கார்த்திகை மாதம் என்றாலே நம்முடைய நினைவிற்கு வருவது கார்த்திகை தீபம் தான். விளக்கு ஏற்றுவது என்பது இந்த மாதத்திற்கே உண்டான சிறப்பாகும். திருக்கார்த்திகை தீப திருநாள் மட்டும் அல்லாமல் இந்த மாதத்தில், கார்த்திகை மாத சோமவார விரதம் மிக மிக விசேஷம். சிவனுக்கு சங்காபிஷேகம் செய்வது பல கோவில்களில் மிகவும் பிரசித்தியாக நடைபெறும்.
அண்ணாமலையார் தீபம், சபரிமலைக்கு மாலை போடுபவர்கள், முருகனுக்கு வேண்டி மாலை போடுபவர்கள் என்று இந்த மாதம் முழுவதும் இறைவழிபாட்டிற்கு உரிய மாதமாகவே உள்ளது. திருக்கார்த்திகை நாளன்று மட்டுமின்றி கார்த்திகை மாதம் முழுவதுமே வீட்டில் விளக்கேற்றி வைத்து வழிபாடு செய்வத சிறப்பான பலனை தரும். தினமும் காலையிலும், மாலை வேளையிலும் நிலை வாசலுக்கு வெளியில் 2 அகல் விளக்குகளை ஏற்றி வைக்க வேண்டும்.
அகல் விளக்குகளை தரையில் வைக்கக் கூடாது. கோலமிட்டு வைத்தாலும் விளக்கை எப்போதும் தரையில் வைக்கக் கூடாது. சிறிய வாழை இலை, அரச இலை, ஆல இலை அல்லது ஒரு சிறிய தட்டின் மேல் தான் அகல் விளக்குகளை ஏற்றி வைக்க வேண்டும்.