×

மீன் வியாபாரியை அடித்துக் கொன்ற மனைவி, மகள்கள், காதலன் கைது: காதல் விவகாரத்தால் பயங்கரம்

ஓட்டப்பிடாரம்:  தூத்துக்குடி மாவட்டம், பசுவந்தனையை அடுத்த அச்சங்குளம் கிராமத்திற்கு மேற்கே சுமார் ஒரு கி.மீ., தூரத்தில் விவசாய நிலத்தில் ஆண் உடல் நேற்று காலை எரிந்த நிலையில் கிடந்தது. தகவலறிந்து பசுவந்தனை போலீசார் சென்று உடலை மீட்டு விசாரணை நடத்தினர். இதில், தீ வைத்து எரிக்கப்பட்டவர் காமநாயக்கன்பட்டி அருகே குருவிநத்தம் பகுதியை சேர்ந்த ஞானசேகர் (42) என்பதும், மீன் வியாபாரம் செய்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார், குருவிநத்தம் சென்று, ஞானசேகர் மனைவி சலைத்ராணி (38), அவர்களது 2 மகள்களிடம் விசாரணை நடத்தினர். அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்ததால் சந்தேகம் வலுத்தது.தீவிர விசாரணையில், அதே ஊரைச் சேர்ந்த சுடலையாண்டி மகன் கருப்பசாமி என்ற கார்த்திக் (24), ஞானசேகரின் மூத்த மகளை காதலித்துள்ளார். மேலும், கார்த்திக்கிற்கும், சலைத்ராணிக்கும் தொடர்பு இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதையறிந்த ஞானசேகர் மனைவியையும், மகளையும் கண்டித்துள்ளார். இது தொடர்பாக நேற்று முன்தினம் நள்ளிரவு கணவன், மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் ஞானசேகர் படுக்கையறைக்கு சென்றார். இதையடுத்து சலைத்ராணி, அவரது மகள்கள் செல்போன் மூலம் நடந்த விவரத்தை கார்த்திக்கிடம்  கூறியுள்ளனர். இதையடுத்து அங்கு காரில் வந்த கார்த்திக்குடன் சேர்ந்து ஞானசேகரை கம்பி, அரிவாளால் தாக்கி உள்ளனர். இதில் அவர் சுருண்டு விழுந்து இறந்தார். பின்னர் உடலை சாக்கில் மூட்டையாக கட்டி, காரில் ஏற்றி அச்சங்குளம் காட்டுப்பகுதிக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு உடலை தீவைத்து எரித்து விட்டு தப்பியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார், கார்த்திக், சலைத்ராணி, அவரது 2 மகள்கள் என 4 பேரையும் கைது செய்தனர். மேலும் காரும் பறிமுதல் செய்யப்பட்டது. காதல் விவகாரத்தில் மீன் வியாபாரியை அவரது மனைவி, மகள்கள் மற்றும் வாலிபர் அடித்துக்கொலை செய்து உடலை எரித்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது….

The post மீன் வியாபாரியை அடித்துக் கொன்ற மனைவி, மகள்கள், காதலன் கைது: காதல் விவகாரத்தால் பயங்கரம் appeared first on Dinakaran.

Tags : Ottapidaram ,Acchankulam ,Pasuvantanai, Thoothukudi district ,
× RELATED சாலை விபத்தில் ஒடிசா வாலிபர் பலி