×

நடத்தையில் சந்தேகத்தால் விபரீதம் மனைவி வெட்டி கொலை: கணவனுக்கு வலை

தாம்பரம்: தாம்பரம் அருகே மனைவியின் நடத்தையில் சந்தேகத்தால் அரிவாளால் சரிமாரியாக வெட்டி கொலை செய்த கணவனை போலீசார் தேடி வருகின்றனர். அஸ்தினாபுரம், மகேஸ்வரி நகர், ஏரிக்கரை பகுதியை சேர்ந்தவர் வரப்பிரகாசம் (55), கூலி தொழிலாளி. இவரது மனைவி விசுவாசமேரி (50). தம்பதிக்கு 3 மகள்கள், 1 மகன் உள்ளனர். விசுவாசமேரி அதே பகுதியில் வீட்டு வேலை செய்து வந்தார். இவர், தினசரி வீட்டிற்கு தாமதமாக வருவதாக கூறப்படுகிறது. இதனால், மனைவி நடத்தை மீது சந்தேகப்பட்ட வரப்பிரகாசம் போதையில் தினமும் மனைவியிடம் தகராறு செய்து வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு முழுவதும் இருவருக்கும் இதுதொடர்பாக சண்டை ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரமடைந்த வரப்பிரகாசம் மறைத்து வைத்திருந்த அரிவாளால் மனைவி விசுவாசமேரியை சரமாரியாக வெட்டியுள்ளார. இதில், அவரது தலை, கழுத்து, முதுகு என பல இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டு, சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். பின்னர், போர்வையால் உடலை மூடி வைத்துவிட்டு, வீட்டின் கதவை வெளியே தாழ்ப்பால் போட்டுவிட்டு வரப்பிரகாசம் தப்பி சென்றுள்ளார். இந்நிலையில், நேற்று அதிகாலை சுமார் 5 மணி அளவில் வேலைக்கு செல்லும் தாய் வீட்டை விட்டு வெளியே வராததால் அவரை எழுப்புவதற்காக மகள் ஆனந்தி (28) வந்துள்ளார்.அப்போது, வெட்டு காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்த விசுவாசமேரியை கண்டு அதிர்ச்சியடைந்த அவர் அலறி கூச்சலிட்டார். சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், இதுகுறித்து சிட்லபாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், அங்கு வந்த ஆய்வாளர் மகுடீஸ்வரி தலைமையிலான போலீசார், உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு  அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்கு பதிவு செய்து, தப்பி ஓடிய வரப்பிரகாசத்தை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது….

The post நடத்தையில் சந்தேகத்தால் விபரீதம் மனைவி வெட்டி கொலை: கணவனுக்கு வலை appeared first on Dinakaran.

Tags : TAMBARUM ,Thambaram ,
× RELATED தாம்பரம் – நாகர்கோவில் சிறப்பு ரயில்...