×

டாக்டர் வீட்டில் நகை திருடிய 3 பேர் கைது: ரூ.36 லட்சம் நகை பறிமுதல்

துரைப்பாக்கம்: கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள அக்கரை கடற்கரை பகுதியில் பூட்டியிருந்த டாக்டர் வீட்டை உடைத்து வைரம், பணம், தங்க நகைகளை கொள்ளையடித்து சென்ற 3 பேரை நேற்று போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.36 லட்சம் மதிப்பிலான நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.சென்னை கிழக்கு கடற்கரை சாலை, அக்கரை, சி-கிளிப் 5வது நிழற்சாலை பகுதியில் கடற்கரை ஓரத்தில் ஒரு வாடகை வீட்டில் அபர்ஜிந்தால் (39) என்ற டாக்டர் வசித்து வருகிறார். இவர், கடந்த செப்டம்பர் 25ம் தேதி வீட்டை பூட்டிவிட்டு, தனது சொந்த ஊரான உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள நொய்டாவுக்கு சென்றிருந்தார். பின்னர் 28ம் தேதி சென்னை திரும்பியுள்ளார். இச்சமயத்தில் டாக்டர் அபர்ஜிந்தாலின் வீட்டுக்கதவை உடைத்து, பீரோவில் இருந்த ரூ.4.50 லட்சம் ரொக்கப் பணம், ரூ.36 லட்சம் மதிப்பிலான வைரம், தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.இதுகுறித்து கானத்தூர் போலீசில் டாக்டர் அபர்ஜிந்தால் புகார் அளித்தார். இப்புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கேளம்பாக்கம் உதவி கமிஷனர் ரவிக்குமார் தலைமையில் இன்ஸ்பெக்டர் பாலகுமாரன், தலைமை காவலர் விஜயகுமார், காவலர்கள் சதீஷ்குமார், கனகராஜ், இளங்கோ, லதா ஆகியோரை கொண்ட தனிப்படையினர் மர்ம நபர்கள் குறித்து தீவிரமாக விசாரித்து வந்தனர். மேலும், அப்பகுதி சிசிடிவி காமிரா பதிவுகளையும் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வில், சிசிடிவி காமிராவில் பதிவான ஒரு ஆட்டோ பதிவெண்ணை வைத்து விசாரித்தனர். இதன் தொடர்ச்சியாக, டாக்டர் வீட்டில் புகுந்த 3 மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றிருப்பது தெரியவந்தது.அந்நபர்களை குறித்து விசாரித்ததில், அவர்கள் திருச்சி, முசிறி மற்றும் உறையூரை சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்தது. இந்நிலையில், நேற்று மாலை முட்டுக்காடு பகுதியில் தனிப்படை போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே வேகமாக வந்த ஆட்டோவை மடக்கி பிடித்தனர். ஆட்டோவில் இருந்த 3 பேரிடம் விசாரித்ததில், அவர்கள் திருச்சி, உறையூர் மற்றும் முசிறியை சேர்ந்தவர்கள் எனக்கூறியதும் போலீசாருக்கு பொறி தட்டியது. பின்னர் 3 பேரையும் கானத்தூர் காவல் நிலையம் கொண்டு வந்து விசாரித்தனர்.விசாரணையில், அவர்கள் திருச்சி மாவட்டம் உறையூரை சேர்ந்த சங்கர் (32), முசிறியை சேர்ந்த மணிகண்டன் (26), வீரமுத்து (41) என்பதும், இவர்கள் அக்கரை கடற்கரை பகுதியில் டாக்டர் அபர்ஜிந்தால் வீட்டில் வைரம், நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றதை ஒப்புக்கொண்டனர். இதைத் தொடர்ந்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.36 லட்சம் மதிப்பிலான வைரம், தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் 3 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்….

The post டாக்டர் வீட்டில் நகை திருடிய 3 பேர் கைது: ரூ.36 லட்சம் நகை பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Durai Pakkam ,Akkarai ,East Coast Road ,Dinakaran ,
× RELATED பூத் ஏஜென்டாக பணியாற்றியதற்கு பணம்...