×

நிழல் உலக தாதாக்கள் (ராகு - கேது)

ஒரு ஜோதிடன் என்பவன் துப்பறிவாளன் போல கிரகங்களின்  இயக்கங்களை துப்பறிந்து பலன்களை சொல்லுபவன். இந்த பிரபஞ்சத்தின் ஒற்றன் எனச் சொன்னால், அது கண்டிப்பாக மிகையில்லை. ஆனால், அவனையே பிரமிக்க வைக்கும் சக்தியை கொண்டுள்ளது இந்த இருள் கிரகங்கள் எனச் சொல்லப்படும் சாயா கிரகங்கள் (ராகு-கேது). சாயா கிரகங்கள் (ராகு-கேது) இருள் கிரகங்கள். இந்த கிரங்கள்தான் பல உண்மைகளை மறைத்து மர்மத்தை தருகின்றது.மர்ம வேலைகளை செய்வதில் ராகுவும் கேதுவும் கைத்தேர்ந்தவர்கள்.

மேலும், பல மாயத்தை செய்து கொண்டே இருக்கின்றனர். இவர்களின் நகர்வுகளிலும் பார்வைகளிலும் பல மர்ம முடிச்சுகள் இருந்து கொண்டே இருக்கின்றன. சில ஜோதிட பலன்கள் கூட மாறுபட்டு நடக்கிறது. இந்த மர்ம முடிச்சுகள் அவிலுமா என்பதும் என்றுமே கேள்வி குறியாகத்தான் இருக்கின்றது. அப்படிப்பட்ட இந்த மர்ம காரர்களின் மறுபக்கத்தை காண்போம்.

சாயா கிரகங்கள் என்ற ராகு-கேதுக்களின் புராணம்

புராணங்களில், காஸ்யப முனிவர் - அதிதி தம்பதிகளுக்கு பிறந்தவர்கள் தேவர்கள். காஸ்யபர் - திதி தம்பதிகளுக்கு பிறந்தவர்கள் அசுரர்கள் ஆவர்.
திருமாலை அடைந்த தேவர்கள் மரணமின்றி இளமையாகவும் சுகபோகமாகவும் வாழ வேண்டுதல் வைக்கின்றனர்.  அப்போது பாற்கடலில் அடியில் இருந்து கிடைக்கப் பெறும் அமுதத்தினால் அந்த வரத்தை பெறலாம் என அறிந்து, பாற்கடலை கடைவதற்கு மந்தார மலையை மத்தகாவும் விஷ்ணு பகவான் படுத்திருக்கும் வாசுகி பாம்பை கயிறாகவும் திருமாலிடம் பெற்றனர்.

பாற்கடலை கடைவதற்கு இன்னும் அசுரபலம் தேவைப்படவே தங்களின் அசுர சகோதரர்களை அதாவது பங்காளிகளை உதவிக்கு அழைத்து சென்றார்கள் தேவர்கள். அசுர சகோதரர்கள் தங்களுக்கு கிடைக்கும் அமுதத்தில் பாதியை தங்களுக்கு தர வேண்டும் என கோரிக்கையுடன் சென்றனர். இருவரும் சேர்ந்து பாற்கடலை கடைந்தனர். அச்சமயத்தில் பாறிகடலில் சந்திரன், காமதேனு, தன்வந்திரி, மகா லெட்சுமி ஆகிய அதிசயங்கள் வெளிப்பட்டன. இவற்றுடன் ஆலகால விஷமும் வெளிப்பட்டது அதனை சிவபெருமான உண்டார். இன்னும் இவர்கள் வெகு வேகமாக பாற்கடலை கடைந்தனர் அப்போது  மிகுந்த ஒளியுடன் பிரகாசமாக அமுதம் வெளிப்பட்டது.

அமுதத்தின் மேல் பகுதி தேவர்களுக்கும் அமுதத்தின் அடிப்பகுதி அசுரர்களுக்கும் என முடிவு செய்யப்பட்டது.அக்கணத்தில் தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் போட்டியின் காரணமாக மிகுந்த சண்டை ஏற்பட்டது.  திருமால் அசுரர்களுக்கு அமுதம் கிடைக்காமல் செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடன் மோகினி அவதாரம் கொண்டு அங்கு பிரதட்சனம் ஆனார். அசுரர்கள் மோகினியின் அழகில் மயங்கிய நிலையில் , ‘‘எங்களுக்கு மோகினியே அமுதத்தை பங்கிட்டு தர வேண்டும்’’ என கோரிக்கை வைத்து சண்டையை நிறுத்தினர்.

மோகினியும் முதலில் தேவர்கள் வரிசையில் அமுதத்தை பரிமாறத் தொடங்கினாள். அப்போது அசுரர்களில் ஒருவனான  சுவர்பானு என்பவனுக்கு சந்தேகம் ஏற்படவே, அவன் தேவர்களின் வரிசையில் சென்று அமர்ந்து கொண்டான். அவனுக்கும் மோகினி அவதாரம் கொண்ட திருமால் பரிமாறினார். இதை அவர் தெரிந்தே செய்தார். அச்சமயம், சூரியனும் சந்திரனும் அமுதம் பரிமாறுவதை பார்த்து, மோகினியின் காதில் கூறவே. திருமாலும் பரிமாற கையில் வைத்திருந்த  ஆயுதத்தால் சுவர்பானு என்னும் அரக்கனின் தலையில் பயங்கரமாக தாக்கினார். அந்த அரக்கனின் தலை துண்டாகி விழுந்தது. அமுதம் முழுவதும் தேவர்களுக்கு மட்டுமே பரிமாறப்பட்டது.

சுவர்பானுவால்தான் தங்களுக்கு அமுதம் கிடைக்கவில்லை என அறிந்து அசுரர்களும் தங்கள் குலத்திலிருந்து ஒதுக்கி வைத்தனர். தேவர்களும் ஏற்றுக் கொள்ளவில்லை. இறுதியில், சுவர்பானு தலை வேறு உடல் வேறாக இருந்த அவன் மகாவிஷ்ணுவிடம் மன்றாடி வேண்டி என்னை தேவர்களும் அசுரர்களும் ஒதுக்கி விட்டனர் எனக்கு நல் உபாயம் செய்ய வேண்டுதல் வைத்தான். திருமாலும் மனமிறங்கி தலையை பாம்பின் வாலுடனும் உடம்பினை பாம்பின் ஐந்து தலையுடனும் பொருத்தி நவகிரக மண்டலத்தில் உதயமாக வரம் கொடுத்தார்.

அப்படியே ராசி கட்டத்திற்குள் ராகு-கேதுக்கள் பிரசன்னம் ஆனார்கள். ராகுவானவர் உடலை இழந்தததால் தன் உடலைப் பெற கேதுவை நோக்கி நகர்வார். ஆதலால், ராகு உடல் சுகத்திற்காகவும் தன் தேவைகளுக்கான காரகங்களை நோக்கியே பயணிப்பார். கேதுவானவர் தலையை இழந்ததால் தன் தலையை பெற ராகுவை நோக்கி பயணிப்பார். ஆதலால், தலை என சொல்லக்கூடிய ஞானத்தை பெறக்கூடிய காரகங்களை நோக்கியே பயணிப்பார். இந்த இயக்கதிலே சூரியன் சந்திரனால் நாம் பாதிக்கப்பட்டோம் என்ற கோபத்தால் அவர்களை கடக்கும் காலத்தில் சூரிய, சந்திர ஒளிகளை இப்பூமியில் விழச்செய்யாமல் சூரிய, சந்திர கிரகணங்களை இந்த ராகு-கேதுக்கள் ஏற்படுத்துவர்.

அறிவியல் அடிப்படையில் ராகு-கேது

அறிவியல் அடிப்படையில் இவர்கள் கிரகங்கள் இல்லை. ஆனால், உலகில் நடக்ககூடிய நிகழ்வுகளுக்குள் இவர்களின் பங்கும் கண்டிப்பாக உண்டு. இந்த கிரகங்கள் இரண்டும் நிழல்களே. இவர்கள் நிழல்களாக இருப்பதால் மாய வேலைகளும் வைரஸ்களும் உருவாகின்றன. சூரியனிலிருந்து வெளிப்படும் கதிர்கள் பூமியின் மீது விழுந்து உருவாகும் நிழல் ராகுவாகவும் சூரியனிலிருந்து வெளிப்படும் கதிர்கள் சந்திரன் மீது விழுந்து பூமியில் விழுவதால் உருவாகும் நிழல் கேதுவாகவும் கூறப்படுகிறது.  ராகுவின் நிழல் கதிர்கள் மிகவும் இருள் தன்மையுடனும் கேதுவின் நிழல் கதிர்கள் சிவப்பான மங்கிய ஒளியில் இருள் தன்மையுடனும் உள்ளது.

ராகு-கேதுக்கள் என்ன பணியை செய்கின்றன?

நவகிரகங்களில் ராகு - கேது என்பது ஒருவரின் பூர்வீக கர்மாவையும் நிகழ்கால கர்மாவையும் பதிவு செய்து வைத்துக் கொள்ளும் காலக் கண்ணாடி. இவர்கள்தான் கர்மங்கள் முழுவதையும் சேகரித்து சனி பகவானிடம் சமர்ப்பிக்கிறார்கள். கர்மாக்களுக்கு ஏற்ப சனி பகவானே ஒவ்வொருவருக்கும் தண்டனையை வழங்குகிறார். ராகு-கேதுக்கள் 18 மாதங்களுக்கு ஒரு முறை ஒரு ராசியிலிருந்து இன்னொரு ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். இந்த கிரகங்கள் எதிர்மறையாக சுற்றுவதால் எதிர்மறை எண்ணங்களை வித்திடச் செய்வார்.

அதாவது, வக்ர எண்ணங்களை ஏற்படுத்துவார். இந்த வக்ர எண்ணங்கள் சரியா? தவறா? என்ற எண்ணம் நமக்கு ஏற்படலாம். சில இடங்களில் தவறாகவும் சில இடங்களில் சரியாகவும் இருக்கும். அறிவியில் கண்டுபிடிப்புகளுக்கு இந்த கிரகங்கள் எண்ணத்தில் மாற்றத்தை ஏற்படுத்தி ஆய்வு செய்ய வைகின்றது. ஆதலால், பெரிய கண்டுபிடிப்புகளுக்கு இந்த கிரகங்கள் வித்திடுகிறது. ராகு - கேதுகளுக்கு சொந்த வீடு கிடையாது தாங்கள் இருக்கும் பாவத்தையே சொந்த வீடுகளாக ஆக்கிரமித்து கொள்வார்கள். ராகு-கேதுக்கள் தாங்கள் இருக்கும் வீட்டில் இருந்து 3, 7, 11ம் இடங்களை பார்வை செய்வார்கள்.

ராகு எப்பொழுதுமே பிரமாண்டத்தை கொடுத்து செல்கிறது. அதிக ஆசை, பேரின்பம், ஆணவம், அதிக பொருளிட்டும் எண்ணம், எல்லாவற்றையும் தனதாக்கிக் கொள்ளும் எண்ணம் போன்றவைகளை கட்டுபாடுகளின்றி ஒரு மனிதனுக்கு உற்பத்தி செய்கிறது. ராகு எப்பொழுதும் சனியை போல் செயல்படுவார். அதாவது, இருள் தன்மையுடையதாக இருந்து தண்டிக்கவும் செய்வார்.

கேது எப்பொழுது தன்னை எந்த இடத்திலும் முன்னிலைபடுத்திக் கொள்ளமாட்டார். அவர் ஒரு தனிமை விரும்பி ஏகாந்தத்தை ஏற்படுத்திக் கொள்வார். எல்லாவற்றிலும் ஞானத்தை நோக்கியே பயணிக்க செல்வார். ஒரு குறிபிட்ட விஷயத்தில உச்சபட்ச ஞானத்தை தேடி பெற முனைப்புடன் செயல்படுவார்.   

ராகு-கேதுக்களின் காரகங்கள் என்ன?

ஒருவரின் பெயரையோ அல்லது ஊரின் பெயரையோ மாற்றும் தன்மை இந்த ராகு-கேதுக்களுக்கு உண்டு. உதாரணத்திற்கு ஆங்கிலேயர்கள் தமிழை தவறாக உச்சரித்த காரணத்தால், பல ஊர்களின் பெயர்களும் சில ஊர்களில் தெய்வகளுமே மாற்றமாயின என்றால் அது கடந்த காலம் நமக்கு சொல்லும் வரலாற்று உண்மை. ராகு என்றால் தலை. கேது என்றால் வால். ராகு காலம் என்பது போல கேது காலம் இல்லையா? என்ற கேள்வி நமக்குள் எழுவது நியாயம்தான். ராகு காலத்தின் ஆரம்பத்தின் பாதி பங்கை ராகு தனக்குள்ளும் மீதி பாதி பங்கை கேதுவும் எடுத்துக் கொள்கிறது.

இந்த நேரத்தில் தொடக்கத்தில் ராகு வருவதால் ராகு காலம் என்று அழைக்கிறோம், கேது தன்னை முன்னிலை படுத்திக் கொள்ளமாட்டார். ராகு - சூதாட்டம், கேளிக்கை, மது, திடீர் ஏற்றம், திடீர் இறக்கம், உருது மொழி, தந்தை வழி முதாதையர்கள், விஷ பூச்சிகள், சர்ப்பம், கொள்ளை, கடத்தல், போதை மருந்து, மரணம், நீண்ட, உயரமான அமைப்பு உடைய எல்லாவற்றுக்கும் வகிக்கிறார்.

கேது - தடங்கல், ஞானம், மோட்சம், சித்தர்களின் தரிசனம், சித்து வேலைகள், மரணம், விநாயகர் வழிபாடு, சர்ப்பம் ஆகியவற்றிற்கும் இன்னும் சில விஷயங்களுக்கும் காரகம் வகிக்கிறார். ராகு - கேதுக்களே கண்ணிற்கு தெரியாத வைரஸ் நோய்களுக்கும் இந்த கிரகங்களே காரகம் வகிக்கின்றது.

ராகு-கேதுக்களின் தரும் நோய்கள் என்ன?

நோய்களில் தோல்நோய்கள், அறிய முடியாத புதிய நோய்கள், உடலில் உள்ள சுரபிகளின் குறைபாடுகள், குஷ்டம், புற்றுநோய்,  கட்டிகள், தடிப்புகள், குமட்டல், எதுகளித்தல் போன்றவைகளுக்கு காரகம் வகிக்கிறார். அதுமட்டுமின்றி பல கிரகங்களுடன் இணையும் புதுப்புது நோய்களை உற்பத்தி செய்கிறார். எய்ட்ஸ் என சொல்லக்கூடிய பால்வினை நோயிற்கும் இவரே மற்றொரு கிரகத்துடன் இணைந்து தருகிறார்.

நாம் அறிந்த ராகு-கேதுக்களின் மாயா ஜாலம்...

ராகு - கேதுக்கள் நம் கண்களுக்கு தெரிவதில்லையோ அதுபோல இந்த சாயா கிரகங்களின் பாதிப்புகளுக்கான காரணங்களையும் நம்மால் அறிய முடிவதில்லை. கடந்த காலத்தில் கொரோனா என்ற பெரிய அரக்கன் உருவாவதற்கு இந்த ராகு-கேதுக்களே காரணம். அதிலிருந்து நீங்கள் இந்த உலகில் இவர்கள் எப்படி மாய வேலை செய்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ளலாம். மக்களை தனிமைப்படுத்தி இருக்கச் செய்து உலகையே ஒரு புரட்டு புரட்டி போட்டு மிரள வைத்தன.

கொ.மு-கொ.பி (கொரனாவிற்கு முன் - பின்) என்று சொல்லும் அளவிற்கு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இன்னும் அந்த தாக்கத்தை நினைத்து அஞ்சும் பலர், முகக்கவசத்துடன் பொது வெளியில் வரும் பலரைக் காணலாம். இதிலிருந்து நீங்கள் அறிவது அந்த கிரகங்களின் அச்சம் அவர்களை துரத்திக் கொண்டே இருக்கிறது என பொருள். அளவிற்கு அதிகமான பாதுகாப்பு அச்சத்தின் வெளிப்பாடு.

ராகு-கேதுக்களுக்கு என்ன பரிகாரம் செய்யலாம்?

* ஆந்திராவில் உள்ள ஸ்ரீகாளஹஸ்தி தலத்திற்கு சென்று ராகு காலத்தில் பரிகாரம் செய்து வழிபடலாம்.

* நம் வீட்டிற்கு அருகே உள்ள ராகு-கேது சர்ப்ப சிலைகளுக்கு மஞ்சள், குங்குமம் வைத்து பூ வைத்து வழிபடலாம்.

* ராகு காலத்தில் காளி, துர்க்கை அம்மனுக்கு அபிஷேகம் அர்ச்சனை செய்யலாம்.

* கேதுவிற்கு அருகம்புல் கொண்டு விநாயகரை வழிபடுவதன் மூலம் பரிகாரம் செய்து கொள்ளலாம். சாதுக்கள் மற்றும் சன்னியாசிகளுக்கு உணவு தானம் மற்றும் வஸ்திரங்கள் வழங்குவதன் மூலமும் பரிகாரம் செய்யலாம்.

* திருநாகேஸ்வரம் சென்று ராகு காலத்தில் பாலபிஷேகம் செய்து வழிபாடு செய்வதன் நற்பலனை அடையலாம்.

* ராகுவிற்கு உகந்த தானியமான உளுந்தை படுக்கைக்கு கீழ் வைத்து இரவு அந்த படுக்கையின் மேல் படுத்து அடுத்தநாள் ஓடும் ஆற்று நீரிலோ, கடலிலோ விடுவதன் மூலமும் பரிகாரம் செய்யலாம்.

* கேதுவிற்கு உகந்த தானியமான கொள்ளை படுக்கைக்கு கீழ் வைத்து இரவு அந்த படுக்கையின் மேல் படுத்து அடுத்தநாள் ஓடும் ஆற்று நீரிலோ, கடலிலோ விடுவதன் மூலமும் பரிகாரம் செய்யலாம்.

* நம் உடலில் தோல் நோய்கள் ஏதேனும் கடுமையாக இருந்தால், கன்னியாகுமரி அருகே உள்ள நாகர்கோவில் உள்ளது.  இங்கு உள்ள நாகராஜா கோவிலில் சென்று வழிபாடு செய்து அங்கு கொடுக்கப்படும் திருநீறு என்ற புற்று மண்ணை பிரசாதமாக வாங்கி நெற்றியில் இட்டு வந்தால் தோல் நோய்கள் குணமாகும். இந்த பரிகாரங்களால் ராகு-கேதுவின் தாக்கங்கள் குறையும்.

Tags : Rahu - Ketu ,
× RELATED ராகு-கேது பெயர்ச்சியை எப்படிப் புரிந்து கொள்வது?