×

சப்த மங்கைத் தலங்கள்

ஆதிசக்தியானவள் ஈசனோடு ஈசனாக இருந்தாலும் சிவதரிசனம் பெற்று அதிலேயே ரமித்துக் கிடந்தாலும் புவிக்குள் வந்து தவமியற்றுவதுபோல சுகத்தை அவள் வேறெங்கும் பெறவில்லைதான். ‘‘நான் எத்தனைதான் கயிலையம்பதியிலே கிடந்தாலும் சரி, எம் குழந்தைகள் பரம பக்தர்கள் உலவும் இந்த புவியில் நான் அவர்களோடு பெறும் சிவதரிசனத்திற்கு ஈடுஇணை வேறென்னவாக இருக்க முடியும்‘‘ என்று சிவச் சின்னங்களை தரிசிக்கும் பொருட்டு பூமிக்குள் எங்கு தவம் செய்வது என்று நினைத்தபடி இருந்தாள். அம்பிகையின் அவாவை அறிந்த சப்த மாதர்களும், ‘‘தாங்கள் சிவசின்னங்கள் உணர்த்துகின்ற பேருணர்வையும், அந்த சின்னங்களின் தரிசனங்களையும் பெற பூலோகத்தில் ஏழு ஆலயங்கள் உள்ளன.

நாங்கள் ஏழு பேரும் அங்குதான் தவமியற்றி அஸ்திரங்கள் பெற்றோம்’’ என்று கூறினர். பராசக்தியும் ஏழு தலங்களையும் தரிசித்தாள். அவளைத் தொடர்ந்து பண்டைய காலத்தில் அநவித்யநாத சர்மா எனும் பக்தர் தமது பத்தினியான அனவிக்ஞையுடன் காசி விஸ்வநாதரை வழிபட்டு ராமேஸ்வரம் நகர்ந்து கொண்டிருந்தபோது ஓரிரவு ஒரு தலத்தில் தங்க நேர்ந்தது. காசி விசாலாட்சியே கனவில் தோன்றி ‘‘நீங்கள் இருவரும் இந்த ஏழு தலங்களையும் தரிசித்து விட்டுத்தான் செல்ல வேண்டும்’’ என்று ஆணையிட்டாள். காசி விசாலாட்சியின் வாக்கை ஏற்று அவர்களும் தரிசித்தனர்.

தஞ்சாவூர் - கும்பகோணம் சாலையில் அய்யம்பேட்டையைச் சுற்றியே இத்தலங்கள் அமைந்துள்ளன. அவர்கள்தம் அடியொற்றி நாமும் அத்தலங்களை தரிசிப்போமா?

சக்கராப்பள்ளி

முதலில் ஆதிசக்தியானவள் இன்றைய சக்கராப்பள்ளி எனும் தலதிற்குள் நுழைந்தாள். தலத்தை கண்டதும் அகமலர்ந்தாள். சக்ரவாஹம் எனும் மோட்சத்திற்கு இட்டுச் செல்லும் பறவை ஈசனை வணங்கியது கண்டு மகிழ்ந்தாள். இந்த பறவைதான் துகாராம் போன்ற பாகவத ஞானியர்களை சரீரத்தோடு வைகுண்டத்திற்கு அழைத்துச் சென்றதாக நூல்கள் கூறுகின்றன. ஒரு ஜீவனை இந்த சக்ரவாஹப் பறவை மோட்சத்திற்கு இட்டுச் செல்லும்போது ஏற்படும் ஆனந்தத்தை ஆஹா... ஹூ.ஹூ... என்கிற சப்தங்களோடே சாம வேதம் அழகான கானமாக பாடுகிறது. ஒரு ஜீவனை மோட்சத்திற்கு இட்டுச் செல்லும் பறவையே இத்தலத்தின்கண் ஈசனை பூஜித்து தவமியற்றி தானும் முக்திப்பதம் அடைந்தது. அப்பேற்பட்ட சக்ரவாஹம் எனும் பறவையே இத்தல ஈசனை பூஜித்து தவமியற்றி தன்னை இயக்கும் ஈசனே தன் முக்திப்பதம் சேர்த்துக் கொண்ட அற்புதத்தலமாகும். அதனாலேயே இத்தலத்திற்கு சக்ரவாகேஸ்வரர் எனும் திருப்பெயர் ஏற்பட்டது.

ஆதிசக்தி இத்தலத்தில் ஈசனின் நேத்ர தரிசனம் பெற்றாள். நெற்றிக் கண் என்பது ஞானாக்னி சொரூபமாகும். மாயைக் கலப்பேயில்லாத பூரண ஞானத்தை உணர்ந்தாள். ஈசனே நீக்கமற நிறைந்திருக்கும் மாபெரும் பேருணர்வை தனக்குள்ளும் தானாக நின்றுணர்ந்தாள். அருவமாக அத்தலத்திலேயே தன்னையும் நிலை நிறுத்திக் கொண்டாள். மேலும் இத்தலத்தில் சப்த மாதர்களில் ஒருவளான பிராம்மி பூஜிக்கப்பட்ட தலமாகும். சப்த மாதர்களும் சண்ட, முண்ட ரக்தபீஜனை சாமுண்டியான காளி வதைப்பதற்கு சகல தேவர்களும் காளியின் அருகே நின்றனர். மகாகாளியான சண்டிகைக்கு வேறொருவர் தயவு தேவையில்லையெனினும் ஒவ்வொரு தேவர்களிடமிருந்தும் ஒவ்வொரு சக்தி வடிவினிலும் ஒவ்வொரு மாதராக சப்த மாதர்களும் வெளிவந்தனர்.

ஒவ்வொரு தேவனுக்குரிய வடிவம், வண்ணம், வாகனம், ஆயுதம், ஆபரணம் இவற்றினூடே சக்தியும் தோன்றினாள். சண்டிகை குதூகளித்தாள். அப்படித்தான் பிரம்மனிடமிருந்து அவனது சக்தியான பிராம்மணி வெளிப்பட்டாள். இங்கு பாருங்கள். இத்தலத்தின் விசேஷமான சக்ரவாஹம் போன்றே பிராம்மணியானவள் ஹம்ஸ எனும் மோட்ச நிலையை குறிக்கும் சொற்றொடரான ஹம்ஸ விமானத்தில் அமர்ந்து வந்தாள். அப்பேற்பட்ட பிராம்மணி கையில் அட்சமாலையுடனும், கமண்டலத்தோடும் அமர்ந்து இத்தல ஈசனை பூஜித்துச் சென்றாள். அவள் அரக்கர்களை அழிக்கத்தான் ஆயுதங்கள் பெற்றுச் சென்றதாகவும் கூறுவர்.

அநவித்யநாதசர்மா தம்பதி இவ்வாறு ஆதிசக்தியும், பிராம்மணியும் தவமியற்றி தம்மை கரைத்துக் கொண்ட தலத்தில் நின்றார். இந்த இரு மகா பெண் சக்திகளும் வணங்கிய தலத்தில் நிற்கும் பெரும்பேறு கிட்டியதே என்று மகிழ்ந்தார். சக்ரவாகேஸ்வரரை தரிசித்துவிட்டு சக்ர மங்கையான தேவநாயகியை காண பெண்ணின் ஏழு பருவங்களில் ஒன்றான பேதை (சிறுமி) வடிவனளாக அம்பாள் காட்சி தந்தாள். பெண்ணின் முழுமையை நோக்கிய பயணத்தில் முதல் அம்சமான பேதை எனும் பருவத்தில் சக்தி அங்கு நிலை கொண்டிருப்பதை உணர்ந்து வணங்கினார்.

இத்தலம் திருஞானசம்பந்தரால் பாடல்பெற்ற தலமாகும். மிகப் பழமையான ஆலயமாக இது விளங்குகிறது. கோயிலின் கருங்கற் சுவற்றில் சக்ரவாஹப் பறவை பூஜிப்பது போன்ற சிற்பம் நம்மை நெகிழ்த்துகிறது. ஈசன் சக்ரவாகேஸ்வரர் மூலவராக கருவறையில் பேரருள் புரிகிறார். தியானத்தில் மூழ்கிக் கிடக்கும் ரிஷியின் சாந்நித்தியத்தை அளித்து திகைக்க வைக்கும் சந்நதி அது. மோட்ச ஆனந்தத்தின் கீற்றை இங்கு சர்வ சாதாரணமாக உணரலாம்.

அம்பாளின் வலது திருவடி பக்தர்களை ரட்சிக்க புறப்படும் பொருட்டு ஒரு அங்குலம் முன்வைத்திருப்பது விசேஷமாகும். பிராகாரத்திலுள்ள தட்சிணாமூர்த்தியின் மீது ஐந்து தலை நாகம் குடைபிடித்து அதன்மேல் ஆலமரமும், கரங்களில் நாகாபரணமும் பூண்டு அமர்ந்திருப்பது வேறெங்கும் காண முடியாததாகும். நாமும் இந்த சக்கராப்பள்ளி எனும் சக்ரமங்கையை வழிபட்டு அடுத்ததான ஹரிமங்கைக்கு செல்வோமா?

தஞ்சாவூர் - கும்பகோணம் சாலையில் சுமார் 14 கி.மீ. தொலைவிலுள்ள அய்யம்பேட்டை எனும் ஊருக்கு அருகே சக்கராப்பள்ளி எனும் இத்தலம் உள்ளது.

அரிமங்கை

வைகுண்டத்திலிருந்து திருமாலை பிரிய நேரிட்ட திருமகள் இனி எப்போதுமே எம்பெருமானை விட்டு அகலக்கூடாது என்று புவியில் பல்வேறு தலங்களில் தவமியற்றினாள். ஹரிக்கு எப்போதுமே நெல்லிக்கனி உகந்தது. அதனால், மகாலட்சுமி அரிநெல்லிக்கனியை மட்டும் உண்டு மானுடப் பெண்ணாக இத்தலத்தின் சத்திய கங்கை தீர்த்தத்தில் ஈசனை நோக்கி பன்னெடுங்காலம் அருந்தவம் புரிந்தாள். சௌகந்திகா எனும் ஆயிரம் இதழ் கொண்ட மலர் மலர் மலர்ந்தது. இது திருமாலுக்கு திருமகளின் இருப்பிடத்தை வழிகாட்டியதால், தாமரை இதழ் பாதையே ஸ்ரீமார்கம் ஆயிற்று. ஸ்ரீதிருமகள், மார்க்கம் பாதை அதாவது திருமகள் இருக்கும் இடத்திற்கான நல்மார்க்கத்தை காட்டிய மார்கநல்லூரே இன்று சிறுமாக்க நல்லூர், செருமாக்க நல்லூர் என்றானது. இவ்வூர் அரிமங்கைக்கு அருகேயே உள்ளது. சிறுமாக்க நல்லூர் வழியாக பாதயாத்திரையாக அரிமங்கைக்கு சென்று வந்தால் எளிதில் திருமகளின் அருள் கிட்டும் என்பர்.  

கயிலாயம், ஸ்ரீவைகுண்டம் போன்ற இரு திவ்ய தேசங்களும் ஒருமித்து முக்தியைத் தந்தால் எப்படியிருக்குமோ அப்படிப்பட்டது இத்தலம். இங்கு ஸ்ரீஞானாம்பிகை சமேத ஹரி முக்தீஸ்வரர் எனும் திருநாங்களோடு இறைவனும், இறைவியும் அருள்கின்றனர். தேவிக்கு சம்பூர்ண மகாலட்சுமி என்றும், பூதேவிக்கு சிந்தூர பூமாதேவி என்றும், ஸ்ரீஉதீட்சராஜப் பெருமாள் எனும் திருநாமங்களோடு அருள்பாலிக்கின்றனர். இவ்வாறு இவர்கள் தனிச் சந்நதிகளில் அருள்வது என்பது தரிசிப்பதற்கு அரிதான விஷயமாகும். தீட்சம் என்றால் பார்த்தல் என்று பொருள். உதீட்சம் என்றால் எப்போதும் இமைப்பொழுதுகூட கண்களை மூடாது நோக்கிய படியே இப்பெருமாள் இருக்கிறார் என்பது பொருள். சதாசர்வ நேரமும் ஈசனும் திருமாலும் கருணையை பொழிந்தபடி இருக்கின்றனர். இவர்களின் மீது அதீத பக்தி கொண்டு வருவோரை புண்டரீக மகரிஷி ஹரிஹர சின்முத்திரை பொறித்து மோட்சப் பாதைக்கு திருப்புகிறார் என்கின்றனர், சித்த புருஷர்கள்.  

பார்வதி தேவியானவள் சக்ரமங்கையை வழிபட்டு சப்தமாதர்களின் வழிகாட்டுதல்படி ஹரிமங்கை என்கிற இன்றையை அரிமங்கைக்கு வந்தாள். தலம் தொட்டதும் தமையனாரான விஷ்ணுவின் நினைவும் கூடவே வந்தது. ஆஹா... அண்ணனும் அரனை இங்கு வழிபட்டிருக்கிறாரே என்று மகிழ்ந்தாள். ஹரிமுக்தீஸ்வரர் எனும் சுயம்பு லிங்கத்தினின்று பொங்கும் பேரருளின் முன்பு அமர்ந்தாள். நெஞ்சு நிறைய நிம்மதி பரவ புஷ்பங்களை கொண்டு அர்ச்சித்தாள். விதம்விதமாக ஸ்தோத்திரங்களை கூறியும், இனிய கானங்களை பாடியும் ஆராதித்தாள். நேத்ர தரிசனம் காட்டிய ஈசன் இத்தலத்தில் ஞான கங்கையின் தரிசனத்தை காட்ட கனிவு கொண்டார்.

அம்பிகை தீவிர தவத்தில் எல்லையில்லா பெருஞ்சக்தியான ஈசனோடு கலந்திருந்தபோது திடீரென்று தமக்குள் ஏதோ ஒன்று கொப்பளித்தது. கண்திறந்து பார்க்க உள்ளுக்குள் கொப்பளித்த ஞான கங்கை வெளியேயும் புனித கங்கையாக நீர் வடிவில் நகர்ந்தாள். ஈசன் மாபெரும் ஒளிக்கு மத்தியில் உச்சி சிரசில் கங்கை பொங்க காட்சியளித்தார். இன்றும் இத்தலத்தின் தீர்த்தமாக சத்தியகங்கைத் தீர்த்தம்தான் விளங்குகிறது. நேத்ர தரிசனம் ஞானாக்னி மயமானது. இந்த கங்கையோ தண்ணிலவான தெள்ளிய ஞானம் கொண்டவள். ஆனால், இரண்டும் ஞானத்தைத்தான் தரும். சப்த மாதர்களின் ஒருவளான மாகேஸ்வரி என்பவள் வழிபட்ட தலமிது.

தேவி பாகவதம் கூறும் சண்டிகைக்கு உதவியாக வந்த மாதர்களில் இவள் இரண்டாமவள். கம்பீரமாக காளையின் மீதமர்ந்து வந்தாள். காளை ஈசனுக்கு உரியது. இவளும் மகேஸ்வரனிடமிருந்து உத்பவித்தவள்தான். எனவேதான் மாகேஸ்வரி ஆனாள். கையில் திரிசூலத்தோடும் நாகத்தையே வளையலாக அணிந்தும் திருமுடியில் சந்திரகலை திகழ இத்தல  ஈசனை பூஜித்து பலம் பெற்று அரக்கனை அழிக்கச் சென்றாள். ஆதிசக்தியும், மாகேஸ்வரியையும் தொடர்ந்து அநவித்யாசர்மா தம்பதி இத்தலத்திற்கு வந்தனர். குளிரக் குளிர ஞான கங்கையில் நனைந்து, ஹரிமுக்தீஸ்வரரை தரிசித்து ஞானாம்பிகையை தரிசித்தபோது சக்ரமங்கையில் பெண்ணின் பருவத்தில் பேதையாக காட்சியளித்தவள் இங்கு பெதும்பை (பள்ளிப் பருவம்) பருவத்தினளாக காட்சியளித்தாள்.

தஞ்சாவூர் - கும்பகோணம் பாதையிலுள்ள அய்யம்பேட்டை கோயிலடிக்கு 3 கி.மீ. தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது. செருமாக்க நல்லூரிலிருந்து ஆட்டோ வசதி உண்டு.

சூலமங்கலம்

ஈசனின் ஆயுதங்களும் தனித்துவம் பெற்றவை. அவர் கைகளில் தாங்கியிருக்கும் ஆயுதத்திற்குப்பெயர் அஸ்திர தேவர் என்று பெயர். இவராலேயே ஈசனுக்கு சூலபாணி எனும் திருநாமமும் ஏற்பட்டது. அப்படிப்பட்ட அஸ்திரதேவர் இத்தலத்தில் உறையும் கிருத்திவாகேஸ்வரர் எனும் திருநாமத்தோடு பொலியும் ஈசனை பூஜித்து தவமியற்றினார். சிவம் தோன்றினார். பக்தியில் சூலம் குழைந்து நின்றது. ஆனாலும், ஈசன் கூர்மையாக நோக்கி பேசத் தொடங்கினார். ‘‘எப்போதும் என் ஆயுதமாக இருக்கும் நீ, பக்தர்கள் கொண்டாடும் திருவிழா காலங்களிலும், தீர்த்தவாரி விழாக்களிலும் எனக்கு முன்பு கம்பீரமாக நீ செல்வாயாக’’ என்று வரத்தையே ஆணையாகவும் இட்டார். அதிலிருந்து சகல சிவாலயங்களிலும் முதலில் அஸ்திர தேவர் எனும் சூல தேவருக்குத்தான் முதல் பூசையும்கூட நடைபெறும்.

இத்தலத்தின் நாயகரான கிருத்திவாகேஸ்வரரும் சிறப்பு வாய்ந்தவராவார். கரிஉரித்த நாயனார் என்றொரு வேறு பெயரும் உண்டு. அதாவது யானையை உரித்து தோலை போர்த்திக் கொள்ளும் பெரும் வதத்தை செய்த விஷயம் அது. அதேபோல கிருத்திவாகேஸ்வரர் என்பதும் ஒரு வதத்தினால் வந்த திருப்பெயர்தான். கயாசுரன் என்பவன் எல்லா இந்திராதி தேவர்களையும், முனிவர்களையும் கொடுமைப்படுத்தினான். யாராலும் ஒன்றும் செய்ய முடியவில்லை. எல்லோரும் பயந்து காசிக்கு வந்தனர். கயாசுரனும் காசியை அடைந்தான். அவனைக் கண்டு அஞ்சியவர்கள் விஸ்வநாதப்பெருமானை அணைத்துக் கொண்டனர்.

அவர்களைப் பிடித்து கொல்லப் பாய்ந்தவன் முன்பு ஈசன் பேரொளி பெருஞ்ஜோதியாகத் தோன்றினார். அவனை உதைத்தார். ரத்தம் வழிய கீழே விழுந்தவன் தூக்கி நிறுத்தி யானையை உரித்ததுபோல கயாசுரனின் தோலை உரித்து போர்த்திக் கொண்டார். சகல தேவர்களும் மகிழ்ந்தனர். காசியிலுள்ள மணிகர்ணிகை கட்டத்தில் லிங்கமாக எழுந்தருளினார். அவரைத்தான் கிருத்திவாகேஸ்வரர் என்று எல்லோரும் அழைத்தார்கள். அப்படிப்பட்டவரிடம்தான் இந்த சூல தேவர் இத்தலத்தில் அமர்ந்து பூஜித்து வரம் பெற்றார் என்றால் என்னவொரு பொருத்தம் பாருங்கள். சூலத்திற்கும் வதத்திற்கும் தொடர்பு உண்டல்லவா? அஸ்திர தேவரான சூல தேவரின் சிலையை கோயிலின் உள் வாயிலில் காணலாம்.

ஆதிசக்தியான பார்வதி தேவி சூலமங்கலத்திற்கு வந்தாள். லிங்க ரூபமான கிருத்திவாகேஸ்வர சுவாமியின் திருப்பாதம் படர்ந்தாள். சிவச்சின்னங்கள் உணர்த்தும் அனுபூதிப் பூர்வமான பேருணர்வுகளையும் பிரபஞ்ச சக்திகளை உணர்ந்தும் தரிசித்தும் தொடர்ந்து வந்தவள் ஈசன் இங்கு எதை தமக்கு அருளப்போகிறாரோ என்று அமர்ந்தாள். தவத்தின் கூர்மையில் தமக்குள் வெகு ஆழத்தில் சென்றாள். செங்கதிர் வேந்தன் ஈசன் தோன்றினான். கண்களை கூசும் பேரொளி அங்கு படர்ந்தது. கைகளில் சூலத்தை ஏந்தியவாறு ஈசன் காட்சியளித்தார். ஆணவம், கண்மம், மாயை இவை மூன்றும் விலக்கத்தக்கது. எங்கு இது அதிகமாகிறதோ அதை அடக்கத்தான் இந்த சூலம் என்பதை சொல்லாமல் சொன்னார். முக்குணங்களை உணர்த்தவே இந்த திரிசூலம். சூலம் என்பது முக்குணங்களும் இணைந்ததான ஒரு சக்தி. இவற்றிற்கெல்லாம் அதிபதியே அந்த பரமேஸ்வரர்.

நான் எனும் அகங்காரத்தை நாசம் செய்பவர்தான் இந்த அஸ்திரதேவர். இது உடலையும் தாண்டி உள்ளுக்குள் ஏற்படும் ஆணவ நாசத்தை உணர்த்தும் விஷயமே இந்த சூல தத்துவமாகும். சப்த மாதர்களில் கௌமாரி வழிபட்ட தலமிது. சும்ப நிசும்ப ரக்த பீஜ வதத்திற்கு முன்பு சண்டிகைக்கு துணையாக வந்தவள். கோலமயில் வாகனத்தில் வந்த இவள் குமரப் பெருமானின் சக்தியான கௌமாரியே ஆவாள். வேலவனுக்கே உரிய வேலாயுதத்தையே ஆயுதமாக ஏந்தி வந்து இந்த ஈசனடி பரவி பலம் பெற்று போர்க்களம் நோக்கி ஓடினாள். சூல மங்கையில் வேல் மங்கையான கௌமாரியும் பூஜித்தது எத்துணை ஆச்சரியம்.

அந்த திவ்ய அநவித்யநாத சர்மா சர்மா நெகிழ்ந்து இத்தலத்தை அடைந்தார். ஆஹா... எப்பேற்பட்ட தெய்வங்கள் தரிசித்த பெருந்தெய்வம் என நெக்குருகி நின்றனர். கீர்த்திவாகேஸ்வரரையும் அம்பாள் அலங்காரவல்லியையும் கண்குளிர தரிசித்தார். அம்பாளை மங்கையாக இங்கு தரிசித்தார்கள். இதை பூப்பருவம் என்பார்கள். ஆதிசக்தியானவள் நானும் உங்களைப் போலத்தான் எமக்குள்ளும் பருவங்கள் உண்டு. அது ஈச நியதி. ஆயினும் அதையும் தாண்டிய நிலையும் உண்டு நம்மிலிருந்து நாதன் நிலை வரை அழைத்துப் போவதற்காகவே இப்படி இந்த தரிசனங்கள் என்கிறாள். கிருத்திகை என்பது ரிஷி பத்தினிகளையும் குறிக்கும் பதம்.

ரிஷி பத்தினிகளிடம் வாசம் செய்பவர் என்ற பொருளுடனும் இங்கே கிருத்திவாகேஸ்வரர் எனும் திருநாமம் பெற்றுள்ளதாக கூறுவர். பெண்களுக்கு உயர்வைத் தரும் சிவப்பதி இது. இத்தலத்தில் ஆலமரமின்றி ஜடாமுடியோடு தட்சிணாமூர்த்தி அருள்கிறார். சனி பகவான் தன் குருவான பைரவருடன் அருகருகே நின்று அருள்பாலிப்பது அரிதான தரிசனமாகும். சூல விரதம் என்றே தனியாக ஒன்றுண்டு. இதை சூரியன் மகர ராசியில் இருக்கும்போது அதாவது தை அமாவாசையன்று சிவபெருமானை உள்ளத்தில் வைத்து ஒருபொழுது உணவு உட்கொண்டு சிவாலய தரிசனத்தை முக்காலம் செய்து இந்த விரதத்தை நிறைவு செய்ய வேண்டும். மகாவிஷ்ணு உட்பட பலர் இந்த விரதத்தை மேற்கொண்டதாக பிரமாண்ட புராணம் கூறுகிறது. சூல விரதம் மேற்கொண்டோரை விரோதிகள் நெருங்க முடியாது என்றும் புராணம் பகர்கிறது.

தஞ்சாவூர் - கும்பகோணம் பாதையில் அய்யம்பேட் டையிலிருந்து சுமார் 1 கி.மீ. தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது.

நல்லிச்சேரி  நந்திமங்கை

திருவையாறு தலத்தில் ஐயாறப்பர்தான் நந்திதேவருக்கு நந்தி எனும் திருநாமத்தோடு பஞ்சாட்சரத்தையும் ஓதினார். தர்மத்தின் வடிவான நந்தியையே தமது வாகனமாக்கி ஈசன் அதன் மீதேறி அமர்ந்தார். திருமழபாடியில் நந்தி தேவருக்கு திருமணம் நடைபெற்றது. அப்படி திருமணத்திற்கான ஒவ்வொரு விஷயங்களுமாக மொத்தம் ஏழு தலங்களிலிருந்தும் ஏழு விஷயங்கள் கொணரப்பட்டது. அவையே ஈசனின் சப்த ஸ்தானங்கள் ஆனது. அதேபோல இந்த நல்லிச்சேரி எனும் தலத்திற்கு நந்தி மங்கையில் பஞ்சாட்சரத்தை ஜபித்து ஈசனை பூஜித்தார். ஈசனின் திருக்கழல் ஸ்பரிசத்தை உணர்ந்த எனக்கு அந்த திருப்பாத தரிசனம் எப்போது கிட்டும் என்று ஏக்கத்தோடு தீவிரமாக பூஜித்து தரிசனம் பெற்றாராம். இவ்வாறு நந்தி திருக்கழல் தரிசனம் பெற்ற தலம் இதுவேயாகும்.

நந்தி தேவர் வழிபட்டதற்கான புடைப்புச் சிற்பத்தை ஆலயத்தில் காணலாம். சூல தரிசனம் பெற்ற ஆதிசக்திதாயானவள் இத்தலம் நோக்கி வீறு நடைபோட்டு வந்தாள்.  திருவானைக்கா போல ஈசனுக்கு இத்தலத்தில் ஜம்புநாத சுவாமியாகும். அம்பாளுக்கு அகிலாண்டேஸ்வரி எனும் அழகிய நாமம். லிங்க வடிவில் வீற்றிருந்த ஈசனின் முன்பு அமர்ந்தாள். அடிமுடி காண முடியாத ஈசனின் திருவடியை தேடினாள். அது எல்லை காணாத விஷயம் என்பதை அறிந்தவள் தம் இருதயக் குகையில் சிக்கெனப் பிடித்தாள். எப்போதும் கால் தூக்கி நடனமிட்டபடியிருக்கும் சிவனாரின் தாண்டவத்தையும் உலக இயக்கமே இந்த தாண்டவச் சுழற்சிதான் என்பதையும் தெளிவாகப் பார்த்தாள்.

திருப்பாதத்தின் மேலுள்ள அந்தக் கழலையும் கண்டாள். அன்று இத்தலத்தில் நந்தி தேவருக்கு திருக்கழல் காட்டியவன் இன்று அம்பிகைக்கும் அதே தரிசனத்தை காட்டியருளினார். இங்கு சென்றால் இன்ன தரிசனம் கிட்டும் எப்படி அறிந்து வந்திருக்கிறாள்? பிரபஞ்சத்தின் வட்டச் சுழற்சியை உணர்த்தும் கழலின் அழகை கண்டு தன்னை மறந்தாள். தன்னில் ஓர் அம்சத்தை அங்கேயே அழகாக நிலைநிறுத்தி அலங்காரவல்லியானாள். பின்னாளில் எவரேனும் தன்னையும் சேர்ந்தே தரிசிப்பார்கள் என்றே. சப்த மாதர்களில் வைஷ்ணவி வழிபட்ட தலம் இது. தேவி மகாத்மியத்தில் சண்டிகைக்கு உடனாக நின்றவள். கருடன் மீதேறி, சங்கமும் சக்ரமும் கதையும் சார்ங்கம் எனும் வில்லும், நந்தகீ எனும் வாளும் ஏந்தி வந்த விஷ்ணுவிடமிருந்து வெளிப்பட்ட நீல நிற நாயகி இவள். ஜம்புகேஸ்வரரை வழிபட்டு பேறு பெற்றாள். வலிமையும் உற்றாள்.

அநவித்யநாத சர்மா தமது பத்தினியோடு இத்தலத்திற்கு வந்து ஜம்புகேஸ்வரரையும், அலங்காரவல்லியையும் தரிசித்தார். அம்பாள் மடந்தை எனும் கன்னியாக காட்சியளித்தார். இங்கே என்னவொரு அற்புதமான ஒப்புமை பாருங்கள். திருவானைக்கா அகிலாண்டேஸ்வரி எப்படி கன்னிகையோ அதுபோல இங்கேயும் அகிலாண்டேஸ்வரி என்கிற அதே நாமத்தோடு கன்னிகையாகவே அருள்கிறாள். அதே தரிசனத்தைத்தான் அநவித்யநாத சர்மாவும் பெற்றிருக்கிறார். இத்தலத்தில் காசியைப்போல் அருகேயே மயானமும் அதை நோக்கிய சிவ சந்நதியும் இருக்கிறது. சூரிய பூஜை நடைபெறும் தலம். வெள்ளெருக்கு இத்தலத்தின் தலவிருட்சமாக உள்ளது.

தஞ்சாவூர் - கும்பகோணம் பாதையில் தஞ்சையிலிருந்து 12 கி.மீ. தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது. மெயின்ரோடிலேயே இக்கோயிலுக்குச் செல்வதற்கான வளைவு உண்டு. அதிலிருந்து 1 கி.மீ. உள்ளே சென்றால் கோயிலை அடையலாம்.


பசுபதிகோவில்

கோச்செங்கட் சோழனால் கட்டப்பட்ட மாடக்கோவில் இது. காமதேனு எனும் பசுவானவள் பதியான ஈசனை நோக்கி தவமிருந்த தலம். பசுவால் கண்டறியப்பட்ட தலங்களும், அதே நேரத்தில் ஒரு பசு பால் சொரிந்து ஈசனுடைய திருமேனியை வெளிப்படுத்திய தலங்கள் என்று நிறைய உண்டு. அதுபோல இங்கு எழுந்தருளியிருந்த ஈசனுக்கு பாலாபிஷேகம் புரிந்து
சிவதரிசனம் பெற்றது. பசு பூஜித்தல் என்பதே சகல தேவர்களும் அவற்றுள் நின்று பூஜித்தமைக்கு இணையாகும். இத்தல அம்பாளின் திருப்பெயர் பால்வளநாயகி என்பதாகும். மேலும், அகத்தியரால் வழிபடப்பட்ட தலமாகும்.

ஒவ்வொரு தலங்களாக தரிசித்தும், சிவச் சின்னங்களின் வெளிப்புற மற்றும் அவை உணர்த்தும் சக்திகளின் பிரமாண்ட தரிசனங்களை பெற்றும் இத்தலத்திற்கு வந்தாள். பாற்கடலுக்குள் வந்து விட்டதாக உணர்ந்தாள். பால் மணமும் ஈசனின் அருள் மணமும் அவளை உருக வைத்தது. பசு எனும் உயிர்களுக்கெல்லாம் பதியான ஈசனின் எதிரில் அமர்ந்தாள். ஒவ்வொரு தரிசனமாகப்பெற்றவள் இத்தலத்தின் ஈசன் நாதங்களின் ஆதிநாதத்தை கேட்டாள். அந்த உடுக்கை எனும் டமருகத்திலிருந்து பிரணவமான ஓம் எனும் நாதம் அகில உலகையும் அணைப்பதை கண்டாள். ஓம் எனும் பிரணவத்திலிருந்து சப்த பிரபஞ்சம் உருவாவதை அறிந்தாள்.

அதுவே சகல ஓசைகளுக்கும் அடிநாதமாக அமைந்திருப்பதை அறிந்தாள். சப்த பிரபஞ்சமாக அதே ஓம் உடுக்கையிலிருந்து அலைஅலையாக வெளிப்படுவதை புறச் செவி வழியாயும், அகச் செவி மூலமும் உணர்ந்தாள். ஒலியின் ஆதாரமும் ஈசன்தான் என்று அறிந்து உடுக்கையை கைகூப்பித் தொழுதாள். உடுக்கையே அகில உலகையும் படைப்பதையும் புரிந்து கொண்டாள். சப்தங்களிலிருந்துதான் வேதங்கள் அந்த வேத சப்தங்களிலிருந்துதான் உலக உற்பத்தி என்பதை அந்த கணமே அறிந்தாள். அடுத்த தலம் நோக்கி நகர்ந்தாள்.

சப்த மாதர்களில் வாராஹி வழிபட்ட தலம் இது. வேத தர்மங்களை காப்பதற்காக வராஹர் எப்படி பூமியை அசுரனிடமிருந்து தூக்கி நிறுத்தினாரோ அதேபோல இங்கு மகாகாளி அசுரர்களை அழிப்பதற்காக எடுத்த அவதாரங்களின்போது வராஹரிடமிருந்து இவள் வாராஹியாக வெளிப்பட்டாள். அந்த வாராஹியே இத்தல பசுபதிநாதரை வழிபட்டாள். அநவித்யநாதசர்மா தம்பதி பசுபதிநாதரையும், பால்வளநாயகியையும் கண்குளிர தரிசிக்கும்போது அரிவை எனும் தாய்ப்பருவத்தில் காட்சி தந்தாள். அகத்தியர் தரிசித்த கோயில்கள் பொதுவாகவே சிவசக்தி திருமண கோயில்களாகவே இருக்கும். இங்கே அநவித்யசர்மா தரிசிக்கும்போது தாயாக இருந்தாள் என்பதும் கவனிக்கத்தக்க அம்சமாகும். இக்கோயிலில் உள்ள உச்சிஷ்ட கணபதியையும், கன்னி மூலையில் உள்ள ஜேஷ்டா தேவியையும் தரிசிப்பது அவசியமாகும்.

தஞ்சாவூர் - கும்பகோணம் பாதையில் பாபநாசத்தை அடுத்து இத்தலம் அமைந்துள்ளது.

தாழமங்கை

தட்சன் சந்திரனை சாபமிட்டான். தன் மகளான ரோகிணியை மட்டும் நேசித்து மற்றவர்களை அலட்சியம் செய்வதற்காக கொதித்துப்போய் சாபமிட்டான். தான் பெற்ற குழந்தைகளுக்காக சந்திரனைச் சந்தித்தான். நீ தகாத காரியம் செய்கிறாய் என அறிவுறுத்தினான். அவன் அறிவுரையை சந்திரன் அலட்சியம் செய்தான். ஆரவாரமாய் பேசினான். தட்சன் தீப்பிழம்பானான். ‘‘உன் அழகு குறித்து உனக்கு இவ்வளவு கர்வமா. அப்படிப்பட்ட உன் அழகு குலையட்டும். உன் சக்தி குறையட்டும். உன் பிரகாசம் மங்கட்டும்’’ என்று கடுமையாய் சபித்தான். அவன் கோபம் சந்திரனை நிலைகுலையச் செய்தது. மெல்ல தான் சுருங்குவதைக் கண்டு மிரண்டான்.

சந்திரன் எனும் சோமன் தன் சோபையை இழந்தான். தன் ஒளி மங்கி கருமையாய் தேய ஆரம்பித்தான். துண்டு துண்டாய் உடைய ஆரம்பித்தான். பகுதி பகுதியாய் சிதைய ஆரம்பித்தான். தான் செய்த தவறுக்காக மனதிற்குள் குமைந்தான். தாழமங்கை எனும் இத்தல ஈசனை வணங்கினான். முக்காலமும் இத்தலத்திலேயே அமர்ந்து பூஜித்தான்.  ஈசனும் சந்திரனுக்கு எதிரில் தோன்றி, ‘‘மூன்றில் முழுதாக்கி முத்தொளியை முன் முடியில் முத்தாய்பாய் முடிந்தோமே’’ என ஓதி, ஆதிசிவன் தன் சிரசில் மூன்றாம் பிறையை ஏற்றி அருளினார். ஒருகாலத்தில் தாழைவனமாக இருந்த இத்தலத்தில் நாகங்கள் நிறைந்த தாழையடியில் சந்திரனின் பத்தினி சதயதேவி கடுந்தவம்புரிந்து இத்தல அம்பாளான ராஜராஜேஸ்வரியின் தரிசனத்தைப் பெற்றாள். சந்திரன் பூஜித்ததால் சந்திரமௌலிஸ்வரர் என்றும், அம்பாளுக்கு ராஜராஜேஸ்வரி என்றும் திருப்பெயர்.

மங்களகரமான சுபிட்சமான திரவியங்களான மஞ்சள், குங்குமம், சந்தனம் போன்றவற்றின் உற்பவிப்பிற்கு ஆதிமூலவித்தாக சிருஷ்டிக் காலத்தில் விளங்கிய தலமே தாழமங்கையாகும். இப்படிப்பட்ட மங்களகரமான தலத்தினுள் ஆதிசக்தியானவள் ஆனந்தமாக நுழைந்தாள். குளிர்ந்த தன்னிலவாக மிளிர்ந்த சிவ சந்நதியின் அருகே அமர்ந்தாள். குளிர் தெள்ளோடை ஒன்று உள்ளுக்குள் அரூபமாகப் பொங்கியது. ஒவ்வொரு சிவச் சின்னங்களாக தவமிருந்தவளுக்கு இங்கு ஆதியில் சந்திரன் பூஜித்தான். தனக்கு இப்போது அந்த பிறை தரிசனம் கிட்டாதா என்று வேண்டினாள். ஈசனும் பிறையோடு எழுந்தருளினார். பிறை என்பதுதான் சிருஷ்டியின் முக்கியத்துவம் என்பதை உணர்த்தினார். மனதை உற்பவிக்கச் செய்பவனே சந்திரன்தான். சந்திரனின் சக்தியைப் பொறுத்துதான் மனதின் திண்மை அமைகிறது.

பிறை என்பது உலகை பார்க்க வைக்கும், நினைக்க வைக்கும், சிருஷ்டிக்க வைக்கும், ஆய கலைகளை உற்பத்தி செய்யும் விஷயம் என்பதை அறிந்து ஆனந்தப்பட்டாள். ஞான சூரியனான ஈசனிடமிருந்துதான் சந்திரன் சக்தியை கொணர்கிறான் என்பதையும் கண்களால் கண்டாள். அருவமாக தம் அம்சத்தை நிலைநிறுத்தினாள். ராஜராஜேஸ்வரியாக பேரழகுடன் பொலிந்தாள் என்பது கண்கூடான உண்மையாயிற்றே.  சப்தமாதர்களில் இந்திராணி வழிபட்ட தலம் இது. தேவி பாகவத சண்டிகையின் அசுர வதைப்படலத்தில் வெள்ளையானை மீது வஜ்ரப் படை தாங்கி, ஆயிரம் கண்களோடு எழுந்தருளிய இந்திராணி எனும் ஐந்த்ரீ இவள்.

இந்திரனின் சக்தியைத் தாங்கி அவனிடமிருந்து வெளிப்பட்டவள். அவளும் இத்தலத்திற்கு வந்து பூஜித்து பேறு பெற்று போர்க்களம் சென்றாள் என்பது தலபுராணம். சதய நட்சத்திரத்தில் பிறந்த மாமன்னனான ராஜராஜசோழன் மாதந்தோறும் சதய நட்சத்திரத்தன்று அம்பாளுக்கு சந்தன குங்கும சந்தனாதிகளை அரைத்து அம்பாளுக்கும், ஈசனுக்கும் சார்த்தி வழிபட்டான். அநவித்யநாத சர்மா தம்பதி இத்தலத்திற்கு வந்து தரிசனம் பெற்றபோது அம்பாள் தெரிவை எனும் பேரன்னையாக காட்சி தந்தாள். அன்னையின் அருளை உள்ளத்தில் தேக்கி அடுத்த தலமான திருப்புள்ளமங்கைக்கு நகர்ந்தார்.

தஞ்சாவூர் - கும்பகோணம் பேருந்து மார்க்கத்தில் 12 கி.மீ. தொலைவில் பசுபதிகோவில் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி கோயிலுக்கு நடந்தே கூட வரலாம்.

திருப்புள்ளமங்கை

இத்தலத்தை திருப்புள்ளமங்கை மற்றும் திருவாலந்துறை மகாதேவர் கோயில் என்றும் அழைப்பர். அதாவது தேவர்களும், அசுரர்களும் அமுதத்தை கடைந்தபோது தோன்றிய ஆலகால விஷத்தை இறைவன் அமுது செய்த இடம் என்கிறது தலபுராணம். இதனாலேயே ஆலந்தரித்த நாதர் என்று அழைக்கிறார்கள். பொங்கி நின்று எழுந்த கடல் நஞ்சினை பரமன் பங்கி உண்ட திருத்தலம் என்று இதை குறிப்பிடுகிறார்கள். பிரம்மா இத்தல ஈசனை பூஜித்து சாபவிமோசனம் பெற்றதால் பிரம்மபுரீஸ்வரர் என்று அழைக்கப்பட்டார். அல்லியங்கோதை எனும் திருப்பெயரில் அம்பாள் அருள்கிறாள்.

இக்கோயிலின் அஷ்டபுஜ துர்க்கை மிகவும் அழகாக அமைந்திருக்கும். மகிஷனுடைய தலையை பீடமாக கொண்டு சமபங்க நிலையில் நிற்கிறாள். ஒரு பக்கம் சிம்ம வாகனமும், மறுபக்கம் மான் வாகனமும் உள்ளன. தேவாரப் பாடல் பெற்ற தலமாகும். இத்திருக்கோயில் முதலாம் பராந்தக சோழனால் கட்டப்பட்ட கற்கோயிலாகும். கலை உலகத்தின் உச்சியான பல சிற்ப வேலைப்பாடுகளை இத்தலத்தில் காணலாம். மூலவர் விமானத்தின் கீழ் ராமாயணம், சிவபுராணம் மற்றும் நாட்டிய கரண சிற்பங்கள் அதிநுணுக்கத்தோடு செதுக்கப்பட்டுள்ளன.
ஆதிமாதாவான அன்னை சிவ தரிசனம் பெறும்பொருட்டு இத்தலத்தை அடைந்தாள். ஈசனின் ஒவ்வொரு சின்னங்களை தரிசித்தவள் ஈசனுக்கு அழகு சேர்க்கும் நாகாபரண தரிசனம் தனக்கு கிட்டாதா என்று கண்மூடி அமர்ந்தாள்.

அம்பாளின் தீந்தவத்தில் தனக்குள்ளேயே பொதிந்து கிடக்கும் நாகமான குண்டலினி எனும் சக்தி கிளர்ந்தெழுந்தது. ஒவ்வொரு சக்ரங்களாக மேலேறியது இறுதியில் சகஸ்ராரம் எனும் உச்சியை அடைந்து அதற்கும் ஆதாரமான இருதய ஸ்தானத்தில் சென்று ஒடுங்கியது. இந்த நாகாபரணம் எனும் குண்டலினியைத்தான் ஈசன் தன் கழுத்திலே சுற்றச் செய்திருக்கிறார். சகல ஜீவர்களுக்கு இந்த சக்தி பொதிந்து கிடப்பதையும் காலகிரமத்தில் யோக ரீதியில் மேலேறுவதையும் காட்டுவதற்காக நாகாபரணத்தை பூண்டிருக்கிறான் என்பதை தமக்குள்தாமாக அனுபூதியில் உணர்ந்து கொண்டாள்.

சப்த மாதர்களில் சாமுண்டி வழிபட்ட தலமிது. சகல சக்திகளும் ஒன்று சேர்தாற்போல சண்டிகையுடன் சாமுண்டி நின்றாள். அஷ்டநாகங்களோடு சிவலிங்கத்திற்கு புஷ்பங்கள் சார்த்தி பூஜித்தாள். இத்தலத்தை வணங்குபவர்களுக்கு நாக தோஷம் தீரும் என்பது நம்பிக்கை. அநவித்யநாத சர்மா தம்பதி இத்தலத்திற்கு வந்து தரிசனம் பெற்றபோது அம்பாள் பேரிளம்பெண் எனும் முதும்பெண்ணாக கனிமுது என்று சொல்லப்படும் பருவத்து வடிவினளாக காட்சி தந்தாள். இந்த ஏழு தலங்களையும் தரிசித்து ஆத்மானுபூதி அடைந்த தம்பதி மயிலாடுதுறை மயூரநாதரை தரிசித்து உடலைத் துறந்தனர் என்றும் ஒரு புராண வரலாறு உண்டு.

தஞ்சை - கும்பகோணம் பாதையில் பசுபதிகோவிலிருந்து 1 கி.மீ. தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது.  

இந்த ஏழு தலங்களையும் அனைவரும் நிச்சயம் தரிசிக்க வேண்டும். அதிலும் பெண்கள் நிச்சயம் தரிசிக்க வேண்டும். பெண்ணின் பருவங்களை இங்கு அம்பாளும் ஏற்று அதையும் தாண்டிய நிலையான முக்தியையும் காட்டியருளும் தலங்களாக இவை விளங்குகின்றன. ஏழு தலங்களும் யோக நிலையையும் உணர்த்துவதாக அமைந்துள்ளன. சப்த மாதர்களின் பூரண சாந்நித்தியம் ஏழு தலங்களிலும் நிறைந்துள்ளதை இத்தலங்களினுள் உணரலாம்.

இங்கு உறையும் மங்கைகள் தாய்மை பொங்கும் கருணை மிக்கவை. நீங்கள் வேண்டிக் கொள்வதை விட உங்களுக்கு எதுஎது நல்லது எவை அல்லாதது என்று பார்த்துப்பார்த்து தருவாள். இத்தலங்களை ஒரே நாளிலோ அல்லது ஓரிரு நாட்களிலோ கூட இக்கோயில்களுக்கு சென்று வந்தால் நிச்சயம் வளமானதும், தெளிவானதுமான வாழ்க்கையை பெறலாம். மங்கைகளின் மகத்துவம் தரிசிக்கும்போது நிச்சயம் எல்லோரும் உணர்வர்.

தொகுப்பு: கிருஷ்ணா

Tags : Sabta Mangai Thalas ,
× RELATED சப்த மங்கைத் தலங்கள்