×

எய்ம்ஸ் பற்றி பேசி மாட்டிக்கொண்டோமே என பதறும் தாமரை கட்சியினர் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘தென் மாவட்ட கதர் கட்சியில் சந்தோஷத்துக்கு என்ன காரணம்…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘கை கட்சியில அகில இந்திய தலைவர் தேர்தல் வந்தாலும் வந்தது, தென்மாவட்ட நிர்வாகிகள் இப்போவ பரபரப்பாக இருக்காங்க. நேருக்கு நேர் பார்த்தா கூட பேசாத கதர் கட்சி நிர்வாகிகள், இப்போ மாவட்டங்கள்ல இருக்கற மாநில பொதுக்குழு உறுப்பினர்களுக்கு போன போட்டு தேன் வழிய பேசறங்க. ரொம்ப காலத்துக்கு அப்புறம் ஓட்டுபோட சென்னைக்கு போறோம் என்கிற எண்ணம் பொதுக்குழு உறுப்பினர்கள் மத்தியில் மகிழ்ச்சி பொங்கி வழியுதாம். இதனால கோஷ்டி பூசல் மறைந்து கதர் கட்சியினர் கேரளாவா, கர்நாடகாவா என்று விவாதித்து கொண்டுள்ளனர்… எனினும் தங்களுக்கு சாதகமாக செயல்படும் தலைவரை தேர்வு செய்வதில் குறியாக இருக்கிறார்களாம்…’’ என்றார் விக்கியானந்தா. ‘‘விவசாயிகளுக்கு டாட்டா காட்டிவிட்டு… அக்ரி ஆபீஸ்ல வேண்டியவர்களுக்கு மட்டும் வேளாண் இடுபொருட்கள் தாராளமாக எங்கே கொடுக்கிறாங்க…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘வெயிலூர் மாவட்டத்துல அணையான வட்டத்துல அக்ரி ஆபிஸ் இயங்கி வருது. இந்த ஆபீஸ்ல, உதவி அக்ரி இயக்குனர் போஸ்ட்டிங், கடந்த ஒரு வருஷமாக காலியாகவே இருக்குதாம். பொறுப்பு அதிகாரியாக கடந்த ஒருவருடமாக ஆனைமுக கடவுள் பெயரை கொண்டவர் பணியாற்றி வர்றார். இவரு விவசாயிகளுக்கு வழங்குவதற்கான வேளாண் இடுபொருட்கள், சொட்டுநீர் பாசனம் உள்ளிட்டவைகள், இலை ஆட்சியில இருந்தவங்க சொல்லும் ஆட்களுக்கே வாரி கொடுக்கிறாங்களாம். கிராமத்தில் விவசாயம் சார்ந்த கூட்டம் நடத்தினால், மாஜி பொறுப்பு உறுப்பினர்களுக்கும், வேண்டியவங்களை வைத்து கூட்டம் நடத்தி, அவர்கள் சொல்ற ஆட்களுக்கு வேளாண் ஈடுபொருட்கள் வழங்குறாங்களாம். இதுகுறித்து ஒன்றிய குழு கூட்டத்தில் கவுன்சிலர்கள் கேள்வி கேட்டாலும் உதவி அக்ரி ஆபிசர் மவுனம் காக்கிறாராம். விவசாய இடுபொருட்கள் வாங்கிய விவசாயிகள் பட்டியலும் வழங்குறதில்லையாம். இதனால் உண்மையான விவசாயிகள் பயனடைவதில்லைனு புகார்கள் கிளம்பியிருக்குது.அதோட விதை பண்ணை திட்டத்தில் விதைகளை விளைவித்து தரும் விவசாயிகளுக்கு உரிய நேரத்தில் ஊக்க தொகை பெற்று தராமல், உதவி அலுவலருங்க முறைகேடுகள்ல ஈடுபடுறாங்களாம். இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் மீண்டும் விதை பண்ணை திட்டத்தை தொடரவே மாட்டோம்னு சொல்றாங்க. இப்படி, அணையான வட்டத்துல அக்ரி டிப்பார்ட்மெண்ட் பிரச்னை தலைதூக்கியிருக்குதாம். சம்மந்தப்பட்ட அதிகாரிங்க விசாரிச்சு நடவடிக்கை எடுக்க வேண்டும்னு விவசாயிங்க எதிர்பார்க்குறாங்க…’ என்றார் விக்கியானந்தா. .‘‘எய்ம்ஸ் மருத்துவமனை விவகாரத்துல ஒன்றிய அரசு அப்படி என்னதான் செய்யுது…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.  ‘‘இலைக்கட்சி ஆட்சியின்போது, தங்கள் தொகுதியில் எப்படியாவது எய்ம்ஸை கொண்டு  வர வேண்டுமென மாஜி மந்திரிகளான சுகாதாரத்துறையும், தூங்கா நகரத்துக்கு  கொண்டு வர வேண்டுமென உதயமானவரும் மல்லுக்கட்டினர். ஒரு வழியாக தூங்கா நகரம்  ஓகேயானதும், உதயமானவர் தூங்கவே போய் விட்டார். அதன் பின்னர் எய்ம்ஸ்  மருத்துவமனை தொடர்பாக மூச்சே விடவில்லை. சும்மா இருந்து சங்கை ஊதிக்  கொடுத்த கதையாக, தாமரைக்கட்சியின் தேசிய தலைவர் 95 சதவீத பணிகள் முடிந்ததாக  பேசி விட்டு சென்றது பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது. ஏற்கனவே கட்சியை  வளர்க்க பாடுபட்டிருக்கோம்னு இவரு வேற இப்படி பேசிட்டு போய்ட்டாரே. இந்த ஒரு வார்த்தையை வச்சு செய்யறாங்க எதிர்கட்சிகள்.. மீம்ஸ், காமெடி என்று தாமரைக்கு இருந்த கொஞ்ச நஞ்ச மானத்தையும் காற்றில் பறக்கவிட்டுட்டாரே என்று தாமரை கட்சியினர் புலம்புறாங்க. இது ஒருபுறமிருக்க உதயமான மாஜி  மந்திரியை செல்லுமிடமெல்லாம், ‘‘எய்ம்ஸ் மேட்டர்ல, இலைக்கட்சி ஆட்சியிலே  எதுவுமே பண்ணாம விட்டுட்டீங்க. இப்ப உங்க கூட்டணியிலே பொய்யா  சொல்றாங்க’’ என தொகுதி மக்கள் கேட்கிறாங்களாம். இதனால் உதயமானவர், கடந்த  சில நாட்களாக கப்சிப்பென்று கிடக்கிறாராம்…’’ என்றார் விக்கியானந்தா. ‘‘கோவை ஆவினில் என்ன பிரச்னையாம்..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.  ‘‘கோவை ஆவினில் எப்போதும் பிரச்னைக்கு பஞ்சம் இருப்பது இல்லையாம். பண்டிகை காலங்கள் வந்தால், அதிகாரிகள் எப்படி லட்சக்கணக்கில் வேட்டையாடுவது என முடிவு செய்து அதுக்கு ஏற்ப திட்டமிட்டு வராங்க. இதுக்குள்ள அவங்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில, பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியத்தில் கடந்த 2,3 நாட்களுக்கு முன்பு தணிக்கை ஆய்வு செய்து இருக்காங்க. அப்போது, 80 ஆயிரம் லிட்டர் பால் இருப்பு குறைவுனு தெரியவந்திருக்கு. பாலுக்கான வெண்ணெய், பால் பவுடர் இருப்பில் இல்லைனு தெரியவந்திருக்கு. இதனால் ரூ.45 லட்சம் வரை இழப்பு ஏற்பட்டு இருப்பதாக சொல்றாங்க. ஆனால், இந்த இருப்பு குறைவை பதிவு செய்யாமல், தணிக்கையாளர்களை அதிகாரிகள் சரிகட்டியுள்ளனர். பால் கொள்முதல் பிரிவு அதிகாரி தலைமையில், அவருக்கு கீழ் இயங்கும் பிரிவு அதிகாரிகள்தான் இதில் ஈடுபட்டு இருக்காங்க. இந்த விவகாரத்தில் கோவையில் உள்ள பெரிய அதிகாரிகளின் பங்கும் இருக்காம். இது அமைச்சர் காதுக்கு போச்சுனா என்ன நடக்கும் என சக ஊழியர்கள் பேசிட்டு வராங்க. அதேநேரத்துல, அமைச்சருக்கு செய்தி சொல்ல பால் உற்பத்தியாளர் சங்கத்தை சேர்ந்தவங்க ரெடியாகி இருக்காங்க. இதனால், கோவை ஆவினில் தீபாவளி பட்டாசு வெடிக்கும்னு எதிர்பார்ப்பு ஊழியர்கள் மத்தியில் எழுந்து இருக்கு’’ என்றார் விக்கியானந்தா….

The post எய்ம்ஸ் பற்றி பேசி மாட்டிக்கொண்டோமே என பதறும் தாமரை கட்சியினர் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.

Tags : AIIMS ,Lotus Party ,wiki ,southern ,Khadar Party ,Uncle ,Peter ,India ,Kai Party ,Dinakaran ,
× RELATED ரூ4 கோடி விவகாரத்தில் சொந்த கட்சி...