×

குபேர வாழ்வு தரும் கும்பேஸ்வரர்

சோழ தேசத்தின் ரத்னப் பதாகைபோல விளங்குவது குடந்தை. அமுதமும், ஈசனும், வேதமும், நான்முகனான பிரம்மனும் இத்தலத்தை உருவாக்கியதால் தனிப்பெரும் வசீகரத்தை இன்றளவும் பெற்றிருக்கிறது. பிரம்மா கலங்கிய கண்களினூடே மகாதேவனை பார்த்தார். ஈசன் பிரம்மனைப் பார்த்து ‘‘கவலை கொள்ளாதே நான்முகா. யாம் உறையும் புண்ணிய தலங்களிலிருந்து திருமண் கொணர்ந்து, அமுதத்தையும், புனித தீர்த்தமும் கலந்து அழியாத கும்பம் எனும் குடத்தை செய். அதன் மையத்தின் சிருஷ்டியின் ஆதாரங்களை வைத்து மூடு.

உன்னுடைய நான்முகத்தினின்றும் எதிரொலித்துத் தெறிக்கும் வேத வரிகளை அதில் அலை அலையாக நிரப்பு. ஆகமங்களை ஆனந்தமாக கலந்து, புராண இதிகாசங்களை நாற்புறமும் வைத்து, இன்னும் நிறைய அமுதம் பெய்து மாவிலை சொருகி, தேங்காய் வைத்து தர்ப்பையை படரவிட்டு, பூணூலைச் சார்த்தி, வில்வ தளங்களால் அர்ச்சித்து உறியிலேற்று.

மேருவின் மேல் பகுதியில் சரிந்திடாமல் நிறுத்திடு. ஆழி ஊழிக்காலம் அசைந்து வரும்போது மேருவின் மேலிருக்கும் கும்பமும் அசையும். மெல்ல நகர்ந்து பாரத தேசத்தின் தென் திசையில் சென்று தங்கும். அங்கு சென்று கும்பத்தினின்று பெருகும் அமுத கலையான ஆதாரங்களை உமக்குள் ஏந்தி சிருஷ்டியை தொடரலாம்’’ என்றார், சிவன். அதனைக் கேட்ட பிரம்மனின் திருமுகம் சிவப் பிரகாசமாக ஜொலித்தது.

* பிரம்மா யுகம் தோறும் நிலைபெறப்போகும் அரும்பெரும் விஷயமான கும்பத்தை செய்து முடித்தார். அதற்காகவே காத்திருந்தது போல, பிரளயப் பேரலை விண்ணுற நிமிர்ந்து வந்தது. மேரு மெல்ல அதிர்ந்தது. அதன்மேல் அமர்ந்திருந்த அமுதக் கும்பம் நாட்டிய அசைவான ஒய்யாளிபோல இடதும் வலதும் அசைந்தது. பேரலை பெருவாய் பிளந்து வந்தாலும் அதன்மேல் படகுபோன்று கும்பம் மிதந்து ஈசன் திருப்பார்வை பதிந்த அவ்விடத்தில் நின்றது. அசைந்து வந்தது சுழன்று நின்றது. பம்பரமாக சுழன்ற கும்பக் கலசம் திருக்கலச நல்லூர் எனும் தற்போதைய தலமான சாக்கோட்டையாக மாறியது. கும்பம் சில காத தூரம் சென்று தங்கியது. உடனே ஊழியும் அடங்கியது. காந்தத்தினால் கவரப்படும் இரும்புபோன்று அமுதமும், சிருஷ்டி ஆதாரமும் கலந்திருந்த கும்பத்தினால் கவர்ந்திழுக்கப்பட்டார், பிரம்மா.

* சிவன் அத்தலத்தை அடையும் பொருட்டு வேடரூபம் தாங்கிவர, கணநாதரும் பிறரும் அவரைப் பரிவாரமாகத் தொடர்ந்தனர். உமாதேவியோடு தென் திசை நோக்கிச் செல்லுகையில் இடைமருதூர் எனும் திருவிடைமருதூருக்கு அருகில் நகர்ந்தனர். அமுதக் குடத்தை கண்ணுற்றனர். சாஸ்தா இறைவனின் திருவுளத்தை நிறைவேற்றும் பொருட்டு அழியாத அந்த மாய குடத்தை குறிவைத்து பாணம் தொடுத்தார். ஆனாலும், கும்பத்தை பிளக்க முடியவில்லை. ஈசன் இப்போது முன் வந்தார். பாணாதுறை எனும் இடத்தில் இன்றும் பாணபுரீஸ்வரர் ஆலயம் உள்ளது.

* சிவபெருமான் வேறொரு திக்கிலிருந்து பாணம் தொடுத்தார். இந்த கும்பத்திற்கு வாய் தவிர மூக்கும் இருந்தது. கமண்டலத்திற்கு இருப்பதுபோல, அது வழியாகத்தான் புனித தீர்த்தத்தை செலுத்த முடியும். அப்படிப்பட்ட மூக்கு வழியாக அமிருதம் வெளியேற வேண்டுமென்று பரமேஸ்வரன் நினைத்தார். பாணம் மூக்கை துளைத்தது. அது வழியாக அமுதம் வெளிவந்தது. கும்பத்தின் மூக்கிற்கு கோணம் என்று பெயருண்டு. அந்த கோணம் விழுந்த தலமே கும்பகோணம் என்றாயிற்று. தேவாரத்தில் இத்தலத்தை குடமூக்கு என்றே அழைத்தனர். அமுதப் பெருவூற்று புகுபுகுவென பொங்கியது. அமுதத் துளிகள் தனித் தனி குளமாக திரண்டன. ஒன்று மகாமக குளம் என்றும், மற்றொன்று பொற்றாமரை என்றும் அழைக்கப்பட்டன. இந்த மகாமக குளத்தில்தான் மாசிமக விழா சிறப்பாக நடைபெறும்.

* கங்கை, யமுனை, கோதாவரி, நர்மதை, சரஸ்வதி, காவிரி, குமரி, பயோடினி, சரயு ஆகிய 9 நதிகளும், பக்தர்கள் தம்மில் கழுவிய பாபங்களைப் போக்கிக் கொள்ள இங்குள்ள மகாமகக் குளத்தில் நீராடியதாக ஐதீகம். அவர்கள் கோயிலினுள் சிலை வடிவங்களில் குளத்தை நோக்கியபடி அமைந்திருக்கிறார்கள்.

* மகாமகக் குளத்தைச் சுற்றிலும் 16 மண்டபங்கள் உள்ளன. இவை சோடசலிங்க மண்டபங்கள் என்றழைக்கப்படுகின்றன.

* கலைகளும், செல்வ வளங்களும், ஆன்மிகமும் ஒன்றுக்கொன்று பின்னிக் கொண்டு படர்ந்தது கிடப்பது இத்தலத்தில்தான். ஆன்றோர்களும், சான்றோர்களும், பல்வேறு ரிஷிகளும் அவதரித்தது இங்குதான்.

* அப்பேற்பட்ட இத்தலத்தின் மையத்தே நெற்றியில் இட்ட திருநீற்றைப்போல், செஞ்சிவத்தின் தழல்போல கும்பேஸ்வரரின் ராஜகோபுரம் நெடிதுயர்ந்து நிற்கின்றது.

* நான்கு கோபுரங்களும், நான்கு வேதங்களை நினைவுபடுத்துகிறது. கோயிலின் விஸ்தீரம் மலைக்க வைக்கிறது. கல்கல்லாக தடவித் தெரிந்து கொள்ள சில ஆண்டுகளாவது பிடிக்கும்.

* சோழர்களுக்கு முன்பிலிருந்து நாயக்கர் காலம்வரை எத்தனை மன்னர்கள் மனமாற நேசித்து உருகி உருகி இக்கோயிலைச் செய்திருக்கிறார்கள். கல்வெட்டுகள் அதை பாங்காக வெளிப்படுத்துகின்றன.

* மிகப் பெரிய கோயிலாதலால் உள்ளிருக்கும் உள்சுற்றுப் பிராகாரத்திலுள்ள சில சந்நதிகளையும், தெய்வத் திருவுருக்களையும் தரிசித்துவிட்டு ஆதிகும்பேஸ்வரரை அடையலாம்.

* முதற்பிராகாரமாகிய மூலவர் சுற்றுப் பிராகாராத்தின் கீழ் வரிசையில் தென்பகுதியில் அறுபத்து மூவரின் உற்சவ மூர்த்திகளும், வட பகுதியில் கால பைரவர், சுரகரேசுவரர், சாஸ்தா, கோவிந்த தீட்சிதரின் லிங்க உருவும், அவருடைய பத்தினி நாகம்மாளும் அருட்கூட்டி வீற்றிருக்கின்றனர்.

* சந்திரன், சூரியன் ஆகியோரின் திருவுருவங்கள் உள்ளன. தெற்கு திசையில் சைவ சமயாச்சார்யார்கள் நால்வரும், அறுபத்து மூவரும், சப்த கன்னியர்களும் உள்ளனர்.

*  மேற்கு திசையில் விநாயகரும், தொடர்ந்து பிட்சாடனர், சுப்ரமணியர் இதையடுத்து தேஜோலிங்கம், அட்சயலிங்கம், கோடிலிங்கம் என சிவச்சக்தி சீராக பரவியிருக்கிறது.

* சுவாமி அம்பாளின் பள்ளியறையும், கிழக்குப் பகுதியில் கிராத மூர்த்தி எனும் வேடனாக வந்த சிவன் வில், அம்பு ஏந்தியவாறு தெற்கு நோக்கி காட்சி அளிக்கின்றார். இவரே இத்தலத்தின் மூர்த்தியாவார்.

* உட்பிராகாரத்தின் நடுநாயகமாக மூலவர் கும்பேஸ்வரர் சுயம்பு மூர்த்தியாக விளங்குகிறார்.

* இந்த லிங்க உருவே மெல்லிய குடச் சாயலை கொண்டிருக்கிறது. காலக் கணக்குகளாக அகப்படாத மூர்த்தி நாம் உய்யும் பொருட்டு அமர்ந்திருப்பது பார்க்க நெஞ்சில் ஒரு விம்மிதம் பரவுகிறது.

* அருளமுதம் எனும் சொல்லே இத்தலத்திற்குரியதுதான். ஏனெனில் கும்பேஸ்வரரே அமுதக் குடத்தினுள் பேரருள் பெருகி பரவியிருக்கிறார்.

* அமுதம் இருப்பதனால் மரணமிலாப் பெருவாழ்வு அளித்து தன் அருட்குடத்திற்குள் சேர்த்துக் கொள்கிறார்.

*  உலகத்தின் சகல வேத ஆகமத்திற்கும் ஆதார கும்பமாக இது விளங்குகிறது.

* எங்கு கும்பம் வைக்கப்படுகிறதோ அங்கு இந்த கும்பேஸ்வரர்தான் விரைந்தோடி வருகிறார்.  சந்நதியை அடைத்துக் கொண்டு எப்போதும் ஒரு அருவமாக அமுதப் பிரவாகம் பாய்ந்தபடி இருக்கிறது.

* சற்று நேரம் நின்றாலே வெளியுலகத்தை மறைத்து அக உலக அமுதத்தை பீறிட்டுக் கொண்டு வரும் அற்புதச் சந்நதி அது. நகர மனமில்லாமல் ஏதோ ஒரு சக்தி உந்த அத்தல சக்திபீட நாயகியான மங்களநாயகி சந்நதியை நோக்கி நகர்கிறோம்.

* மங்களத்தை விருட்சம்போன்று வளர்ப்பதால் ஞானசம்பந்தப் பெருமான் அம்பாளை வளர் மங்கை என்று தேவாரப்பதிகத்தில் குறிக்கிறார்.

* திருச்செங்கோட்டுத் தலத்தில் ஈசன் தம் பாதி சரீரத்தை கொடுத்ததுபோல, இறைவர் முப்பத்தாறாயிரம் கோடி மந்திர சக்திகளையும் அம்பாளுக்கு அருளினார். அதனால். மந்திரப் பீடேஸ்வரி என்றும், மந்திரபீட நலத்தள் எனவும் அழைக்கப்படுகிறாள்.

* அம்பாளின் உடற்பாகம் திருவடி முதல் திருப்பாத நகக்கணு வரை ஐம்பத்தோரு சக்தி வடிவ பாகங்களாக காட்சியளிக்கின்றன. ஆகவே மற்ற தலங்கள் ஒரு சக்தி வடிவத்தை பெற்றிருக்கிறது.

* இங்கோ சகல சக்திகளையும் தன் திருவுருவத்திலேயே பெற்று தலையாய சக்தி பீடமாக விளங்குகிறது. இவளை தரிசித்த மாத்திரத்தில் சகல பலன்களையும் அளித்து விடுவதில் முதன்மையானவள்.

* ஸ்ரீமுத்துசாமி தீட்சிதரால் இயற்றப்பட்ட இத்தல நாயக, நாயகியைப் பற்றிய அழகான கீர்த்தனையை இறைவன் முன்பு எழுதியுள்ளார்கள்.

* சித்தர்களில் முதன்மையான கும்பமுனி சித்தர் மங்களாம்பிகையையும், கும்பேசரையும் தியானித்து முக்தி பெற்றது இத்தலத்தில்தான்.

* வெளிப் பிராகாரத்தில் இவர் அமர்ந்த தனிச் சந்நதியில் ஆதி விநாயகரை பிரதிஷ்டை செய்து எழுந்தருள வைத்துள்ளனர். மொத்தம் பதினான்கு தீர்த்தங்களை தன்னகத்தே கோயில் இது.

* யுகாந்திரங்கள் கடந்த தலம், பல நூறு தெய்வத் திருவுருவங்கள் பொலிந்து விளங்கும் சந்நதிகள். மாமன்னர்களால் இழைத்து இழைத்து வார்க்கப்பட்ட சிற்பங்கள், புராணங்கள் சொல்வதை தூணுக்குத் தூண் கொண்டு வந்த சிற்பிகளின் இறை பக்தி என்று மனம் இக்கோயிலை வியந்து வியந்து மாய்ந்து போகிறது. எதை சொல்வது எதை விடுவது என்று உள்ளம் உவகையால் திணறுகிறது. தரிசிப்போர் பெரும்பாக்கியமுறுவர் என்பது உறுதி.

* அது மட்டுமல்லாது ‘‘கும்பகோணமாம் குபேரப் பட்டணமாம்’’ என்று ஒரு வழக்கு மொழி உண்டு. இத்தல நாதரை தரிசிக்க குபேர வாழ்வு வாழ்வர் என்பதும் திண்ணம்.

* கும்பகோணத்திற்கு சென்னை, மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருச்சி, திருவாரூர் என்று பல்வேறு நகரங்களிலிருந்து பேருந்து வசதிகள் உள்ளன.

Tags : Kumbeswarar ,
× RELATED க.பரமத்தி பகுதி சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு