்து மோதல் ஏற்பட்டது. இதை தொடர்ந்து துப்பறிவாளன் 2 படத்தின் இயக்குனர் பொறுப்பில் இருந்து மிஷ்கின் நீக்கப்பட்டு விட்டதாகவும், மீதமுள்ள காட்சிகளை விஷால் இயக்க முடிவு செய்துள்ளதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் விஷாலுக்கு இயக்குநர் மிஷ்கின் விதித்த நிபந்தனைகள் வெளியாகியுள்ளது.

15 நிபந்தனைகள்

1. சம்பளம் 5 கோடி ஜிஎஸ்டி உட்பட

2. ரீமேக் உரிமைகள் : இயக்குநரிடம் இந்தி ரீமேக் உரிமை மட்டுமே உள்ளது. தயாரிப்பாளருக்கு இதில் எவ்வித உரிமையும் கிடையாது. இயக்குநர் இந்தி திரைப்பட ரீமேக்கை எவருக்கும் விற்க முடியும், மேலும் தயாரிப்பாளருக்கு இதில் எந்த ஆட்சேபனையும் இருக்க்கூடாது.

3. IPR : விஷால் ஒரு நடிகராகவும், விஷால் ஃபிலிம் ஃபேக்ட்ரியை தயாரிப்பாளராகவும் கொண்டுள்ள இப்படம் கடைசியாக இருக்கும் என்பதால், தலைப்பு, படத்தின் தொடர்ச்சிகள் ( Sequels and Prequels ), கணியன் பூங்குன்றன், மனோகரன் உட்பட அனைத்து கதாபாத்திரங்களின் பெயர்கள் , மற்றும் துப்பறிவாளன்- 1, துப்பறிவாளன்- 2 படத்தில் இருக்கும் அனைத்து கதாபாத்திரங்களின் பெயர்கள் என அனைத்து அறிவுசார் சொத்துரிமைகளும் இயக்குநருக்கு சொந்தமாகும். விஷால் பிலிம் ஃபேக்டரியிலிருந்து இயக்குநரின் பெயருக்கு படத்தின் தலைப்பு உரிமையை மாற்றியதற்காக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் கவுன்சிலுக்கு  ஆட்சேபனை இல்லை என்ற சான்றிதழை வழங்கும்.

4. தனித்துவமற்றது : இரண்டாம் கட்ட படப்பிடிப்பின் தொடக்கத்திலிருந்து 90 நாட்கள் வரை படப்பிடிப்பு நடைபெறாவிட்டால் இயக்குநர் மற்ற படங்களில் இணைந்து பணியாற்றலாம். எந்தவொரு காரணத்திற்காகவோ 90 நாட்களுக்குள் படப்பிடிப்பு முடிவடையவில்லை என்றால், இயக்குநருக்கு மீண்டும் நேரம் கிடைக்கும் வரை விஷால் ஃபிலிம் ஃபேக்டரி காத்திருக்க ஒப்புக் கொள்ள வேண்டும்.

5. அணுகுமுறை : தயாரிப்பாளர் அல்லது அவரது பிரதிநிதிகளுக்கு இயக்குநருடன் நேரடி தொடர்பு இருக்காது. இயக்குநரின் மேலாளர் திரு. எல்.வி. ஸ்ரீகாந்த் லக்ஷ்மன் மட்டுமே இயக்குநரை தொடர்புகொள்ள ஒரே நபராக இருப்பார். விஷால் ஃபிலிம் ஃபேக்ட்ரியால் நியமிக்கப்பட்ட (நிர்வாக) தயாரிப்பாளர் திரு. சர்மாட் மட்டுமே தயாரிப்பாளரை தொடர்பு கொள்ள அவரது பிரதிநிதியாக செயல்படுவார்.
 
6. மேற்கண்ட நிபந்தனைகள் ஒப்புக் கொள்ளப்பட்டவுடன் இயக்குநருக்கு கொடுக்கப்பட வேண்டிய பணம் இயக்குநரால் முடிவு செய்யப்படும்.

7. இயக்குநரின் ஊழியர்களுக்கான நிலுவைத் தொகைகள் அனைத்தும் (இங்கிலாந்தில் கார் வாடகை உட்பட) முன்பே தீர்க்கப்பட வேண்டும்.

8. படப்பிடிப்பு தளம் : படப்பிடிப்பு இடங்களை முடிவு செய்யும்  அனைத்து உரிமைகளும் இயக்குநரையே சாரும். தயாரிப்பாளர் அல்லது அவரது பிரதிநிதிகள் இதில் தலையிடக்கூடாது.

9. நிதி : படத்தின் பட்ஜெட்டில் இயக்குநருக்கு எந்தவிதமான சம்பந்தமும் இல்லை. ஆனால் செலவினங்களைக் குறைக்க இயக்குநர் சிறந்த முயற்சிகளை எடுப்பார். இருப்பினும், படத்தின் மொத்த செலவுகளுக்கு இயக்குநர் எந்தவித வகையிலும் பொறுப்பேற்க மாட்டார்.

10. உதவி இயக்குநர், துணை இயக்குநர், இணை இயக்குநருக்கான சம்பளம் : தணிக்கை விண்ணப்பிக்கும் வரை ஒவ்வொரு மாதமும் இயக்குநரால் நிர்ணயிக்கப்பட்டபடி சம்பளம் கொடுக்கப்பட வேண்டும்.

11. தங்கும் விடுதி : இயக்குநர் மற்றும் இயக்குநரின் உதவியாளர்களுக்கு, இயக்குநரின் விருப்பத்திற்கு இணங்க தனி தங்குமிடம் வழங்கப்படும். மற்ற படக்குழுவினர்களுடன் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.

12. அலுவலக வாடகை : 66,000 ரூபாய் அலுவலக வாடகை மற்றும் 5,000 ரூபாய் பராமரிப்பு தொகை தயாரிப்பாளர்களால் செலுத்தப்படும். TDS சான்றிதழ், கழிக்கப்பட்டால், தணிக்கைக்கு முன் வழங்கப்படும். அலுவலக வாடகைக்கு மேல் கூடுதலாக, மின்சார செலவு, உணவு செலவுகள் மற்றும் பிற தற்செயலான அலுவலக செலவுகள் போன்றவை பணி தொடங்கப்பட்ட நாளிலிருந்து படத்தின் இறுதி வடிவம் ஒப்படைக்கப்படும் வரை தயாரிப்பாளரால் ஏற்கப்படும்.

13. தகவல் தொடர்பு : படத்தை பற்றிய அனைத்து தகவல்தொடர்புகளும் மின்னஞ்சல் மூலமாக மட்டுமே இருக்கும்.

14. இடையூறு : இயக்குநர் தனது படைப்பு சுதந்திரம், ஆக்கபூர்வமான முடிவெடுக்கும் முறைமை ஆகியவற்றுக்கு இடையூறு விளைவிக்கும் வகையிலோ அல்லது இயக்குநர் மற்றும் அவரது ஊழியர்கள் அவமதிக்கப்படுதல்,  துஷ்பிரயோகம் செய்யப்படுதல், அச்சுறுத்தப்படுதல், மோசமாக நடத்தப்படுதல், மேலும், இயக்குநரின் மனநிலையை பாதிக்கும் வகையில் ஏதேனும் சம்பவம் நடந்ததேயானால் இயக்குநரும் அவரது குழுவினரும் இப்படத்திலிருந்து வெளியேற முழு உரிமை உண்டு.

15. மேற்சொன்ன விவரங்கள் ஒப்புக் கொள்ளப்பட்டவுடன், அதன் சாராம்சம்,  முறையான ஒப்பந்தத்தில் சுருக்கமாக எழுதப்பட்டு, இயக்குனருக்கும் தயாரிப்பாளருக்கும் இடையில் கையெழுத்திடப்படும்.

Tags : Detective ,Mishkin ,Vishal ,
× RELATED என் கனவை முன்கூட்டியே நனவாக்கிய மிஷ்கின்: இயக்குனர் விஷால் நெகிழ்ச்சி