நியூயார்க்: டிவிட்டரை வாங்குவதாக எலான் மஸ்க் விட்ட புதிய தூதை, டிவிட்டர் நிறுவனம் நிராகரித்துள்ளது. மேலும், அவர் மீதான வழக்கு விசாரணையை நிறுத்தவும் மறுத்து விட்டது. உலகின் பெரும் பணக்காரரும் டெஸ்லா நிறுவனத்தின் தலைவருமான எலான் மஸ்க், பிரபல சமூக வலைதளமான டிவிட்டரை ரூ.3.59 லட்சம் கோடிக்கு வாங்க உள்ளதாக கடந்த ஏப்ரல் மாதம் அறிவித்தார். இது தொடர்பாக இருதரப்புக்கும் விற்பனை ஒப்பந்தமும் ஏற்பட்டது. ஆனால், டிவிட்டரில் போலி கணக்குகள் அதிகளவில் இருப்பதாக குற்றம்சாட்டிய மஸ்க், அதை வாங்கும் ஒப்பந்தத்தை ரத்து செய்தார். இதை எதிர்த்து அமெரிக்க நீதிமன்றத்தில் மஸ்க் மீது டிவிட்டர் நிர்வாகம் வழக்கு தொடர்ந்துள்ளது. அதில், ஒப்பந்தம் ரத்தால் தனக்கு ஏற்பட்டுள்ள நஷ்டத்துக்காக பெரும் தொகையை மஸ்கிடம் டிவிட்டர் கேட்டுள்ளது. இந்த வழக்கு டெலாவேர் சான்ஸ்பரி நீதிமன்றத்தில் வரும் 17ம் தேதி விசாரணைக்கு வர உள்ளது. இதனால், மஸ்கிற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், டிவிட்டரை வாங்குவதற்கு தயாராக இருப்பதாக, சில தினங்களுக்கு முன் மஸ்க் அறிவித்தார். கூடுதல் தொகையை தரவும் அவர் தயாராக இருப்பதாக கூறப்படுகிறது. இதனால், இருதரப்புக்கும் இடையிலான சட்ட போராட்டம் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மஸ்க்கின் திட்டத்தை டிவிட்டர் நிர்வாகம் நிராகரித்துள்ளது .மேலும், வரும் 17ம் தேதி நடைபெறும் வழக்கு விசாரணையை நிறுத்தவும் அது மறுத்து விட்டதாக மஸ்கின் வழக்கறிஞர் எட்வர்ட் தெரிவித்துள்ளார்….
The post மஸ்க் சமாதான தூது டிவிட்டர் நிராகரிப்பு: வழக்கை நிறுத்தவும் மறுப்பு appeared first on Dinakaran.