நன்றி குங்குமம் ஆன்மிகம்
பிரச்னை மற்றும் ஆபத்துக்காலத்தில் இந்த பாசுரத்தை பல முறை பகவானை தியானித்து உருக்கமுடன் பாடுங்கள். சூரியனைக் கண்ட பனி போல ஆபத்து விலகும்.
பந்தார் விரலாள் பாஞ்சாலி
கூந்தல் முடிக்கப் பாரதத்து
கந்தார் களிற்றுக் கழல் மன்னர்
கலங்கச் சங்கம் வாய்வைத்தான்
செந்தாமரைமேல் அயனோடு
சிவனும் அனைய பெருமையோர்
நந்தாவண்கை மறையோர் வாழ்
நறையூர் நின்ற நம்பியே (6:7:8)
(திருமங்கையாழ்வார் பாசுரம் இது.
பாஞ்சாலியின் துயர் தீரவே பாரதப்போர் நடத்தினான். பாண்டவர்க்கு ஆபத்துக்காலத்தில் துணை நின்றான் என்று பாடுகிறார்)
காரியம் நிறைவேற இந்த பாசுரத்தை ஓதுங்கள் நினைத்த காரியம் உடனே நடக்கும்
அருமா நிலம் அன்றளப்பான் குறளாய்
அவுணன் பெருவேள்வியில் சென்றிருந்த
பெருமான் திருநாமம் பிதற்றி நுந்தம்
பிறவித்துயர் நீங்குதும் என்ன கிற்பீர்!
கருமா கடலுள் கிடந்தான் உவந்து
கவை நா அரவின் அணைப்பள்ளியின் மேல்
திருமால் திருமங்கையோ டாடு தில்லைத்
திருச்சித்ரகூடம் சென்று சேர்மின்களே!
(பொருள்: இந்திரன் ராஜ்யத்தை இழந்த அந்த நாளில் அளக்கமுடியாத இப்பெரு நிலத்தை அளந்து பெறுவதற்காக அசுரனான மகாபலியினுடைய பெரிய யாகத்தில், ஒரு யாசகனாகச் சென்று யாசித்த ஸர்வேஸ்வரனான வாமனனே இங்கு பள்ளி கொண்டிருப்பதால், உங்கள் விருப்பத்தையும் செய்து முடிப்பான். பிறவித்துயரையும் நீக்குவான். எனவே அவன் திருநாமங்களை அடைவு கெடச் சொல்லி, உங்களுடைய பிறவித் துன்பங்களைப் போக்கிக் கொள்ள வேண்டும்).
தொகுப்பு: ராமானுஜதாசன்