×

சிற்பமும் சிறப்பும்

நன்றி குங்குமம் ஆன்மிகம்

ஆலயம்: வெங்கடாசலபதி கோவில், கிருஷ்ணாபுரம். திருநெல்வேலியிலிருந்து  12.கி.மீ. தொலைவில் திருச்செந்தூர் செல்லும் வழியில் கிருஷ்ணாபுரம் உள்ளது.

காலம்: மதுரையை ஆண்ட கிருஷ்ணப்ப நாயக்கரால் (1563-72 பொ.ஆ.) கட்டப்பட்டது. அதனால், `கிருஷ்ணாபுரம்’ என்று பெயர் வந்தது.

எந்த நேரமும் உயிர் பெற்று எழுந்துவிடுமோ என எண்ணத்தோன்றும் சிற்பங்கள்:

வெளிப்புறத் தோற்றத்தில் வெகு எளிமையாகக் காட்சியளிக்கும் இந்தக் கோயிலை காண்பவர், மற்றுமொரு சாதாரண கோயிலாகவே எளிதில் கடந்து சென்றுவிட வாய்ப்புக்கள் அதிகம். அருகிலுள்ள நவதிருப்பதி கோவில்களுக்கு பக்தர்கள் அதிகம் சென்றாலும், இந்த கோவிலுக்கு பக்தர்கள் வருகை அதிகம் இன்றி (திருவிழா நாட்களைத் தவிர) நெரிசல் குறைந்தே பெரும்பாலும் உள்ளது. ஆனால், கலை ஆர்வலர்களால் பெரிதும் கொண்டாடப்படும் இவ்வாலயம், தமிழ்நாட்டின் சிற்பக் கோவில்களில் சிறப்பிடம் பெற்ற ஒன்றாகும்.

1990களின் முற்பகுதியில், முதன்முறையாக சென்றபோது, இவ்வாலயச் சிற்பங்களின் அழகியல் மெய்சிலிர்க்க வைத்தது. மூன்று முறை சென்று வந்த பிறகும், இவ்வாலயச் சிற்பங்களை ஒவ்வொரு முறை காணும்போதும் புதியனவற்றை காண்பது போல, பரவசமும், ஆராய்ச்சி மனப்பான்மையும் ஏற்படுகிறது.கோயிலுக்குள் நுழைந்தவுடனே கோயில் கருவறைக்குச் செல்லும் பிரதான மண்டபம் வியப்பில் ஆழ்த்துகிறது. மண்டபத்தூண்கள் அற்புதமான கலைப் படைப்புகளைக் கொண்டுள்ளன. ரதி, மன்மதன், அர்ஜுனன், கர்ணன் மற்றும் புராணக்காட்சி சிற்பங்கள் பிரமிப்பில் ஆழ்த்துகின்றன. கருவறையில் வெங்கடாஜலபதி அவரது துணைவிகளான  தேவி மற்றும் பூதேவி ஆகியோருடன் அருள்பாலிக்கிறார்.  

கோவிலின் வடக்குப் பகுதியில் உள்ள ‘வீரப்ப நாயக்கர் மண்டபம்’ குறவன் மற்றும் குறத்தி சிற்பங்களைக் கொண்டுள்ளது. இந்த மண்டபத்தில், இசை ஒலிகளை உருவாக்கும் தூண்களும் உள்ளன.ஏறத்தாழ மனிதனின் உயிரளவு கொண்ட இச்சிற்பங்களின் பளபளப்பான தோற்றம், நுணுக்கமான விவரங்கள், செழுமையான ஆடை அலங்காரங்கள், முகபாவங்கள், விலா எலும்புகள், நகங்கள் மற்றும் நரம்புகள் போன்றவற்றின் உயிரோட்டத்தைக்காணுகையில், இந்த சிற்பங்கள் எந்த நேரத்திலும் சுவாசித்து உயிர் பெற்றுவிடுமோ என்ற எண்ணம் ஏற்பட்டு, பெயர் தெரியாச் சிற்பிகளின் உழைப்பும், திறனும் நினைவில் எழுகின்றன.

தொகுப்பு: மது ஜெகதீஷ்

Tags :
× RELATED தெளிவு பெறுவோம்