×

பொள்ளாச்சி கொடுமைகளை துகிலுரிக்கும் படம்!

இலட்சிய நடிகர் என்று போற்றப்படும் பழம் பெரும் நடிகர் எஸ்.எஸ்.ஆரின் பேரன் எஸ்.எஸ்.ஆர்.ஆரியன் நாயகனாக அறிமுகமாகிறார். படத்தின் பெயர் ‘கருத்துக்களை பதிவு செய்’. நாயகியாக உபாஷ்ணா ராய் நடிக்கிறார். எம் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இயக்கம் ராகுல். இவர் ஏற்கெனவே ‘ஜித்தன் 2’, ‘1 A.M’ போன்ற படங்களை இயக்கியவர். படத்தைப் பற்றி இயக்குநரிடம் கேட்டோம். ‘‘என்னுடைய முந்தைய படங்கள் இரண்டுமே ஹாரர் டைப் படங்கள். இந்தப் படமும் ஹாரர் வகை படமே. ஹாரர் டைப் படங்களுக்கு எப்போதுமே ரசிகர்களிடம் வரவேற்பு உண்டு என்பதை நம்புகிறவன் நான்.

படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு முடிவடைந்தது. சமூக வலைத்தளமான ஃபேஸ்புக் பற்றியது தான் இந்தப் படம். ஃபேஸ்புக்கில் அறிமுகமாகி நண்பர்களாகப் பழகி, காதலர்களாகி, பின் அவனிடம் தன் கற்பை இழந்த பெண். அதோடு அந்தப் பெண்ணை ஒரு அறையில் பூட்டி வைத்து சித்திரவதை செய்யும் கொடூரமானவனிடமிருந்து தப்பி வந்த பெண் என்ன முடிவெடுக்கிறார், என்ன மாதிரியான தண்டனையை அவனுக்குக்  கொடுத்தாள் என்பதை சீட் நுனியில் அமர்ந்து படம் பார்க்குமளவுக்கு த்ரில்லிங்காக சொல்லியிருக்கிறேன்.

என்னுடைய நாயகன் ஆரியன், தாத்தாவின் பெயருக்கு புகழ் சேர்க்குமளவுக்கு நடித்துள்ளார். இது ஹாரர் படம் என்பதால் இசைக்கும் ஒளிப்பதிவுக்கும் அதிக முக்கியத்துவம் இருக்கும். இசையமைப்பாளர் கணேஷ் ராகவேந்திரா, தாம் தூம்னு இல்லாமல் கதையை சுவாரஸ்யமாக்குமளவுக்கு அருமையான இசையைக் கொடுத்திருக்கிறார். ஒளிப்பதிவாளர் மனோகர் பங்கும் பேசப்படும். கதை, திரைக்கதை, வசனத்துக்கு ராஜசேகர் பொறுப்பு ஏற்றுள்ளார்.

பொள்ளாச்சி பாலியல் சம்பவங்கள் பலவற்றை என்னுடைய படத்தில் நான் ஏற்கெனவே பதிவு செய்திருக்கிறேன். படத்தின் இறுதிக் கட்ட பணிகள் முடிவடையும் கட்டத்தில் இருக்கும் சூழலில் பொள்ளாச்சி சம்பவம் பெரிதாக வெடித்திருக்கிறது. நானும் நிஜ சம்பவங்களின்
பிரதிபலிப்பைத்தான் அப்போதே பதிவு செய்திருந்தேன். பெத்தவங்க பிள்ளைகளுக்கு போனை வாங்கிக் கொடுப்பதாக நினைக்கிறாங்க. இல்லவே இல்லை... பிசாசைத்தான் வாங்கிக் கொடுக்கிறாங்க. இன்றைய ஃபேஸ்புக், இணையதளம், மற்றும் சமூக வலைத்தள காதல்கள் எல்லாமே பெண்களைச் சிக்க வைக்கும் அபாய வலை என்பதை சமூக அக்கறையுடன் சொல்லியிருக்கிறேன்’’ என்றார்.

Tags : Pollachi ,
× RELATED பொள்ளாச்சி மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து அதிகரிப்பு