×

நவராத்திரியில் நடக்கும் பள்ளி (பாரி) வேட்டை

நன்றி குங்குமம் ஆன்மிகம்

நீங்கள் ஒரு சுற்றுலா பயணியாகச் சென்றாலும் சரி, அல்லது ஒரு யாத்ரிகனாக, தெய்வ தரிசனம் செய்ய விரும்பும் பக்தனாகச் சென்றாலும் சரி, கன்னியாகுமரி உங்கள் மனதை கட்டாயம் ஈர்த்துவிடவே செய்யும். நீலத் திரைக்கடல் ஓரத்திலே நின்று நித்தம் தவம் செய்யும் குமரி அன்னை, தன் கோல விழிப் பார்வையால் பார்க்கும்போது ஏற்படும் பரவசம் இருக்கிறதே, அதை அனுபவித்துத்தான் அறிய வேண்டும். சுவாமி விவேகானந்தரும், அண்ணல் காந்தியடிகளும் மிகவும் விரும்பிய இடம். மூன்று கடல்களும் ஒன்று கூடி சங்கமமாகும் மிகப் புனிதமான திருத்தலம் கன்னியாகுமரி. இத்தலத்தில் அன்னையை பகவதி என்றும், கன்னி என்றும் பலவாறு போற்றி வழிபடுகிறார்கள்.

காசிக்கு அடுத்தபடியாக ராமேஸ்வரத்திலும், கன்னியாகுமரியிலும் கடலில் நீராடுவதை பெரும் பேறாக பாரத மக்கள் கருதுகின்றனர். கன்னியாகுமரிக்கு வழி சொல்ல வேண்டியதில்லை. பாரதத்தின் தென் கடைக்கோடி பகுதி. நாகர்கோவிலில் இருந்தும், திருவனந்தபுரத்திலிருந்தும் பேருந்துகள் அதிகம் உண்டு. நாகர்கோவிலிருந்து 20 கி.மீ., தொலைவிலும், திருநெல்வேலியிலிருந்து 90 கி.மீ., தொலைவிலும், மதுரையிலிருந்து 240 கி.மீ., தொலைவிலும் கன்னியாகுமரி அமைந்துள்ளது. பேருந்தில் இருந்து இறங்கிய உடன், நேராக ஒரு வழி படகுத்துறைக்கும், இன்னொரு பாதை குமரி அன்னையின் திருக்கோயிலுக்கும் இட்டுச்செல்லும்.

முதலில் நாம் படகுத்துறைக்குச் செல்வோம் காரணம், கன்னியாகுமரி ஆலயம் முதலில் கடல் நடுவே உள்ள பாத பாறை என்கின்ற பாறையின் மேல் இருந்ததாகவும், காலவெள்ளத்தில் கடலில் ஏற்பட்ட அரிப்பினால் அக்கோயில் கைவிடப்பட்டு புதிய கோயில் கடற்கரையில் கட்டப்பட்டதாகவும் சொல்கின்றனர். இந்த பாத பாறைக்கு இன்னொரு சிறப்பும் உண்டு. அதுதான் விவேகானந்தர் மண்டபம். காந்தியடிகள் 1925-ஆம் ஆண்டு இங்கே வந்து இருந்த தன் அனுபவத்தை கன்னியாகுமரி தரிசனம் என்ற கட்டுரையில் மிக அழகாக விவரிக்கிறார்.

‘‘வீணையின் இசை போன்று கன்னியாகுமரி கடல் அலைகளின் இனிமையான ஓசை, யாருக்குமே தியானம் புரியும் மனநிலையை அளிக்கவல்லது. இங்கு என் ஆன்மிக உணர்வுகள் வலுவடைந்து உள்ளன. இங்கு உட்கார்ந்து கீதையைப் படித்துக் கொண்டே இருக்கவும் என் உள்ளம் விரும்பியது” என்று காந்தியடிகள் தன் கன்னியாகுமரி அனுபவத்தை பதிவு செய்கிறார். விவேகானந்தர் தவம்புரிந்த இடத்தில், சலவைக் கல்லினால் ஆன ஒரு நினைவு மண்டபம் எழிலுடன் கட்டப்பட்டிருக்கிறது.

குமரி அன்னையின் திருப்பாதம் இருக்கின்ற பாத மண்டபம் மூன்று பிராகாரங்களுடன் சிறப்பாக அமைக்கப்பட்டிருக்கிறது. மேலே ஏகதள விமானம், உள்பிராகாரத்தில் 28 சித்திரத்தூண்கள் உள்ளன. அவை களின் மேலே விதானம் தாங்கி நிற்கிறது. மண்டபத்தின் பின்னால், ஒரு கொடிக்கம்பம் உள்ளது. முக்கோண வடிவில் ஓம் என்று பொறித்த காவி வண்ணக்கொடி காலை சூரிய உதய காலத்தில் ஏற்றப்பட்டு, மாலை சூரிய அஸ்தமன காலத்தில் இறக்கப்படுகிறது. விவேகானந்தர் பாறையில் பாத மண்டபத்தைத்  தவிர, சபா மண்டபமும், தியான மண்டபமும் நல்ல முறையில் அமைக்கப்பட்டிருக்கின்றன. தியான மண்டபத்தில் சென்று அமர்ந்தால், ஒரு சிலிர்ப்பு ஏற்படுகிறது. நமக்கு விருப்பமான கடவுளை நினைத்து கொஞ்ச நேரம் அமைதியாக அங்கே தியானம் செய்யலாம்.

திருவள்ளுவர் சிலை என்பது திருக்குறள் எழுதிய திருவள்ளுவருக்கு தமிழ்நாடு அரசு குமரிக் கடலில், கடல் நடுவே, நீர் மட்டத்திலிருந்து 30 அடி உயரமுள்ள பாறை மீது அமைத்த 133 அடி உயரச் சிலை ஆகும். இந்த சிலை அமைக்கும் பணி 1990, செப்டம்பர் 6-ல் தொடங்கப்பட்டு, 2000 ஜனவரி 1-ல் திறக்கப்பட்டது. மிகவும் நுட்பமான வேலைப்பாடுகளுடன் அமைந்த திருவள்ளுவர் சிலையைப் பார்க்கச் செல்ல படகு வசதி உண்டு.

இனி மறுபடி படகில் ஏறி கரையை அடைந்து பகவதி அம்மன் கோயிலை அடையலாம். தந்திர சூடாமணி கூறும் 51 சக்திப் பீடங்களில் இது தேவியின் முதுகுப் பகுதி விழுந்த சக்தி பீடமாகவும் கருதப்படுகிறது. அதற்கு முன் மூன்று கடல்களும் ஒன்று கூடும் சங்கமத் துறை இருக்கிறது. கிழக்கில் வங்காள விரிகுடாவும், மேற்கில் அரபிக்கடலும், தெற்கில் இந்தியப் பெருங்கடலுமாக முக்கடல் சங்கமமான, அங்கு விருப்பம் இருப்பின் நீராடலாம். அல்லது தலையில் தண்ணீர் தெளித்துக்கொண்டு பகவதி அம்மனின் பிரதானவாசல் வழியாக உள்ளே செல்லலாம்.

கோயில் கொஞ்சம் நெருக்கடியாகத்தான் இருக்கிறது. கோயிலைச் சுற்றி கடைகளின் நெரிசல் சுற்றுலாப் பயணிகளின் நெரிசல் என கூட்டம் தள்ளுகிறது. சுற்றுலாத் தலமான இங்கு இந்த நெரிசல் தவிர்க்க முடியாததுதான். திருமணமாகாத கன்னியாக அன்னை பராசக்தி ஏன் இங்கே தவம்செய்கிறாள்? பாணாசுரன் என்ற அசுரனை அழிக்க பார்வதி தேவி இங்கே குமரியாக அவதரிக்கிறாள். கன்னியான அவள் அழகில் மோகம்கொண்ட அசுரன், அவளை நெருங்கவே போரிட்டு அவனை அழிக்கிறாள். இப்பொழுதும் இந்த சம்பவம் பள்ளி வேட்டை என்ற நாட்டுக் கூத்தாக நவராத்திரி சமயத்தில் நடைபெற்றுவருகிறது.

நவராத்திரி விழா இங்கே வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. தினசரி அன்னையின் வீதிஉலா காட்சிகள் நம்மைப் பரவசப்படுத்தும். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாகனத்தில், சர்வ அலங்கார பூஜிதையாக அன்னை வீதி வலம் வருகிறாள். புரட்டாசி நவராத்திரி விழா போலவே, வைகாசி விசாகத்திலும் பத்து நாள் திருவிழா நடக்கிறது. அப்போது தேரோட்டமும் தெப்ப உற்சவமும் வெகு பிரசித்தம். தேவியின் சந்நதி கடலை நோக்கி கிழக்கு முகமாக அமைந்துள்ள போதிலும், அதன் பிரதான வாயில்கள் ஆண்டில் 5 முறை மட்டுமே திறக்கப்படுகிறது என்கிறார்கள்.

தேவியின் முகத்தில் ஜொலிக்கும் பிரகாசம் வெகு அற்புதம். இந்த பிரகாசத்தில் அந்த காலத்தில் தொலைதூரக்கப்பல்கள் திசை தடுமாறி கரையில் மோதினவாம். அதனால்தான் கீழ்வாசல் நிரந்தரமாக மூடி வைக்கப்பட்டது என்கிறார்கள்.

இனி உள்ளே சென்று அன்னையை தரிசிப்போம். புன்சிரிப்போடு விளங்கும் தோற்றம். கிழக்குநோக்கி நின்ற திருக்கோலம். வலது திருக்கரத்தில் இலுப்பைப் பூ மாலை. இடது கை தொடையின் மீது வைத்து தவக் கோலத்தில் காட்சி தருகிறாள். அன்னையின் திருமுடி மீது விளங்கும் கிரீடத்தில், பிறைமதி சுடர்விட்டுப் பிரகாசிக்கிறது. அன்னையின் எழில் முகத்தை தரிசித்துவிட்டு வெளியே பிராகாரகங்களுக்கு வருவோம். உள் பிராகாரத்தின் தென் மேற்குக் கோடியில் ஒரு விநாயகர் சந்நதி உள்ளது.

ஆறு தூண்களால் அமைக்கப்பட்ட மணி மண்டபம் ஒன்றும் உள்ளது. அதன் முன்னே உள்ள மண்டபத்தை சபா மண்டபம் என்று சொல்கிறார்கள். இந்த உள் பிராகாரத்தை விட்டு வெளியே வந்தால் கொஞ்சம் விசாலமான வெளிப் பிராகாரம். அன்னை பகவதி, நாள்தோறும் இந்த பிராகாரத்தை வலம் வருவது கண் கொள்ளாக் காட்சி. ஊஞ்சல் மண்டபம் ஒன்றும் இந்தப் பிராகாரத்தில் அமைக்கப்பட்டிருக்கிறது.

திருமணமாகாத பெண்கள், திருமணத்தடை உள்ளவர்கள், ஜாதக தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு நடைபெறும் கன்னிகா பூஜையிலும், சுயம்வர பூஜையிலும் கலந்துகொண்டு அன்னையின் அருளைப் பெறலாம். எல்லாவற்றையும் பார்த்துவிட்டு வெளியே வந்ததும், நம்முடைய பார்வையை பக்கத்தில் உள்ள காந்தி மண்டபம் இழுக்கும். மகாத்மா காந்தியின் அஸ்தி 1948-ஆம் ஆண்டு பிப்ரவரி 12-ஆம் நாள் குமரி முனையில் கரைக்கப்பட்டது. அதன் நினைவாக மகாத்மா காந்தி, இந்தக் கன்னியாகுமரி மீது கொண்டிருந்த விருப்பத்தினால் நினைவு மண்டபம் கட்டப்பட்டுள்ளது. காந்தி பிறந்த நாளான அக்டோபர் இரண்டாம் தேதி, சூரியனின் கிரணங்கள் அஸ்தி கலசம் மேடையின்மீது விழும்வண்ணம் இம்மண்டபம் அமைக்கப்பட்டிருக்கிறது.

பக்கத்திலேயே காமராஜருக்கும் மணிமண்டபம் உள்ளது. கன்னியாகுமரியின் இன்னொரு முக்கியமான அம்சம் காலையிலும், மாலையிலும் கடலில் ஏற்படும் சூரிய உதய அஸ்தமனக் காட்சிகள். அதுவும் பவுர்ணமியில் இந்தக் காட்சி வெகு விசேஷம். அங்கே இரண்டு நிலாக்கள் பிரகாசித்துக்கொண்டிருக்கும். வானில் வான்நிலா பிரகாசிக்க, மண்ணில் நாம் நல்லவண்ணம் வாழ பகவதி அம்மனின் அருள்நிலா முகமும் பிரகாசித்துக் கொண்டிருக்கும். அந்த வான் நிலாவே இந்த நிலாவின் ஒளியில் தானே பிரகாசித்துக் கொண்டிருக்கிறது. ரம்மியமான இந்த நிகழ்ச்சியைக் காணவாவது, கன்னியாகுமரிக்கு ஒரு முறை செல்ல வேண்டும்.

முனைவர் ஸ்ரீராம்

Tags : Vedti ,
× RELATED காங். தலைவர் சோனியாகாந்தி பிறந்தநாள்...