×

கேரளாவில் இரட்டை நரபலிக்கு முன்பு மேலும் ஒரு பெண்ணை கொலை செய்த ஷாபி லைலா கொடுத்த அதிர்ச்சி தகவலால் பரபரப்பு: தோண்ட, தோண்ட கிடைக்கும் தகவல்

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் பத்தனம்திட்டாவில் இரட்டை நரபலிக்கு முன் ஷாபி மேலும் ஒரு பெண்ணை கொலை செய்ததாக தன்னிடம் கூறியதாக பகவல் சிங்கின் மனைவி லைலா போலீஸ் விசாரணையில் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கேரள மாநிலம் பத்தனம்திட்டாவில் 2 பெண்கள் நரபலி கொடுக்கப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்ட முகமது ஷாபி, பகவல் சிங், அவரது மனைவி லைலா ஆகியோர் போலீஸ் காவலில் விசாரிக்கப்பட்டு வருகின்றனர். இந்த விசாரணையில் தினமும் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகிறது. பத்மா மற்றும் ரோஸ்லி ஆகியோரை நரபலி கொடுப்பதற்கு முன்  மிகவும் கொடூரமான முறையில் சித்ரவதை செய்யப்பட்டுள்ளனர். உயிருடன் உடலை கத்தியால் கீறி அதில் கறி மசாலா தடவி அந்த வேதனையால் அவர்கள் துடிப்பதை பார்த்து 3 பேரும் ரசித்துள்ளனர். இதையடுத்து போலீசார் 3 பேரையும் தனித்தனியாகவும் பின்னர் ஒன்றாக வைத்தும் விசாரணை நடத்தி வருகின்றனர். தனித்தனியாக விசாரணை நடத்தியபோது அவர்கள் கூறிய விவரங்கள் ஒன்றாக விசாரணை நடத்தும்போது பொருத்தமாக இருக்கிறதா? என்பதை பரிசோதிப்பதற்காகவே இந்த முறையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் லைலாவிடம் போலீசார் தனியாக விசாரணை நடத்தியபோது, அவர் மேலும் ஒரு அதிர்ச்சித் தகவலை கூறினார். அவர் கூறுகையில், ‘’நரபலி கொடுப்பதற்கு முன்பு ஷாபி அடிக்கடி பகவல் சிங்கின் வீட்டுக்கு வந்து சென்றுள்ளார். அப்போது ஒரு நாள் லைலாவிடம் ஷாபி பேசிக் கொண்டிருந்தபோது, தான் எர்ணாகுளத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை ஏற்கனவே கொலை செய்ததாகவும் பின்னர் மனித மாமிசத்தை விற்பனை செய்ததில் ₹20 லட்சம் வரை கிடைத்தது என்றும் தெரிவித்துள்ளார். லைலா கூறிய இந்த தகவல் போலீசுக்கு மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால் பின்னர் ஷாபியிடம் விசாரித்தபோது, தான் லைலாவை நம்ப வைப்பதற்காகவே அவ்வாறு கூறியதாக தெரிவித்துள்ளார். ஆனாலும் போலீசார் ஷாபி கூறியதை நம்பவில்லை. இதனால் சமீபத்தில் எர்ணாகுளத்தில் காணாமல் போன பெண்களின் விவரங்களை போலீசார் சேகரித்து வருகின்றனர். இதற்கிடையே ஷாபிக்கு மேலும் பெண்களின் பெயரில் 2 போலி பேஸ்புக் கணக்குகள் இருப்பது தெரியவந்துள்ளது. சஜ்னா, ஜா என்ற பெயரில் இந்த கணக்குகள் உள்ளன. ஏற்கனவே தேவி என்ற போலி பெயரில் தொடங்கிய பேஸ்புக் கணக்கில் இருந்து தான் பகவல் சிங்கை ஷாபி ஏமாற்றினார். அதேபோல இந்த கணக்குகளில் இருந்தும் ஷாபி யாரையாவது ஏமாற்றியிருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். …

The post கேரளாவில் இரட்டை நரபலிக்கு முன்பு மேலும் ஒரு பெண்ணை கொலை செய்த ஷாபி லைலா கொடுத்த அதிர்ச்சி தகவலால் பரபரப்பு: தோண்ட, தோண்ட கிடைக்கும் தகவல் appeared first on Dinakaran.

Tags : Shabi Laila ,Kerala ,Thiruvananthapuram ,Pathanamthitta, Kerala ,Shabi ,
× RELATED மனைவி பிரிந்ததால் வேதனை; தற்கொலையை...