×

சோளிங்கர் அருகே விபத்து ஆட்டோ, டிப்பர் லாரி நேருக்கு நேர் மோதல்-ஒருவர் பலி; 9 பேர் படுகாயம்

சோளிங்கர் : சோளிங்கர் அருகே ஆட்டோ, டிப்பர் லாரி நேருக்குநேர் மோதி கொண்ட விபத்தில் ஒருவர் பலியானார். 9 பேர் படுகாயம் அடைந்தனர்.திருவள்ளூர் மாவட்டம், ஆர்.கே.பேட்டையில் இருந்து ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கருக்கு ஷேர் ஆட்டோ நேற்று காலை சென்றது. ஆர்.கே.பேட்டையை சேர்ந்த டிரைவர் கர்ணன் என்பவர் ஆட்டோவை ஓட்டிச்சென்றார். இதில், சோளிங்கரில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்கள் உட்பட 10 பேர் பயணம் செய்தனர். பில்லாஞ்சி பெட்ரோல் பங்க் அருகே சென்றபோது சோளிங்கரில் இருந்து ஆர்.கே.பேட்டை நோக்கி வந்த டிப்பர் லாரி மீது ஷேர் ஆட்டோ நேருக்குநேர் மோதியது. இந்த விபத்தில் ஆட்டோ அப்பளம் போல் நொறுங்கியது.மேலும், சோளிங்கர் தனியார் தொழிற்சாலைக்கு வேலைக்கு சென்ற நொச்சிலி கிராமத்தை சேர்ந்த வேணுகோபால்(48) என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். டிரைவர் உட்பட 9 பேர் படுகாயம் அடைந்தனர்.இதுகுறித்து தகவலறிந்த சோளிங்கர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயம் அடைந்த ஆட்டோ டிரைவர் கர்ணன் மற்றும் அம்மையார்குப்பம் கிராமத்தை சேர்ந்த தீபா(20), நந்தினி(21), வேண்டா(21), ஆர்.கே.பேட்டையை சேர்ந்த பார்த்திபன்(25), வடக்குப்பம் கோபி(35), நாராயணபுரம் சுமதி(35), முருகேசன்(72), கோரகுப்பம் வள்ளியம்மாள்(65) ஆகிய 9 பேரையும் அப்பகுதி மக்கள் உதவியுடன் மீட்டு சோளிங்கர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். மேலும், விபத்தில் பலியான வேணுகோபால் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, 7 பேருக்கு சோளிங்கர் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். இதுகுறித்து சோளிங்கர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தால் சோளிங்கர்- திருத்தணி சாலையில் சுமார் ஒருமணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது….

The post சோளிங்கர் அருகே விபத்து ஆட்டோ, டிப்பர் லாரி நேருக்கு நேர் மோதல்-ஒருவர் பலி; 9 பேர் படுகாயம் appeared first on Dinakaran.

Tags : Solinger ,Solingar ,Dinakaran ,
× RELATED பள்ளிப்பட்டு அருகே வேன்-கார் மோதல்: 2 பேர் படுகாயம்