×

தாளவாடி மலைப்பகுதியில் 300 ஆண்டு பழமையான கோயிலில் சாணியடிக்கும் விநோத திருவிழா-2 ஆயிரம் பக்தர்கள் பங்கேற்பு

சத்தியமங்கலம் : சத்தியமங்கலம் அருகே தாளவாடி மலைப்பகுதியில் 300 ஆண்டு பழமையான கோயிலில் பக்தர்கள் ஒருவர் மீது ஒருவர் சாணியடிக்கும் விநோத திருவிழா நடந்தது. இத்திருவிழாவை 2 ஆயிரம் பக்தர்கள் பங்கேற்று கண்டுகளித்தனர். ஈரோடு மாவட்டம், தாளவாடி அருகே கும்டாபுரம் கிராமத்தில் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த பீரேஸ்வரர் கோயில் உள்ளது. ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகை முடிந்து 4வது நாள் சாணியடிக்கும் திருவிழா கோயிலில் நடப்பது வழக்கம். இத்திருவிழா நேற்று காலை 10 மணிக்கு சிறப்பு பூஜைகளுடன் தொடங்கியது. முன்னதாக ஊரில் உள்ள அனைத்து பசுமாட்டு சாணங்கள் சேகரிக்கப்பட்டு கோயிலின் பின்புறம் குவித்து வைக்கப்பட்டது. பின்னர் மதியம்  அருகே உள்ள குளத்தில் இருந்து சுவாமி அழைப்பு நடந்தது. ஊர் பெரியவர்கள் முன்னிலையில் நடந்த சுவாமி அழைப்பு நிகழ்ச்சியில் தாரை தப்பட்டைகள் முழங்க கழுதை மேல் ஒருவரை அமர வைத்து புல்லினால் மீசைகள் செய்து அலங்கரித்து, கோயிலுக்கு ஊர்வலமாக சுவாமி அழைத்து வரப்பட்டது. பின்னர் கோயில் கருவறையில் அலங்கரிக்கப்பட்ட பீரேஸ்வரருக்கு தடபுடலாக பூஜைகள் செய்யப்பட்டது. இதையடுத்து சிறுவர்கள், வாலிபர்கள் 100க்கும் மேற்பட்டோர் அனைவரும் வெற்றுடம்புடன் கோயிலுக்கு பின்புறம் கொட்டி வைக்கப்பட்ட சாணத்தை உருண்டைகளாக செய்து ஒருவர் மீது ஒருவர் அடித்து விளையாடி மகிழ்ந்தனர். சுமார் 2 மணி நேரம் சாணியடிக்கும் நிகழ்ச்சி உற்சாகமாக நடந்தது. பின்னர் அனைவரும் குளத்தில் நீராடிவிட்டு கோயிலுக்கு சென்று பீரேஸ்வரரை பக்தி பரவசத்துடன் வழிபட்டனர். இது குறித்து கிராம பெரியவர்கள் கூறுகையில், ‘‘சில நூற்றாண்டுகளுக்கு முன்பு இப்பகுதியில் வசித்த பெரியவர் ஒருவர் தானியங்களை கொட்டி வைத்துள்ளார். பின்னர் அந்த பெரியவர் இறந்த பிறகு ஊர் மக்கள் தானியம் கொட்டப்பட்டிருந்த இடத்தில் சாணத்தை கொட்டி குப்பை மேடாக்கினர். இந்நிலையில் ஒருநாள் குப்பையை விவசாய நிலத்திற்கு கொண்டு செல்வதற்காக மண்வெட்டியால் வெட்டி எடுத்தபோது குப்பை மேட்டுக்குள் சிவலிங்கம் இருந்தது. இதைக்கண்ட பொதுமக்கள் ஆச்சரியமடைந்தனர். பின்னர் அந்த கிராமத்தின் நடுவே கோயில் கட்டி சிவலிங்கத்தை வைத்து பூஜை செய்து வந்தனர். சாணம் இருந்த குப்பை மேட்டில் இருந்து சிவலிங்கம் கண்டெடுக்கப்பட்டதால் தீபாவளி முடிந்து 4வது நாள் சாணியடி திருவிழா நடத்தப்படுகிறது. அதனடிப்படையில் ஆண்டுதோறும் இத்திருவிழா நடக்கிறது. திருவிழா முடிந்தவுடன் இச்சாணத்தை விவசாய நிலத்தில் போட்டால் விவசாயம் செழிக்கும் என்பது ஐதீகம்’’ என தெரிவித்தனர். இந்த திருவிழாவில், தாளவாடி  சுற்றுவட்டாரத்தை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்று கண்டுகளித்தனர்….

The post தாளவாடி மலைப்பகுதியில் 300 ஆண்டு பழமையான கோயிலில் சாணியடிக்கும் விநோத திருவிழா-2 ஆயிரம் பக்தர்கள் பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : year ,Thalawadi ,Satyamangalam ,The Bizarre ,
× RELATED தாளவாடி அருகே வனத்துறை கூண்டில் சிக்கியது சிறுத்தை