×

குமரி கல்லூரி மாணவர் சாவில் மர்மம்: காதலி உள்பட 4 பேர் ஆஜர்; குற்றப்பிரிவு போலீஸ் கிடுக்கிப்பிடி

திருவனந்தபுரம்: கன்னியாகுமரி மாவட்டம் நெய்யூர் தனியார் கல்லூரியில் பிஎஸ்சி இறுதியாண்டு ரேடியாலஜி படித்த மாணவர் ஷாரோன் ராஜ். இவர் பாறசாலையை சேர்ந்தவர். களியக்காவிளை அருகே ராமவர்மன்சிறையில் உள்ள அவரது காதலி கொடுத்த கஷாயமும், ஜூசும் குடித்த பிறகு மரணமடைந்தார். ஷாரோன்ராஜ் கடந்த 14ம் தேதி தான் காதலியின் வீட்டுக்கு சென்றார். அப்போது காதலி கொடுத்த கஷாயம், ஜூஸ் ஆகியவற்றை குடித்துள்ளார். அதன் பிறகு அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த 25ம் தேதி திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஷாரோன் ராஜ் மரணமடைந்தார். மகனின் மரணத்திற்கு அவரது காதலி கொடுத்த ஆசிட் கலந்த ஜூஸ் தான் காரணம் என்று கூறி ஷாரோனின் தந்தை ஜெயராஜ் பாறசாலை போலீசில் புகார் கொடுத்தார்.இந்த சம்பவத்தில் மர்மம் நீடித்ததை தொடர்ந்து வழக்கு விசாரணை குற்றப்பிரிவு போலீசுக்கு மாற்றப்பட்டுள்ளது. இதற்காக திருவனந்தபுரம் குற்றப்பிரிவு டிஎஸ்பி ஜான்சன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. நேற்று குற்றப்பிரிவுதனிப்படை போலீசார் விசாரணையை தொடங்கினர். ஷாரோனின் காதலியை விசாரிக்க குற்றப்பிரிவு போலீசார் முடிவு செய்து விசாரணைக்கு ஆஜராகுமாறு அவருக்கு நோட்டீஸ் கொடுத்தனர். இதையடுத்து இன்று காலை 10.30 மணிக்கு ஷாரோனின் காதலி மற்றும் காதலியின் பெற்றோர், உறவினர்கள் என்று மொத்தம் 4 பேர் திருவனந்தபுரத்தில் உள்ள குற்றப்பிரிவு எஸ்பி அலுவலகத்தில் நேரில் ஆஜரானார்கள். அதைத் தொடர்ந்து 4 பேரிடமும் குற்றப்பிரிவு போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணையின் இறுதியில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகலாம் என்று தெரிகிறது….

The post குமரி கல்லூரி மாணவர் சாவில் மர்மம்: காதலி உள்பட 4 பேர் ஆஜர்; குற்றப்பிரிவு போலீஸ் கிடுக்கிப்பிடி appeared first on Dinakaran.

Tags : Kumari College ,Thiruvananthapuram ,Sharon Raj ,Kannyakumari District ,Naiyur Private College ,
× RELATED ஷாரோன் கொலை வழக்கில் இறுதி விசாரணை...