கார்த்தியுடன் பருத்திவீரன் படத்தில் இணைந்து நடித்தார் பிரியாமணி. அப்படம் வெற்றி பெற்றது. இதையடுத்து பிரியாமணிக்கு நிறைய வாய்ப்புகள் வந்தபோதும் ஒரு சில படங்களே ஒப்புக்கொண்டு நடித்து வந்தார். அவருக்கு வந்த கதாபாத்திரங்கள் பெரும்பாலும் பருத்திவீரனில் இடம்பெற்ற கிராமத்து பெண் வேடமாகவே இருந்ததால் அந்த வேடங்களை அவர் ஏற்க மறுத்தார். நவநாகரீக பெண்ணாக கிளாமர் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் தந்தார். இதனால் தமிழ் படங்களை ஓரம்கட்டிவிட்டு தெலுங்கு படங்களில் நடித்து வந்தார். இந்நிலையில் கடந்த 2017ம் ஆண்டு தனது நீண்ட நாள் காதலர் முஸ்தபா ராஜை திருமணம் செய்துகொண்டு இல்லறத்தில் செட்லானார். திருமணத்துக்கு பிறகும் பிரியாமணி தொடர்ந்து நடித்து வருகிறார். இந்த ஆண்டில் கன்னடம், மலையாளம், தெலுங்கு என 5 படங்களில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார். இதில் ராஜமவுலி இயக்கும் ஆர்ஆர்ஆர் படமும் அடங்கும். சமீபத்தில் பிரியாமணியை அணுகிய சமூக சேவை அமைப்பு ஒன்று பெண்களுக்கான சுகாதாரம், மாதவிலக்கு பற்றி2ய விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக நடக்கும் மாரத்தான் ஓட்டப்பந்தயத்தில் கலந்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். அதனை பிரியாமணி ஏற்றுக்கொண்டிருக்கிறார்.
இதுகுறித்து பிரியாமணி கூறும்போது, ’பெரும்பாலான பள்ளிகளில் பெண்களுக்கு சரியான கழிப்பறை வசதி இருப்பதில்லை. இதனால் மாணவிகள் பாதியிலேயே படிப்பை நிறுத்துவது அதிகரித்து வருகிறது. அந்த நிலையை மாற்றும் முயற்சிக்காகவும் பள்ளிகளில் கழிப்பறை வசதி ஏற்படுத்துவதுடன் பெண்கள் மத்தியில் மாதவிலக்கு பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவும் நடக்கும் மாரத்தான் ரேஸில் பங்கேற்கிறேன். 10 கி.மீட்டர் தூரம் நடக்கவுள்ள இப்போட்டியில் ஏராளமானவர்கள் கலந்துகொள்ள உள்ளனர். இதன் மூலம் கிடைக்கும் நிதியை பள்ளிகளில் பெண்களுக்கான கழிப்பறை மற்றும் சுகாதார வசதி ஏற்படுத்த பயன்படுத்தப்படும். இந்த நல்ல செயலுக்கு என்னால் இயன்ற சிறுமுயற்சியாக இந்த போட்டியில் நான் பங்கேற்கிறேன். இதன்மூலம் பெண்கள் குறிப்பாக மாணவிகள் விழிப்புணர்வு பெற்று தங்களது படிப்பை தொடர வாய்ப்பு ஏற்படும்’ என்றார்.