×

எதைப் பார்த்தாலும் அச்சமா? இதோ மிக எளிய தீர்வு

தேஜஸ்வி

நம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பிரச்னைகள். பிரச்னை இல்லாத மனிதர்கள் உலகத்தில் இருக்க முடியுமா? முடியாது. சிலருக்கு பிரச்னை இல்லாவிட்டாலும் பிரச்சனையை வலிய ஏற்படுத்திக்கொள்வார்கள். அது ஜாதக விதி. ஒன்றும் செய்ய முடியாது. ஒரு விஷயம் நாம் நன்றாகப் புரிந்துகொள்ள வேண்டும். நமது பிரச்னைகளுக்கான தீர்வு நம்மிடமே உள்ளது. அந்த தீர்வை நோக்கி நகர்வதும் நம் கையில்தான் இருக்கிறது. விஷயத்துக்கு வருவோம்.

உங்களுக்கு இந்தப் பிரச்னை இருக்கிறதா? இருந்தால், இந்த பதிவு உங்களுக்காகத்தான் அல்லது இந்த பிரச்னை உள்ளவர்களுக்கு நீங்கள் இதனை பரிந்துரை செய்யலாம். எதைப் பார்த்தாலும் அச்சம் பயம் எப்போதும் ஒருவிதமான படபடப்பு கவலை தலைதூக்குகிறதா? ஐயோ எதிர்காலம் என்ன ஆகுமோ, அவர் அப்படி ஆகிவிட்டார், இவர் இப்படி ஆகிவிட்டார், நமக்கு இப்படி ஏதாவது ஆகிவிடுமா என்கின்ற பயம் இருக்கிறதா?

காரணம், இம்மாதிரி அச்சத்தில் நிறைய பேர் இருக்கிறார்கள்.  என்னவென்று சொல்லமுடியாத ஒரு துயரம் எப்பொழுதும் அவர்களிடம் இருக்கிறது. காரணம் அவர்களுக்குத் தெரியவில்லை. அதே சமயத்தில் இந்த அச்சத்தில் இருந்து வெளிவர முடியவில்லை. அப்படிப்பட்ட தவிப்பு இருக்கிறதா? தூங்கினால் கனவு வரும். இந்த கனவு காண்பது நல்லதுதான். ஆனால் சிலர் பதற்றத்தோடு எழுந்திருப்பார்கள்.

திடீரென்று ஒரு குட்டிப்பாம்பு நெளிவது போல இருக்கும். அதுவரை கண்ணுக்கு தெரியாத ஒரு வஸ்து, ஒரு பாம்பாக மாறி, சட்டென்று தலைதூக்குவது போலத் தெரியும். சிலநேரம் அது உங்களை துரத்தும். சிலநேரம் உங்களைப் பார்த்தவுடன் பயந்து ஓடும். சில நேரம் உங்களைக் கடிக்க வருவது போல இருக்கும். வேறு சில நேரம் நீங்கள் ஒரு கட்டையை எடுத்துக்கொண்டு துரத்தி கடைசியில் அடித்து விடுவீர்கள். அல்லது யாரோ சத்தம் போட, விட்டு விடுவீர்கள். அது ஒரு முறை உங்களை முறைத்துவிட்டுச் செல்லும். சில நேரங்களில் அது ஓடி புற்றில் பதுங்கிக் கொள்ளும்.

சீறுவது போல் வருகிறதா? ஓடுவதுபோல் வருகிறதா? நீங்கள் துரத்துகிறீர்களா? துரத்தப் படுகிறீர்களா? திடீரென்று விழிப்பு வந்து விடுகிறதா? இந்த பிரச்னை பலருக்கும் இருக்கும். இதற்கெல்லாம் என்ன பொருள்? நீங்கள் சின்னஞ்சிறிய பாம்பைப் பார்க்கிறீர்கள் என்று சொன்னால் உங்களுக்கு எதிர்காலத்தில் வரக் கூடிய ஒரு சவாலை அல்லது மறைமுக எதிரியை நீங்கள் பலவீனமாகக் கருதுகிறீர்கள் என்று பொருள். எச்சரிக்கை இல்லாமல் இருக்கிறீர்கள் என்று பொருள். நீங்கள் பாம்பை துரத்திக்கொண்டு ஓடினால் பிரச்னைகளை நீங்கள் சரியாகக் கையாளுகிறீர்கள் என்று பொருள்.

அல்லது வீண் வம்பை விலைக்கு வாங்குகிறீர்கள் என்று பொருள். பாம்பு கடித்துவிட்டால் உண்மையில் உங்கள் பிரச்னை நீங்கிவிட்டது. உங்களை சுற்றிக் கொண்டது போல் கனவு கண்டால் ஏதோ சில தொந்தரவுகள் உங்களைத் தொடர்கிறது. பொதுவாகவே சாஸ்திர ரீதியாக பாம்பு கடித்து விட்டால் எதிர்பாராத ஒரு லாபம் கிடைக்கும் என்று சொல்வார்கள். அதைப்போலவே உங்களைப் பாம்பு விரட்டு வதாகக் கண்டால் உங்கள் காசு பணத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தொழிலில் அகலமாக கால் வைக்கக் கூடாது. லேசாக ரத்தம் வருவது போல் கனவு கண்டால் உங்களுக்கு சனி தோஷம் நீங்கிவிட்டது. சரி இப்படி கனவுகள் வருகின்றனவே? இதற்கு என்ன செய்ய வேண்டும்?  மிக அருமையான தீர்வு இருக்கிறது.

பொதுவாகவே நல்ல கனவு கண்டால் உடனே தூங்கக் கூடாது.  ஆனால் இது போல பயங்கரமான கனவு கண்டால் ஒரு டம்ளர் தண்ணீரை குடித்துவிட்டு இறைவனை நினைத்து வணங்கிவிட்டு உறங்குங்கள். இந்தப் பாம்பு கனவு காண்பவர் ஜாதகத்தில் லக்னம், இரண்டாம் இடம், ஐந்தாமிடம், எட்டாமிடம் போன்றவற்றில் சர்ப்பகிரகங்கள் இருக்கும். எனவே சர்ப்பசாந்தி செய்வது நல்லது. அதைப்போலவே உங்களுக்கு ஏழரைச் சனி அல்லது ராகு திசை நடந்து கொண்டிருந்தாலும் இம்மாதிரி கனவுகள் வரும். குலதெய்வ வழிபாடு விட்டுப் போயிருந்தால் இந்த மாதிரி கனவுகள் வரும். இதைப்போல கனவுகள் வந்தாலே சிலருக்கு வீட்டில் சுபகாரியங்கள் நடக்கும். இதற்கு மிக எளிமையான பரிகாரம் உண்டு.

வெள்ளிக்கிழமை சாயங்காலம் விளக்கேற்றி வையுங்கள். பகவான் ஹரியின் பாதக் கமலங்களை கெட்டியாக மனப்பூர்வமாக பிடித்துக் கொள்ளுங்கள்.  எந்த பாம்பு உங்கள் கனவில் வருகிறதோ, உங்களை அச்சுறுத்துகிறதோ, அந்தப் பாம்பின் குறியீடான ஆதிசேஷன் தான், பெருமாளுக்கு அரவணையாக இருக்கிறார். மங்கள ஜோதி ஏற்றி வைத்து அந்த நாக அணையில் பள்ளிகொண்ட பகவானை மனக்கண்ணில் வரவழைத்து கீழ்க்காணும் பாசுரத்தை சொல்லுங்கள்.

இருளிரியச் சுடர்மணிகள் இமைக்கும் நெற்றி  
இனத்துத்தி அணிபணம் ஆயிரங்களார்ந்த  
அரவரசப்பெருஞ்சோதி அனந்தன் என்னும்  
அணிவிளங்கும் உயர்வெள்ளை அணையை மேவி
திருவரங்கப் பெருநகருள் தெண்ணீர்ப் பொன்னி  
திரைக்கையால் அடிவருடப் பள்ளி
கொள்ளும்
கருமணியைக் கோமளத்தைக்
கண்டு கொண்டு*
என் கண்ணிணைகள் என்றுகொலோ
களிக்கும் நாளே


குலசேகரர் அற்புதப் பாசுரம் இது. இந்த நாகத்தைக் கண்டால், அந்த நாக பயம் நீங்கிவிடும். சலசலத்து ஓடும் காவேரி. தனது அலைக் கைகளால் பெருமான் பாதங்களை இதமாகப்   பிடித்து விடுகிறது. ஏ.சி (air conditioned) மாதிரி குளுமை. சுகம். அதுதான் திருவரங்கம். உள்ளே போனால் ஆயிரம் கோடி சூரிய பிரகாசம். இருளானது சிதறி ஓடும்படி, ஒளி வீசும் மாணிக்கக் கற்களை பொருத்தியுள்ள நெற்றி. ஆயிரம் படங்கள் கொண்டு நாகஅரசன் ஆதிசேஷன். அழகுள்ள வெண்மைநிறபடுக்கையாய் கிடக்கிறான்.
 
அங்கே ஜாம் ஜாமென்று நீலரத்னக்கல் போன்ற பெரியபெருமாள் கண் வளர்கின்ற அழகு, அழியா அழகு. என்னுடைய கண்கள் குளிர்ந்து வணங்கி அவனைக்கண்டு
மகிழ்வுறும் நாள் எந்நாளோ? என்றவாறு அரங்கனை நினைத்து ஏங்குகிறார் குலசேகர ஆழ்வார். அரங்கனை அடைவதற்கு இந்த ஏக்கம் தாபம் முக்கியம்.பாக்கி அவன் பார்த்துக் கொள்வான். இயன்றால் ஒருமுறை வெள்ளிக்கிழமை பார்த்து ஸ்ரீரங்கம் சென்று வாருங்கள் அவரைப் பார்த்துவிட்டு நேராக வந்துவிட வேண்டாம்.

வசந்த மண்டபத்தில் உங்களுக்காகவே உங்களுக்கு அருள் தருவதற்காகவே ஸ்ரீராமானுஜர் அனைத்துலகும் வாழப் பிறந்த எதிராச மாமுனிவர் காத்திருக்கிறார். அவர் நாகமான ஆதிசேஷனின் அம்சம் அல்லவா! அவரையும் தரிசியுங்கள். பிறகு உங்கள் வாழ்க்கையில் ஏற்படும் முன்னேற்றங்களை கண்குளிரப் பாருங்கள்.

Tags :
× RELATED ஏன்? எதற்கு? எப்படி?