×

உலகின் முதல் கடற்படை, சோழ மன்னர்களின் கடற்படையே: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்..!

சென்னை தரமணியில் டைடல் பூங்கா வளாகத்தில் தொழில் வளர்ச்சி 4.0 மாநாட்டை தொடங்கி வைத்து முதலமைச்சர் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், கடந்த பதினைந்து மாத காலமாகத் தமிழ்நாடு அனைத்துத் துறைகளிலும் முன்னோக்கிய பாய்ச்சலில் போய்க்கொண்டு இருக்கிறது என்பதை எனக்கு முன்னாலே உரையாற்றிய அமைச்சர் உள்ளிட்ட அனைவரும் தெளிவாக எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக தொழில் துறையானது மிகவேகமான முன்னேற்றங்களை உருவாக்கித் தந்து வருகிறது என்பதையும் நீங்கள் நன்கு அறிவீர்கள். தொழில் துறையைப் பொறுத்தவரையில், இந்திய அளவிலான கவனத்தை மட்டுமல்ல – உலக அளவிலான கவனத்தையும் தமிழ்நாடு பெற்றிருக்கிறது என்பதை நான் இந்த நேரத்திலே மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். இதற்குக் காரணமான தொழில் துறை அமைச்சர் திரு. தங்கம் தென்னரசு அவர்களையும், தொழில் துறைச் செயலாளர் கிருஷ்ணன் IAS அவர்களையும், அவர்களுக்குத் துணைநின்று பணியாற்றிக் கொண்டிருக்கக்கூடிய தொழில் துறை அதிகாரிகளையும் இந்த நேரத்தில் நான் மனதாரப் பாராட்டுகிறேன், வாழ்த்துகிறேன். தொழில் துறை சார்பில், கடந்த பதினைந்து மாதத்தில் எத்தனையோ மாநாடுகளை நாம் நடத்தி இருக்கிறோம். முதலீடுகளை ஈர்ப்பதற்காக – திட்டங்களை வகுப்பதற்காக – தொழிற் கொள்கைகளை வெளியிட – ஒப்பந்தங்களைப் போடுவதற்காக இப்படி ஏராளமான மாநாடுகள் நடத்தப்பட்டுள்ளன. அவை அனைத்தும் மொத்தத்தில் தமிழ்நாட்டுக்கு பலன் தரும் மாநாடாக  அமைந்திருக்கிறது. அந்த வரிசையில் இன்று இந்த நிகழ்ச்சியும் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.இந்த நிகழ்வில்* தமிழ்நாடு வான்வெளி மற்றும் பாதுகாப்புக் கொள்கை, 2022-ஐ வெளியிடுதல், * மேம்பட்ட உற்பத்திக்கான இரண்டு திறன்மிகு மையங்களை திறந்து வைத்தல், * மதுரை மற்றும் சென்னையில் ஆளில்லா விமானங்களை இயக்குவதற்கான பயிற்சி நிறுவனங்களை (Remote Pilot Training Organisation) தொடங்கி வைத்தல் * பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையொப்பம் இடுதல் ஆகிய பல நிகழ்வுகள் இந்த நிகழ்ச்சியிலே நடந்தேறி இருக்கின்றன. தமிழ்நாட்டின் தொழில் துறைக்கு நான் வைத்துள்ள இலக்கு மிகப்பெரியது. 2030-ஆம் ஆண்டிற்குள் 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரத்தை அடைய வேண்டும்.  இதை அடைய தமிழகத் தொழில் துறை தொய்வில்லாமல் பணியாற்றி வருகிறது என்பதை நானும் அறிவேன், நீங்களும் நன்கு அறிவீர்கள். அதன் ஒரு பகுதியாகத்தான், இன்றைய நாள் மேம்பட்ட உற்பத்திக்கான இரு திறன்மிகு மையங்கள் துவக்கி வைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் உயர்கல்விச் சேர்க்கை விகிதம் நாட்டின் சராசரியைவிட மிக அதிகமாக 51.4 விழுக்காடாக உள்ளது.  திறன்மிக்க பணியாளர்களை நமது மாநிலம் பெற்றுள்ளது.  பல வெளிநாட்டு நிறுவனங்கள் தமிழ்நாட்டை நோக்கி வருவதற்கு இதுவும் ஒரு முக்கியக் காரணமாக அமைந்திருக்கிறது. இதனை நாம் தக்கவைத்துக் கொள்வதோடு, அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும். நாளை வரப்போகும் தொழில்நுட்ப மாற்றங்களுக்கு ஏற்ப, நமது இளைஞர்களின் திறன்களை வளர்த்து, முன்னேற்றுவதில் நாங்கள் கண்ணும் கருத்துமாக இருக்கிறோம். அதன் ஒரு பகுதியாகத்தான், இந்த திறன்மிகு மையங்கள் இங்கே அமைக்கப்பட்டுள்ளன. பொதுவாக, உற்பத்தித் துறையைவிட சேவைத் துறையில் கவனம் செலுத்தினால்தான் பெரிய அளவிலான வளர்ச்சி பெற இயலும் என சிலர் கருதுகின்றனர். ஆனால், நம்மைப் பொறுத்தவரை உற்பத்தித் துறை மற்றும் சேவைத் துறை ஆகிய இரண்டிலுமே முன்னணியில் இருக்க வேண்டும்.  அப்போதுதான் அனைவரையும் உள்ளடக்கிய  திராவிட மாடல் வளர்ச்சியை நாம் பெற்றிட முடியும். எனவேதான், நான்காம் தலைமுறை தொழில்வளர்ச்சி (Industry 4.0) தொடர்பான தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு நம்மைத் தயார்படுத்திக் கொள்ளவும், இந்த மேம்பட்ட உற்பத்திக்கான திறன்மிகு மையங்கள் வெகுவாக உதவும். குறிப்பாக, குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் இந்த திறன்மிகு மையங்களைப் பயன்படுத்திக் கொண்டு, வெகு விரைவில் முன்னேற்றம் காண இயலும். சீமென்ஸ் மற்றும் GE ஏவியேஷன் ஆகிய பன்னாட்டு நிறுவனங்களுடன் இணைந்து, இவ்வாறான மேம்பட்ட உற்பத்திக்கான திறன்மிகு மையங்களை டிட்கோ நிறுவனம் இங்கு அமைத்துள்ளது. இந்தத் திறன்மிகு மையங்களில் நவீன மற்றும் வளர்ந்து வரும் தொழில் நுட்பங்களுக்குத் தேவையான அம்சங்கள் பலவும் இடம் பெற்றுள்ளன. இவற்றை, சரியாகப் பயன்படுத்திக் கொள்ளுமாறு தொழில் துறையினரை நான் கேட்டுக் கொள்ள விரும்புகிறேன்.டிட்கோ மற்றும் சீமென்ஸ் நிறுவனங்கள் இணைந்து, 251 கோடியே 54 லட்சம் ரூபாய் செலவில் டைடல் பார்க்கில் அமைந்துள்ள இந்தத் திறன்மிகு மையம், நாட்டிலேயே இத்தகு முதல் திறன்மிகு மையம் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மற்றொரு சிறப்பம்சம் என்னவென்றால், இந்தத் திறன்மிகு மையங்களில், தொழிலாளர்களுக்கும், தொழில் முனைவோர்களுக்கும், மெய்நிகர் பயிற்சி அளிக்கப்படுகிறது.  இந்த திறன்மிகு மையம், “நான் முதல்வன்” திட்டத்தின் குறிக்கோள்கள் மற்றும் தொலைநோக்குப் பார்வையுடன் ஒருங்கிணைந்து செயல்படும்.டிட்கோ மற்றும் GE ஏவியேஷன் நிறுவனங்கள் இணைந்து, ரூபாய் 141 கோடி முதலீட்டில், 3D அச்சிடுதல் தொழில்நுட்பத்தில்,  உலகத் தரம் வாய்ந்த சேர்க்கை உற்பத்திக்கான (Additive Manufacturing Centre) TAMCOE திறன்மிகு மையத்தினை உருவாக்கியுள்ளது. இந்த மையங்களிலிருந்து மேம்படுத்தப்பட்ட தொழிற்சாலைகள் மூலமாகவும், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு நிறுவனங்கள் மூலமாகவும், நமது மாநிலத்திற்கு அதிக காப்புரிமைகள் கிடைக்கும். எனவே, அதிநவீன தொழில்நுட்பப் பயன்பாடுகளுடன், தொழில் வளர்ச்சிக்கு உத்வேகம் அளித்திடும் சக்தியாகவும் இந்த திறன்மிகு மையங்கள் விளங்கிடும்.தொழில் வளர்ச்சி – 4.0 தொடர்பான நவீன தொழில்நுட்பத் தேவைகளை நிறைவு செய்திடும் வகையில் இத்திறன்மிகு மையங்கள் செயல்படும் என்பதால், மாநிலத்தின் முதலீடு ஈர்ப்புத் திறன் வெகுவாக மேம்படும். வான்வெளி மற்றும் பாதுகாப்பு உற்பத்திச் சூழல் அமைப்பைப் பொறுத்தவரையில், தமிழ்நாடு எப்போதுமே, முன்னணி மாநிலமாகத்தான் இருந்து வருகிறது. வரலாற்று ஏடுகளை சற்றே புரட்டிப் பார்த்தோமானால், உலகின் மிக வலிமையான கடற்படையாகச் சோழ மன்னர்களின் கடற்படை இருந்துள்ளது. காலாட்படையை எடுத்துக் கொண்டால், இந்தியாவில் முதல் காலாட்படைப் பிரிவு, மெட்ராஸ் ரெஜிமெண்ட்தான்.  அதுவரை ஐரோப்பா மற்றும் வட அமெரிக்கா நாடுகளில் மட்டுமே தயாரிக்கப்பட்டு வந்த விமானங்கள், முதல் முறையாக, இந்தியாவில் 1910-ஆம் ஆண்டு சென்னையில்தான் தயாரிக்கப்பட்டது. இன்றும் கூட, HAL நிறுவனத்தின் இலகுரகப் போர் விமானங்களின் பெரும்பான்மையான உதிரிபாகங்கள் தமிழ்நாட்டில்தான் தயாரிக்கப்பட்டு வருகிறது. இத்துறையில் உற்பத்தித் திறனை வெகுவாக அதிகரிப்பதற்கும், தன்னிறைவு பெறுவதற்குமான வாய்ப்பு தற்போது ஏற்பட்டுள்ளது. மாநில வளர்ச்சிக்கும், அதன் கூடவே வான்வெளி மற்றும் பாதுகாப்புத் தொழில்துறை வளர்ச்சிக்கும் ஏதுவாக, இத்துறையை வளர்ந்து வரும் துறையாக (Sunrise Sector) அறிவித்து, முன்னேற்ற நடவடிக்கைகளை இந்த அரசு மேற்கொண்டு வருகிறது. கடந்த 12 மாதங்களில், துறைசார்ந்த பல கொள்கைகளை நாங்கள் தொடர்ச்சியாக வெளியிட்டு வருகிறோம். அந்த வரிசையில் இன்று தமிழ்நாடு வான்வெளி மற்றும் பாதுகாப்புத் தொழில் கொள்கை 2022-ஐ வெளியிடுவதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன். 10 ஆண்டு காலகட்டத்திற்குள், 75 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு மற்றும் 1 லட்சம் நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குதல் என்ற இலக்கை நாங்கள் இதன் மூலம் நிர்ணயித்திருக்கிறோம்.அண்மைக் காலங்களில், Drone எனப்படும் ஆளில்லா விமானங்கள் எத்தகைய வளர்ச்சி அடைந்துள்ளது என்பதையும், வாழ்வாதாரத்தை எவ்வாறு மாற்றியமைத்து வருகின்றன என்பதையும் கண்கூடாகக் காண்கின்றோம். வேளாண் துறையானாலும், சட்டம் ஒழுங்கானாலும், பாதுகாப்பு ஆனாலும், எந்தத் துறையை எடுத்துக் கொண்டாலும், ஆளில்லா விமானங்கள் தற்போது பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.  இது மேலும் வளர்ச்சியடைந்திடும் என்பதில் ஐயமேதுமில்லை. இந்த ஆளில்லா விமானங்களை இயக்கிட ஆளில்லா விமானங்களை இயக்குபவர்கள் (Drone Pilots) அல்லது ரிமோட் பைலட்டுகள் தேவை. ஒன்றிய அரசின், இந்திரா காந்தி ராஷ்ட்ரிய உடான் அகாடமி மற்றும் DE Drone ஆகிய நிறுவனங்களுடன் டிட்கோ நிறுவனம் இணைந்து பணியாற்றி, இந்த ரிமோட் பைலட் பயிற்சி அமைப்பினை மதுரை மற்றும் கோயம்புத்தூர் நகரங்களில் நிறுவியுள்ளது. அவற்றை இன்று காணொலிக் காட்சி வாயிலாகத் நான் தொடங்கி வைத்துள்ளேன். இதன் மூலம் மாதம் 200 மாணவர்கள் என்ற விகிதத்தில் பயிற்சி அளித்திட இயலும். ஓராண்டிற்குள் கிட்டத்தட்ட 2500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்திடும் வாய்ப்பு உள்ளது. இதன் மூலம், நமது கிராமப்புற படித்த இளைஞர்கள் ஆளில்லா விமான பைலட்டுகளாக தகுதி பெற்று உலகை வலம் வர முடியும்.தமிழகத்தின் அனைத்து தொழில் வாய்ப்புகளையும் அனைத்துத் தொழில் நிறுவனங்களும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன். தேசிய அளவில் மட்டுமின்றி, தெற்காசியாவிலேயே, தொழில் வளர்ச்சியில் சிறந்த மாநிலமாகத் தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்ற இலட்சிய இலக்கினை அடைவதற்காக நாம் அனைவரும் கைகோர்த்து உழைப்போம். இவ்வாறு கூறினார்….

The post உலகின் முதல் கடற்படை, சோழ மன்னர்களின் கடற்படையே: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்..! appeared first on Dinakaran.

Tags : First Navy of the World ,Navy of the Kings of Cholah ,Chief Minister ,Mukhari G.K. ,stalin ,Business Development 4.0 Conference ,Tidal Park ,Chennai's Chennai ,Navy of the Kings of Chola ,B.C. G.K. Stalin ,
× RELATED பாலியல் புகாரில் சிக்கிய பிரஜ்வல்...