×

சீலைக்காரி அம்மன்

பகுதி 2

(சென்ற இதழின் தொடர்ச்சி...)

வேப்பங்குடி, கரூர்

சின்ன அவினாசிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. கணவருக்கு மரண தண்டனை கிடைத்த செய்தி, பட்டியம்மாளுக்கு இடியாக விழுந்தது. அப்போது பட்டியம்மாள் மூன்று மாத கர்ப்பிணி. ஆனாலும், செய்வதறியாத பட்டியம்மாள், கணவர் பின்னே சென்றார். காவலாளிகளால் கைதுசெய்யப்பட்ட சின்ன அவினாசி, ராமகிரி பட்டணத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார். பட்டியம்மாளும் உடன் சென்றார். அங்கே இருந்த பெருமாள் கோயில் அருகே தலைவெட்டி ஊர் பெரியோர்கள்  முன்னிலையில், மரத்தடியில் சின்ன அவினாசிக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. அதைப் பார்த்த பட்டியம்மாள் அப்படியே கீழே விழுந்தார். அழுது புலம்பியபடி, அரண்மனையை நோக்கி ஓடிவந்தாள்.

ஜமீனிடம் கொள்ளி கேட்ட சீலைக்காரி

ஜமீனிடம் சென்றாள். ‘‘ஐயா... என் கணவனைக்
கொன்றுவிட்டீர்கள். இனி என் நிலை என்ன? கணவர் இல்லாமல், வயிற்றில் பிள்ளையுடன் நான் எப்படி வாழ்வேன்? என்னையும் கொன்றுவிடுங்கள். என் கணவன் சென்ற இடத்துக்கே நானும் சென்றுவிடுகிறேன்’’ என்று கதறியபடி சொன்னார் பட்டியம்மாள்.
ஜமீனோ, ‘‘உன் கணவன் தவறு செய்தான். தண்டனை வழங்கினேன். நீ எந்தத் தவறும் செய்யவில்லை! நீ எதற்காக இறக்க வேண்டும்?’’ என்றார். பட்டியம்மாள் அழுதுகொண்டே ‘‘நானும் என் கணவன் சென்ற இடத்துக்கே செல்ல வேண்டும். என்னால் அவர் இல்லாத இந்த உலகத்தில் ஒரு நிமிடம்கூட உயிர் வாழ முடியாது’’
என்பதையே திரும்ப திரும்பக் கூறினாள்.

ஒரு கட்டத்தில் அவள் துன்பத்தையும் அழுகையையும் பொறுக்க முடியாத ஜமீன், ‘‘உன் விருப்பம் அப்படியானால், நிறைவேற்றப்படும். ஆனால், நீ கர்ப்பமாக இருக்கிறாயே...? அதனால், உன் அண்ணன்மார் ஏழு பேர்கள் வீட்டில், ஏழு மாதங்கள் மகிழ்ச்சியாக இருந்துவிட்டு வா. பிறகு, வயிற்றிலுள்ள குழந்தையைப் பெற்றுக்கொடுத்துவிடு, அதன் பிறகு உன் விருப்பம் நிறைவேற்றப்படும்’’ என்றார். பட்டியம்மாள், ‘‘நீங்கள் கூறுவது அனைத்துக்கும் கட்டுப்படுகிறேன். ஆனால், என்னை எரிக்கும்போது, சந்தனக்கட்டை, செம்மரக்கட்டை, குங்குமக்கட்டை வெட்டி அக்னியை மூட்ட வேண்டும்.

எனக்கு நீங்கள்தான் ‘கொள்ளிக்குச்சி’ தர வேண்டும். கோட்டநத்தத்தில்தான் நான் இறக்க வேண்டும்’’ என்றார். ஜமீன் அந்தக் கோரிக்கைக்கு உடன்பட்டார்.
பட்டியம்மாள் ஒவ்வொரு மாதமும் ஓர் அண்ணன் வீட்டில் இருந்தாள். மாத முடிவில் அண்ணனிடம் விடைபெறும் கடைசி தினத்தன்று, ஒரு சீலையை அண்ணனிடம் கொடுப்பாள். ‘‘அண்ணா... நான் இறந்த பிறகு இந்தச் சீலையை (புடவை) வைத்து, அதன் மேல் எலுமிச்சைப் பழத்தையும், மல்லிகைப் பூவையும் வைத்துக் கும்பிடுங்கள்’’ என்று சொல்லி கதறி அழுது விடைபெறுவாள். இப்படி ஆறு அண்ணன்கள் வீட்டிலும் இருந்துவிட்ட பட்டியம்மாள். ஏழாவது அண்ணன் வீட்டுக்குச் சென்றாள்.

கடைசி அண்ணன் மனைவி, பட்டியம்மாளைத் துன்புறுத்தினாள். கொடும் வார்த்தைகளால் கஷ்டப்படுத்தினாள். பட்டியம்மாள் நிறைமாத கர்ப்பிணி. ஆறு அண்ணன்கள் வீட்டிலும் வண்ணச் சீலைகளைக் கொடுத்தவள், ஏழாவது அண்ணனுக்கு வெள்ளைச்சீலை கொடுத்தாள். அது கூரைப்பட்டு வேறு. அதை தந்தவள், எப்போதும் சொல்லும் நடைமுறையையும் சொன்னாள்.

பத்து மாதங்கள் ஆகின. அண்ணன்கள் ஏழுபேரையும் அழைத்தாள். ‘‘அண்ணா.. நான் இறக்கும் தருணம் வந்துவிட்டது.’’ என்றாள். அண்ணன்கள் கதறி அழுதார்கள். ‘நான் கொடுத்த சீலையை நீங்கள் நல்ல நாள், நல்ல நிகழ்ச்சிகள், திருமணச் சடங்குகளின்போது படைக்க வேண்டும். உங்கள் வீட்டு மணமகள் வெள்ளைச் சீலை கட்டித்தான் தாலி கட்ட வேண்டும்’’ என்று கூறிவிட்டு, தன் சொந்த ஊருக்கு நடைபயணமாக வந்து சேர்ந்தாள் பட்டியம்மாள்.

அக்னியில் இறங்கிய சீலைக்காரி

பட்டியம்மாளுக்காக சந்தனக்கட்டை, குங்குமக் கட்டைகளை வெட்டி அடுக்கிக்கொண்டிருந்தனர் ஜமீன் பணியாட்கள். அப்போது, பட்டியம்மாவிற்கு இடுப்புவலி வந்தது. ஒரு  ஆண் குழந்தை பிறந்தது. குழந்தையை ஊரிலுள்ள முக்கியமான ஒருவரிடம் பச்சை வாழை இலையில் வைத்துக் கொடுத்தாள். அந்த நேரத்தில், பெரிய அவினாசி, குற்றவுணர்ச்சி தாங்காமல், ‘‘நான்தான் குதிரையைத் திருடிய பாவி!’’ என்று ஜமீனிடம் சென்று உண்மையை ஒப்புக்கொண்டார். ‘நீதி தவறிவிட்டோமே...’ என்ற வேதனையில் ஜமீன், பட்டியம்மாள் நெருப்பில் ஏற இருந்த இடத்துக்குப் பெரிய அவினாசியுடன் விரைந்து சென்றார்.

ஆனால், பட்டியம்மாள் அக்னியில் இறங்க வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்தார். பெரிய அவினாசியைப் பார்த்து ‘‘நான் சாபம்விட்டால், உன் குடியில் ஒருவரும் இருக்க முடியாது. நாசமடைந்துதான் நீ போக வேண்டும். என் கணவனின் வாழ்வோடு என் வாழ்க்கையையும் கெடுத்துவிட்டாயே’’... என்று கடும் கோபத்துடன் கூறினாள். ``மன்னித்து விடும்மா’’ என்ற பெரிய அவினாசியிடம், மன்னிப்பா..? என்று சிரித்த பட்டியம்மா, குயவர் வீட்டில் வேகாத பானை எடுத்து அதில் சமைத்து, உண்டுவிட்டுச் செல்.

உனது பாவத்தின் பங்கு பானையில் போகட்டும் என்று கூறிவிட்டு, ஜமீனிடம் கொள்ளிக்குச்சி கேட்டார் பட்டியம்மாள். அவர் குற்றவுணர்ச்சியில் தருவதற்கு மறுத்து விட்டார். அதற்குப் பதிலாக எலுமிச்சைப் பழமும், மல்லிகைப் பூவும் கொடுத்தார். பட்டியம்மாள் அதை வாங்கித் தன் மடியில் கட்டிக்கொண்டு, ஊர் மக்களிடம் அழுதுகொண்டே ‘‘என் குழந்தையைப் பார்த்துக்கொள்ளுங்கள்.

நான் இறந்த பிறகு, அவனுக்கு நீங்கள்தான் தாய், தந்தை’’ என்று சொல்லிவிட்டு அக்னியை வளர்த்து, இடமும் வலமாகச் சுற்றி வந்து, அக்னிக்குள் இறங்கிவிட்டாள். அந்த அக்னியிலேயே உயிர்நீத்தாள். ``சீலை தந்து போன தாயே’’... என்று அழுத அண்ணிமார்கள், பட்டியம்மாவை ``சீலைக்காரி’’ என்று உரிமையோடு அழைத்து வணங்கி நின்றனர்.

கல்லைக்கூட விட்டுக்கொடுக்க மாட்டாள்

பட்டியம்மாள் இறந்த இடத்திலிருந்து, ஒரு கல்லைக்கூட எடுக்க முடியாது. அதையும் மீறி ஒரு மாட்டு வண்டிக்காரர் தன் வண்டியில் கல்சுமை போதவில்லை என்று அந்த இடத்தில் கிடந்த கல்லைத் தூக்கி வண்டியில் வைத்துச் சென்றிருக்கிறார். சிறிது தூரம் சென்றவுடன் மாட்டின் வாயிலிருந்து நுரை தள்ள ஆரம்பித்திருக்கிறது. பாரம் தாங்காமல், மாடு படுத்துவிட்டது.

மாட்டுவண்டிக்காரர், சந்தேகப்பட்டு தான் எடுத்த அந்தக்கல்லை மட்டும், அதே இடத்திலேயே போட்டுவிட்டார். மாடு எழுந்துகொண்டது. அவர் மாட்டுவண்டியை ஓட்டிச்சென்றார். மறுநாள் காலையில் அவர் வந்து பார்த்தபோது, அந்தக் கல்லை போட்ட இடத்தில் காணவில்லை. வியப்பில் உறைந்தவர், பட்டியம்மாள் இறந்த இடத்திற்குச் சென்று பார்த்தார். அங்கு அந்தக் கல் கிடந்தது. அதிசயத்தில் திகைத்தார் வண்டிக்காரர்.

பட்டியம்மாள் இறந்த இடத்தில், உருவம் எதுவும் வைக்கப்படவில்லை. சிறிய கம்பி வேலி. உள்ளே ஒரு கிளிக்கூண்டுபோல சின்ன பீடம்தான். இங்கேதான் சக்தியின் அவதாரமாக சீலைக்காரி அம்மன் அருள்பாலிக்கிறாள். வரும் பக்தர்கள் அங்கிருக்கும் மண்ணைத்தான் திருநீராகப் பூசிக்கொள்கின்றனர். பட்டியம்மாளின் ஏழு அண்ணன்மார்கள் வீட்டிலும் அந்தப் பெண்ணுக்கு என்று தனியாகக் கோயில்கட்டி வழிபடுகின்றனர்.

பொங்கல் திருநாள் அன்று சீலைக்காரி அம்மன் இறந்த இடத்தில், இரவில் பழபூஜை போடுகிறார்கள். காலையில் அக்னியை வளர்க்கிறார்கள். அப்போது, அவர்கள் குடும்பத்திலுள்ள பெண் ஒருவரின் மீது சீலைக்காரி அருள் வருகிறது. அந்தப் பெண் வெள்ளைச் சீலை உடுத்தி, அக்னியை அள்ளி மடியில் கட்டிக்கொண்டு, கையில் எலுமிச்சைப் பழமும், மல்லிகைப் பூவும் எடுத்துக்கொண்டு பட்டியம்மாள் இறந்த இடத்தை நோக்கி அழுதுகொண்டே இடமும் வலமுமாகச் சுற்றி வந்து, தனது மடியிலுள்ள நெருப்பைக் கீழே உதறிவிட்டு, தனது முந்தானை அங்குள்ள மக்களிடம் காட்டுகிறார்.

அந்தச் சீலையில் ஒரு நெருப்புக் கூட இருப்பதில்லை. சீலையில் தீயும் பற்றுவதில்லை. சீலைக்காரி அம்மனை வேண்டினால், வேண்டும் வரம் தருவாள். இந்த கோயில், கரூரிலிருந்து ஜெகதாபி வழியாக, காணியாளான்பட்டிக்கருகில் உள்ள வேப்பங்குடி கிராமத்தில் உள்ளது.

Tags : Seelakari Amman ,
× RELATED சுந்தர வேடம்