×

வேண்டுதலை செவி சாய்த்து கேட்டு நிறைவேற்றும் ஈசன்

திருப்புடைமருதூர்- திருநெல்வேலி

‘அர்ச்சுனம்’ என்றால் மருதமரம்’. மருதமரத்தில் சிவபெருமான் எழுந்தருளிய தலங்கள் ‘அர்ச்சுனத் தலங்கள்’ எனப் போற்றப்படுகின்றன. ‘தலையார்ச்சுனம்’ எனப்படுவது  ஸ்ரீசைலம். தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் ‘இடையார்ச்சுனம்’ என்றும் ‘மத்தியார்ச்சுனம்’ என்றும் அழைக்கப்படுகிறது. ‘கடையார்ச்சுனம்’ எனப் போற்றப்படும் திருப்புடைமருதூரில் 1200 வருடங்கள் பழமையான திருக்கோயிலில் அருள்மிகு கோமதி அம்பாளுடன் ஸ்ரீநாறும்பூநாதர் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

திருநெல்வேலி - பாபநாசம் சாலையில் 28 கி.மீ. தொலைவில் இருக்கும் வீரவநல்லூரிலிருந்து பிரியும் சாலையில் 7 கி.மீ. தொலைவில் திருப்புடைமருதூர் அமைந்திருக்கிறது. காசிக்கு நிகரான இத்திருத்தலத்தில் பிப்ரவரி 18-ல் நடக்கும் மஹாபிரதோஷ வழிபாட்டில் ஜாதக ரீதியாக, கிரக நிலை சரியில்லாதவர்கள் பங்கேற்று பயன் பெறலாம். முன்னொரு யுகத்தில், காசிக்கு நிகரான தலத்தைக் காட்டும்படி சிவனிடம் வேண்டினார்கள் தேவர்கள். ஈசன் அவர்களிடம் ஒரு பிரம்ம தண்டத்தைக் கொடுத்து அதைக் கீழே போடச் சொல்லி உத்தரவிட்டார்.

அது, தாமிரபரணி ஆற்றில் விழுந்தது. ‘‘இந்தப் பிரம்ம தண்டம் எங்கு கரை ஒதுங்குகிறதோ, அந்த தலமே காசிக்கு நிகரானது’’ என்றார் சிவபெருமான். அதன்படி அந்தத் தண்டம், தட்சிண காசியான திருப்புடைமருதூர் ஆற்றங்கரையோரம் ஒதுங்கியது. பிற்காலத்தில், களக்காடு பகுதியை ஆட்சி செய்த வீரமார்த்தாண்ட மன்னன், மருதமரங்கள் நிறைந்த காட்டுப் பகுதிக்கு வேட்டையாட வந்தான். அப்போது ஒரு மானைக் கண்டு அதனை வீழ்த்த அம்பு விடுத்தான்.

மன்னன் எய்த அம்பு பட்டு மான் மருத மரத்துக்குள் சென்று மறைந்தது. மானை மீட்க அந்த மரத்தை வெட்டும்படி உத்தரவிட்டான் மன்னன். அதன்படி வீரர்கள் கோடாரியால் மரத்தை வெட்ட, ரத்தம் பீறிட்டது. அங்கு வெட்டுபட்ட நிலையில் சுயம்பு லிங்கத் திருமேனியாய் ஸ்ரீநாறும்பூநாதரைக் கண்ட மன்னன், மனமுருகி வேண்டி, அந்த இடத்திலேயே ஆலயம் எழுப்பினார்.

சித்தருக்கு செவி சாய்த்த சிவபெருமான்

சிவபக்தரான கருவூர் சித்தர், பல்வேறு சிவாலயங்களுக்குச் சென்று வழிபாடு செய்து வந்தார். அவர், தாமிரபரணியின் வடக்குக்கரை வழியாக வந்தபோது, எதிர்க்கரையில் இருந்த இத்திருக்கோயிலைக் கண்டார்.  ஆனால், ஆற்றைக் கடக்க முடியாதபடி வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. ‘‘பரம்பொருளே! உன்னை தரிசிக்க இயலாதபடி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறதே, நான் பிரார்த்திப்பதும் சொல்வதும் உமக்குக் கேட்கவில்லையா’’ என்று இருகரம் கூப்பி அவர் வேண்டிக்கொள்ள, ஈசன் தனது திருமேனியை இடப்பக்கம் சரித்து செவிமடுத்துக் கேட்டாராம்.

பின்னர் சிவனருளால் வெள்ளம் குறைந்தது.  சித்தரும் ஸ்ரீநாறும்பூநாதரை தரிசித்து வழிபட்டார். அத்துடன் இங்கு வரும் பக்தர்களின் வேண்டுதல்களை செவி சாய்த்து கேட்டு நிறைவேற்றும்படி வேண்டினார். ஸ்ரீநாறும்பூநாதரும் அவர் வேண்டுகோளை ஏற்று அவ்வாறே நடக்கும் என அருள்புரிந்தார்.

பெருங்கருணை நாயகி ஸ்ரீகோமதி


உலகில் எங்கும் காண வண்ணமாக உச்சி முதல் பாதம் வரை ருத்ராட்சத் திருமேனியுடன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். தாரகா சக்தி பீடமாக உள்ள இந்த தலத்தின் இறைவி அருளே வடிவானவள். பக்தர்களின் வேண்டுதல்களை நிறைவேற்றுவதில் அம்பிகைக்குத் தனிச் சிறப்பு உண்டு. இங்குள்ள நடராஜர் சிலை ஓம் வடிவ திருவாசியுடன் அமைந்துள்ளது. இங்குள்ள யோக தட்சிணாமூர்த்தி இரு கால்களையும் மடக்கி அமர்ந்த நிலையில் காட்சி அளிக்கிறார்.

இந்த கோயிலின் கோபுரம் ஐந்து நிலைகளையும், பதினொரு கலசங்களையும் கொண்டுள்ளது. கோபுரத்தின் தளங்களில் மியூரல் - டெம்பரா வகைக் சுவரோவியங்கள் காணப்படுகின்றன. இந்த ஓவியங்களில் திருவிளையாடற்புராணம், கந்தபுராணம், பெரிய புராணம் தொடர்பான ஓவியங்களும் சீன நாட்டு வணிகர்களின் உருவங்களும் இடம் பெற்றுள்ளன.

இராஜகோபுர திருப்பணி துவங்க வேண்டுதல் விழா

 இந்தக் கோயிலில் ஸ்ரீகஜானன் மஹராஜ் கைங்கர்ய சபா-திருப்புடைமருதூர் சார்பில் பிப்ரவரி 18.02.2023 அன்று இவ்வருடத்தின் முதல் மஹாபிரதோஷ வழிபாட்டோடு இராஜகோபுர திருப்பணி நடைபெறுவதற்கு வேண்டுதல் விழா நடத்தவுள்ளனர். முற்றிலும் புதுமையான ஒரு முயற்சியாக திருக்கோயில் தல வரலாறு காட்சியமைப்பாக உருவாக்கப்பட்டு, திருக்கோயில் முழுவதும் 10,008 தீபங்கள் ஏற்றப்படுகிறது.

மாலை 4.30 மணிக்கு துவங்கும் மஹாபிரதோஷ பூஜையில் அபிஷேகத்தின் சிறப்பம்சமாக 3024 செவ்விளநீர் மற்றும் ஆயிரக்கணக்கான செண்பகம், மனோரஞ்சிதம், தாமரை மலர்களை கொண்டு செய்யப்படும் அலங்காரமும் இடம்பெறும். பக்தர்கள் தங்கள் பிரார்த்தனைகளை தாளில் எழுதிக் கொண்டு வந்து, சுவாமி சந்நதியிலிருந்து கீழே இறங்கும் வழியில் வைக்கப்பட்டுள்ள பிரார்த்தனை பெட்டியில் செலுத்தவும். ஜாதக ரீதியாக கெடுபலன் உள்ளவர்கள் அவ்வாறு செய்து இதில் பங்கேற்றால் சகல தோஷங்களும் நிவர்த்தியாவதுடன் விதிவசத்தால் ஏற்படுகின்ற துன்பங்கள் அனைத்தும் நீங்கி அவர்கள் நிலையே மாறிப்போகும் என்பது ஐதீகம்.

திருநெல்வேலி - பாபநாசம் சாலையில் 28 கி.மீ தூரத்தில் வீரவநல்லூர், இங்கிருந்து பிரியும் சாலையில் 7 கி.மீ. தூரத்தில் திருப்புடைமருதூர் உள்ளது.

- மீனாட்சி ரவிசேகர்

Tags : Eason ,
× RELATED புத்திர தோஷம் நீக்கும் திருத்தலம்