×

20 ஆண்டு சிறை வாழ்க்கையில் கதையே மாறிப்போச்சு… மனைவியுடன் குடும்பம் நடத்தி 4 குழந்தைகளை பெற்றெடுத்த அண்ணன் வெட்டிக் கொலை: உத்தரபிரதேசத்தில் பயங்கரம்

பரேலி: சிறையில் இருந்த காலகட்டத்தில் தனது மனைவியுடன் குடும்பம் நடத்திய அண்ணனை தம்பி ஒருவர் வெட்டிக் கொன்ற சம்பவம் உத்தரபிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உத்தரபிரதேச மாநிலம் பரேலி மாவட்டம் டாலிபூர் கிராமத்தை சேர்ந்தவர் தரம்வீர் (40). இவரது மனைவி பகவான்தேவி (38). தம்பதிக்கு திருமணமான 4வது ஆண்டில் அதே கிராமத்தைச் சேர்ந்த சியாரம் லோதி என்பவரை முன்விரோதம் காரணமாக தரம்வீர் சுட்டுக் கொன்றார். அதன் தொடர்ச்சியாக தரம்வீரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைகள் நடந்துவந்தன. இதற்கிடையே தரம்வீரின் மனைவி பகவான்தேவி தனியாக இருந்ததால், அவரை தரம்வீரின் ஒன்றுவிட்ட சகோதரனும் அண்ணனுமான ஓம் பிரகாஷ் (45) தனது வீட்டிற்கு அழைத்து சென்றார். இருவரும் தம்பதியாக வாழ்ந்த நிலையில், அவர்களுக்கு நான்கு குழந்தைகளும் பிறந்தன. இந்த நிலையில் ஐந்து மாதங்களுக்கு முன்பு, 20 ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்து தரம்வீர் சொந்த ஊருக்கு திரும்பினார். அப்போது தனது மனைவி பகவான்தேவி, தனது அண்ணன் ஓம் பிரகாசுடன் குடும்பம் நடத்தி வருவதை கண்டு அதிர்ச்சியடைந்தார். அன்றைய தினம் சகோதரர்கள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. தொடர்ந்து 3 மாதமாக இந்த பிரச்னை இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று மாலை ஓம்பிரகாஷ் வீட்டில் இருந்த போது, அங்கு வந்த தரம்வீர், தனது அண்ணனை கோடரியால் வெட்டிக் கொன்றார். அப்போது அவரது மனைவி, தனது குழந்தைகளுக்கு உணவு கொடுத்துக் கொண்டிருந்தார். அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து தரம்வீரை பிடித்தனர். அவர்களின் பிடியில் இருந்து தப்பிக்க முயன்ற தரம்வீரும் கோடாரியால் வெட்டிக் கொண்டார். இதனால் அவரது தலையில் காயம் ஏற்பட்டது. தகவலறிந்த போலீசார், காயமடைந்த தரம்வீரை சிகிச்சைக்காக மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வெட்டிக் கொல்லப்பட்ட ஓம்பிரகாஷின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ரூரல் போலீஸ் எஸ்பி ராஜ்குமார் அகர்வால் கூறுகையில், ‘வீட்டின் முதல் தளத்தில் உள்ள அறையில் தரம்வீரும், கீழே ஓம்பிரகாஷும் இருந்தனர். கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு, தரம்வீர் தனது மனைவி பகவான்தேவியிடம் குடும்ப விவகாரம் குறித்து சண்டையிட்டார். பின்னர் கூலி வேலை செய்வதற்காக பரேலிக்கு சென்றார். ஞாயிற்றுக்கிழமை மாலை மீண்டும் வீடு திரும்பிய தரம்வீர், வீட்டில் கட்டிலில் படுத்திருந்த ஓம்பிரகாஷை கோடாரியால் தாக்கிக் கொன்றார். தன்னையும் அவர் காயப்படுத்திக் கொண்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே சிறைவாசத்தை முடித்துவிட்டு வந்த தரம்வீர் சிங், மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளதால் அவர் மீண்டும் சிறைக்கே செல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார்’ என்றார்….

The post 20 ஆண்டு சிறை வாழ்க்கையில் கதையே மாறிப்போச்சு… மனைவியுடன் குடும்பம் நடத்தி 4 குழந்தைகளை பெற்றெடுத்த அண்ணன் வெட்டிக் கொலை: உத்தரபிரதேசத்தில் பயங்கரம் appeared first on Dinakaran.

Tags : Vettik ,Uttar Pradesh ,Bareilly ,
× RELATED பிரபல கல்வி நிறுவனங்களின் நுழைவுத்...