×

நலம் தரும் நாராயணீய பாராயணம்!

சுமார் 450 ஆண்டுகளுக்கு முன், மேப்பத்தூர் என்ற ஊரில் பிறந்த நாராயணபட்டத்ரி அவர்களால் இயற்றப்பட்ட ஸ்லோகங்கள். ``ஸ்ரீநாராயணீயம்’’ என்ற அற்புதமான, அழகான தொகுப்பு. ஸ்ரீமத் பாகவத ஸாராம்சம் பட்டத்ரி, தனது தந்தையிடத்திலும், அச்சுத பிஷாரடி என்ற குருவிடத்திலும் தர்க்கம், விவாதம், வியாகரணம் போன்ற சாஸ்திரங்களைக் கற்றார்.

அச்சுத பிஷாரடி, வாத ரோகத்தால் பீடிக்கப்பட்டு மிகவும் துன்பப்படுவதை கண்ட பட்டத்ரி, குரு தட்சணையாக, அந்த வாதரோகத்தை முன்வந்து ஏற்றுக் கொண்டார். உடனே, வாத ரோகம் பட்டத்ரியைப் பீடித்து அதனால் மிகவும் அவதிப்பட்டார். பல சிகிச்சைகள் செய்தும் பலனில்லை. துஞ்சத்தெழுத்தச்சன் என்பவர் கவிஞர், பக்தர், ஜோசியர்.

அவர், பட்டத்ரியை குருவாயூருக்குச் சென்று “நாவிலே மச்சம் தொட்டு உண்” என்று பணித்தார். பல பேர்கள், மீனை உண்ணச் சொல்கிறார் என்று நினைத்திருப்பார்கள். ஆனால், பட்டத்ரிக்கு மச்சாவதாரம் தொடங்கி, பகவானை வர்ணிக்கச் சொல்கிறார் என்று புரிந்தது. உடனேயே, குருவாயூர் சென்று அங்குள்ள புண்யதீர்த்தத்தில் ஸ்நானம் செய்து, சந்நதியிலேயே அமர்ந்து, அவன் பெருமையைக் காவியமாக எழுத ஆரம்பித்தார்.

அந்தக் காவ்யமே “ஸ்ரீநாராயணீயம்”. மொத்தம் 1034 ஸ்லோகங்கள் உள்ளன. 100 தசகங்கள் கொண்டது. ஒவ்வொரு தசகத்திலும் 10 ஸ்லோகங்கள் உள்ளன. சில தசகங்களில் 10 ஸ்லோகங்களுக்கு மேல் உள்ளன. ஒவ்வொரு ஸ்லோகம் எழுதி முடித்ததும், “ஹே குருவாயூரப்பா, இவ்வாறு நடந்தது உண்மையா? என்று கேட்பாராம். குருவாயூரப்பன் “ஆம்” என்று தலையை ஆட்டினால்தான் அடுத்த ஸ்லோகம் எழுதுவாராம்.

ஒவ்வொரு ஸ்லோகத்தின் முடிவிலும், ‘‘ஹே கிருஷ்ணா! ஹே குருவாயூரப்பா! உனது மூர்த்திதான் எனக்குக் கதி, என்னை ரோகத்திலிருந்து காக்க வேண்டும்” என்ற வரிகளை நோக்கும்பொழுது, நாராயண பட்டத்ரி தன் ரோகத்தை மட்டுமின்றி பக்தர்கள் எல்லாருடைய ரோகங்களையும், போக்கவே பிரார்த்திருக்கிறார் என்று தெரிகிறது.

‘‘என்னுடைய ரோகத்தைப் போக்க வேண்டும் என்பதால் இதை படிப்போர் யாவருமே இப்படி உச்சரித்துத், தமது ரோகத்தையும் போக்கிக் கொள்ளவேண்டும் என்ற அவருடைய விசாலமான எண்ணம் தெரிய வருகிறது. இப்படி, எல்லா ஸ்லோகங்களுக்கும் யூகித்துக் கொள்ள வேண்டும். கலியுகத்தில் ஜன்மம் கடைத்தேற பக்தி மார்க்கம் ஒன்றே வழி. நாராயணீயத்தில் பக்தியே பிரதானம்.

ஆகையால், இதைப் படிக்கும்போது பகவத் தியானமே சிறந்த வழி, பகவானே சிறந்த புகலிடம் என்றும் தெரிய வருகிறது. இதை எழுதி முடித்ததும், அவருடைய வாதரோகம் நீங்கிவிட்டது. ஸ்ரீமந் நாராயணனின் திவ்ய சரிதத்தைக் கூறுவதாலும், நாராயணபட்டத்ரி என்பவர் இயற்றியதாலும், `நாராயணீயம்’ என்று பெயர் பெற்றது.

நாராயணீயம் படித்தாலோ, பாராயணம் செய்தாலோ, சிரவணம் செய்தாலோ ஐஸ்வர்யம் கூடும், கொடிய ரோகம் நிவர்த்தியடையும், கிரகபீடை நீங்கும். காலசர்ப தோஷ நிவர்த்தி, வாதரோக நிவர்த்தி, உத்யோக உயர்வு, சந்தான பாக்கியம், ஆயுள் விருத்தி, ஆரோக்யம் முதலியன கிடைக்கும். ராஸக்ரீடை, ருக்மிணி கல்யாணம், தசகங்களைப் படித்தால் ஆண், பெண் இருபாலருக்கும் தடை பட்ட விவாகம் கூடிவரும் என்று எத்தனையோ பலன்களைச் சொல்கிறது பல ஸ்ருதி.

தினமும் நாராயணீயம் ஒரு ஸ்லோகமாவது பாராயணம் செய்தால் நமது, பிரச்னைகள், இன்னல்கள், மன அழுத்தம் குறைந்து, நிம்மதியையும், நீண்ட ஆயுளையும், உடல் நலத்தையும் தரும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. அத்தகைய சிறப்பு பெற்ற ஸ்ரீநாராயணீய பாராயணம் பம்மல் சங்கர் நகர் ஸ்ரீதர்ம சாஸ்தா ஸ்ரீகுருவாயூரப்பன் ஆலயத்தில், வரும் செப்டம்பர் 10ம் தேதி ஸ்ரீமதி பிரியா அய்யப்பன், ஸ்ரீகிருஷ்ண சத்சங் சார்பில், அகண்ட ஸ்ரீமந் நாராயணீய பாராயண யக்ஞம், காலை 7.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை நடை பெறுகிறது.

பக்தர்கள் இந்த பாராயண யக்ஞயத்தில் கலந்து கொண்டு, நல்ல எண்ணங்கள் மற்றும் நீண்ட ஆயுள் ஆரோகியத்தையும், இறைவன் அருளையும் பெற வேண்டுகிறோம். அதோடு மடடுமல்லாமல் சுகங்கள் அனைத்தையும் பெற்று, பிறவா பெருவாழ்வாகிய மோட்சத்தை அடைய வேண்டும் என்று எல்லாம் வல்ல குருவாயூரப்பனைப் வேண்டுகிறோம்.

தொகுப்பு : குடந்தை நடேசன்

Tags :
× RELATED திருமண பந்தத்தை உறுதியாக்கும் நல்ல நேரம்